புதுச்சேரியில் காங்கிரஸிலிருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கத்தைத் தொடர்ந்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எம்.எல்.ஏ பதவியும் ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்த அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், தனது ஆதரவாளர்களுடன் இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், "கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக சிறந்த முறையில் இரவு பகலாக செயல்பட்டதன் காரணமாக பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலிலில் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது.
பல்வேறு இடர்பாடுகளை தலைவர்கள் எனக்குக் கொடுத்தது தொடர்பாக கட்சித் தலைமைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவ்வப்போது அழைத்துப் பேசி சமாதானப்படுத்தினார்கள்.
கட்சி நிர்வாகிகளுக்கு பதவி கொடுக்கும் வகையில் 40 பேர் கொண்ட பட்டியலைத் தயாரித்து சோனியா காந்தியின் ஒப்புதல் பெற்றும் செயல்படுத்த முடியாத நிலையுள்ளது.
அரசு நிர்வாகத்தைச் சரியாக செயல்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையாலும், நம்பியுள்ள தொண்டர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்" எனக் குறிப்பிட்டு
சபாநாயகர் சிவக்கொழுந்திடம் அமைச்சர் நமச்சிவாயம் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். அதேபோல், நமச்சிவாயத்திற்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ தீப்பாய்ந்தானும் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் இப்போது இந்த ராஜினாமா பொதுமக்கள் மத்தியில் பேச்சாகிறது.
கருத்துகள்