18 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சுமார் 1000 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை தெற்கு ரயில்வே தமிழகத்திற்கு விநியோகம்
246.56 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் கேரளா சென்றடைந்தன 2 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
தெற்கு ரயில்வே, மே 14 முதல் 23-ஆம் தேதி வரை 18 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 1024.18 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயுவை தமிழகத்திற்கு விநியோகித்துள்ளது. இன்றுவரை தண்டையார்பேட்டையில் உள்ள உள்நாட்டு சரக்கு கிடங்கிற்கு 13 ரயில்களில் 785.87 மெட்ரிக் டன் பிராணவாயு கொண்டுவரப்பட்டுள்ளது. 48.78 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயுவை இரண்டு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மதுக்கரைக்கும், வாடிப்பட்டி (79.31 மெட்ரிக் டன்), மீளவிட்டான் (78.82 மெட்ரிக் டன்) மற்றும் திருவள்ளூருக்கு (31.4 மெட்ரிக் டன்) தலா ஒரு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலும் பிராணவாயுவைக் கொண்டு சென்றுள்ளன.
2 டேங்கர்களில் 30.5 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவுடன் 19ஆவது ரயிலும், 2 டேங்கர்களில் 43.05 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 20-வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலும் ரூர்கேலாவிலிருந்து புறப்பட்டு தமிழகம் வந்து கொண்டிருக்கின்றன.
கேரளாவிற்கான ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்:
கேரளாவிற்கு, 6 மருத்துவ கொள்கலன்களுடன் (117.9 மெட்ரிக் டன்) முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் கலிங்காநகரில் உள்ள டாட்டா ஸ்டீல் சைடிங்கிலிருந்து கொச்சியில் உள்ள வல்லர்பாடம் சரக்கு கிடங்கிற்கு மே 16 அன்று வந்தடைந்தது. 7 டேங்கர்களில் 128.66 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மே 22 அன்று வல்லர்பாடம் சரக்கு கிடங்கை வந்தடைந்தது. இதன் மூலம் 2 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 246.56 மெட்ரிக் டன் பிராணவாயு கேரளாவிற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே, இதுவரை 997 டேங்கர்களில் 16023 மெட்ரிக் டன் பிராணவாயுவை பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்துள்ளது. இதுவரை 247 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 50 டேங்கர்களில் 920 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 12 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு நாளில் மிக அதிகமாக 1142 மெட்ரிக் டன் பிராணவாயு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இதற்கு முன்பாக கடந்த 20-ஆம் தேதி 1118 மெட்ரிக் டன் பிராண வாயு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் விநியோகம் செய்யப்பட்டது.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில், தமிழகமும், கர்நாடகாவும் தலா 1000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவைப் பெற்றுள்ளன.
இதுவரை தமிழகத்திற்கு 1024.18 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 246.56 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு சுமார் 3649 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 633 மெட்ரிக் டன், தில்லிக்கு 4600 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 1759 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 1063 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 730 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 976 மெட்ரிக் டன், அசாமிற்கு 80 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவல், சென்னை தெற்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி திரு பி கு கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்