“கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொவிட் விழிப்புணர்வு நடவடிக்கைகள் & தடுப்புமருந்து வழங்கல் & உலக மக்கள்தொகை தினம்-2021” குறித்த இணைய கருத்தரங்கம்
“கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொவிட் விழிப்புணர்வு நடவடிக்கைகள் & தடுப்புமருந்து வழங்கல் & உலக மக்கள்தொகை தினம்-2021” குறித்த இணைய கருத்தரங்கை பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னையுடன் இணைந்து கள விளம்பர அலுவலகம், கோயம்புத்தூர், 2021 ஜூலை 9 பிற்பகல் நடத்தியது.
கலந்து கொண்ட அனைவரையும் திரு டி நதீம் துஃபைல், துணை இயக்குநர், பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை, வரவேற்றார். கொவிட்-19 மூன்றாம் அலை குறித்த அச்சம் நிலவும் போது கொவிட் விழிப்புணர்வு குறித்த இணைய கருத்தரங்கு நன்மை பயக்கும் என்று அவர் கூறினார்.
அறிமுகவுரையாற்றிய திரு ஜெ காமராஜ், இயக்குநர், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், சென்னை, முந்தையவற்றை விட டெல்டா வகை கொரோனா வேகமாக பரவக்கூடியது என்பதால் வெளியே செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கும் படி மக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினார். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய தடுப்பு மருந்து, வைரசுக்கு எதிரான சிறப்பான பாதுகாப்பை அளிக்கும் என்பதால், அனைத்து வயது பிரிவினருக்கும் மத்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாக கிடைக்க செய்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இணைய கருத்தரங்கின் மையக்கரு குறித்து பேசிய திரு ராமதுரைமுருகன், மாவட்ட வருவாய் அலுவலர், கோயம்புத்தூர், பெருந்தொற்றை எதிர்கொள்வதில் காவல் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மாவட்ட வருவாய் அலுவலகங்களுக்கிடையே முழு ஒத்துழைப்பு நிலவுவதாக கூறினார்.
முதல் அலையின் போது படுக்கைகளுக்கான தேவை அதிகமாக இல்லை, ஆனால் இரண்டாம் அலையின் போது அவசரகாலம் போன்ற நிலைமை ஏற்பட்டாலும், அது நன்றாக எதிர்கொள்ளப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் ஆலைகள் தொடங்கப்பட்டன. அலையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும், கொவிட்-19 மூன்றாவது அலையை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்தரங்கில் உரையாற்றிய டாக்டர் நேமிநாதன், நிர்வாக இயக்குநர், கோயம்புத்தூர் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, நேர்மறை எண்ணத்தோடும், அமைதியாகவும் மக்கள் இருக்க வேண்டும் என்றும், அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார். குழந்தைகளிடையே காணப்படும் பொதுவான அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், தொண்டை கரகரப்பு, சோர்வு, தலைவலி, உடல்வலி, சரியாக உண்ணாமை மற்றும் வயிற்று வலி ஆகியவற்றை கண்காணிக்குமாறு கேட்டுக்கொண்டார். அத்தகைய குழந்தைகளை மருத்துவரிடம் விரைந்து அழைத்து செல்ல வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம் என்றும், தொடர்ந்து பாலூட்டலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.
கோயம்புத்தூரில் உள்ள சுகாதார சேவைகள் துணை இயக்குநர் அலுவலகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தேசிய சுகாதார இயக்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வெங்கடேசன் கூறினார். மாவட்ட ஆட்சி தலைவரின் தலைமையின் கீழ் 24*7 கொவிட் கட்டுப்பாட்டு அறை சுகாதார துறையால் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், கொவிட்-19-ஐ எதிர்த்து போராடுவதற்காக அனைத்து வசதிகளும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டம், கோயம்புத்தூரின் குழந்தைகள் மேம்பாடு திட்ட அலுவலர் திருமதி ரூபா, கோயம்புத்தூரில் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். கொவிட் விழிப்புணர்வு குறித்த இணைய கருத்தரங்கை ஏற்பாடு செய்ததற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
திருமதி கரீனா பி தெங்கமம், துணை இயக்குநர், கள விளம்பர அலுவலகம், கோயம்புத்தூர், நன்றியுரை ஆற்றி இணைய கருத்தரங்கை நிறைவு செய்தார்.
சுமார் 300 நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இணைய கருத்தரங்கில் பங்கேற்றனர். 200-க்கும் மேற்பட்டோர் யூடியூப் நேரலையில் கண்டனர்.
கேள்வி & பதில் மற்றும் பின்னூட்டமும் இணைய கருத்தரங்கின் அங்கங்களாக இருந்தன.
கலந்து கொண்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதிகம் பேரை சென்றடைவதற்காக மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், தமிழ்நாடு & புதுச்சேரியின் யூடியூப் அலைவரிசையிலும் இணைய கருத்தரங்கு நேரலை செய்யப்பட்டது.
கருத்துகள்