நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் கருத்தரங்கு
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக சென்னை பத்திரிகை தகவல் அலுவலகமும், மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலகமும் இணைந்து இணைய கருத்தரங்கு ஒன்றை நடத்தின.
இதில் சென்னை லயோலா கல்லூரிப் பேராசிரியர் பெர்னார்டு சுவாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் பெர்னார்ட் சுவாமி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதாக கூறினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி ஆற்றிய பணிகளையும், வரலாற்றையும் அவர் விவரித்தார்.
ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய நேதாஜி இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தது பற்றியும் அந்தக் கட்சியின் தலைவராக பணியாற்றியதையும் திரு பெர்னார்ட் விவரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிற்காக எட்டு மொழிகளில் வானொலி சேவையை ஜெர்மனியில் நேதாஜி அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார். இந்திய தேசிய ராணுவத்தை 1942-ஆம் ஆண்டு திரு மோகன் சிங் உடன் இணைந்து நேதாஜி உருவாக்கியதைக் குறிப்பிட்ட அவர், அந்தப் படையில் 4000-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் இணைந்ததாக தெரிவித்தார்.
முன்னதாக பத்திரிகை தகவல் அலுவலகததின் இயக்குநர் திரு குருபாபு பலராமன் தனது வரவேற்புரையில் நேதாஜியின் பிறந்த நாளை “பராக்ரம திவசாக” மத்திய அரசு கொண்டாடுகிறது என்று தெரிவித்தார். நிறைவாக, துணை இயக்குனர் திரு நதீம் துஃபைல் நன்றியுரை கூறினார்.
கருத்துகள்