சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் கிரீமி லேயருக்கு ஒரே மாதிரியான விதிமுறை : மாநிலங்களவையில் தகவல்
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரில்(ஓபிசி) வசதியானவர்களுக்கான (க்ரீமிலேயர்) விதிமுறை, மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியாக உள்ளது என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர்கள் சுஷ்ரி பிரதிமா பவுமிக், திரு ஏ. நாராயணசாமி ஆகியோர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
ஓபிசி பிரிவுக்கான க்ரீமி லேயர் விதிமுறை:
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரில்(ஓபிசி) வசதியானவர்களுக்கான (க்ரீமி லேயர்) விதிமுறை, மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியாக உள்ளது.
இது தொடர்பாக எந்த விசாரணை விவரங்களும் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தால் (என்சிபிசி) வழங்கப்படவில்லை.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கார்பரேஷனுக்கு வழங்கப்பட்ட நிதி:
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கார்பரேஷனுக்கு கடந்த 2018-19ம் ஆண்டில் ரூ.100 கோடியும், 2019-2020ம் ஆண்டில் ரூ.130 கோடியும், 2020-21ம் ஆண்டில் ரூ. 55.40 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
திருநங்கைகளுக்கான விரிவான திட்டம்:
திருநங்கைகளுக்கு, விரிவான மறுவாழ்வு அளிக்கும் வகையில், பின்தங்கிய தனிநபர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் தொழில் உதவி திட்டத்துக்கு (Support for Marginalised Individuals for Livelihood and Enterprise (SMILE) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டபின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
திருநங்கைகளின் மேம்பாடு:
திருநங்கைகளுக்கான தேசிய இணையதளம் 2020 நவம்பர் 25ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் திருநங்கைகள் விண்ணப்பித்து, நேரடி தொடர்பு இல்லாமல் அடையாள சான்றிதழை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். திருநங்கைளின் பாதுகாப்புக்காக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தில்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ‘கரீமா கிரஹ்’ என்ற பெயரில் பாதுகாப்பு இல்லங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் அடிப்படை வசதிகள், உணவு, மருத்துவ வசதி, பொழுது போக்கு வசதி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
சமூக திட்டங்களுக்கான தணிக்கை:
2021-22ம் ஆண்டில் தகவல்-கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் சமூக தணிக்கை (I-MESA) என்ற திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இத்துறையின் அனைத்து திட்டங்களும், இந்த நிதியாண்டில் தணிக்கை செய்யப்படும். மாநிலங்களின் சமூக தணிக்கை பிரிவுகள், மற்றும் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய மையம் மூலம் இந்த சமூக தணிக்கைகள் செய்யப்படுகின்றன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு பட்டியலிடும் உரிமை
அரசியல் சாசன (102வது) திருத்த சட்டம், 342-ஏ பிரிவை இந்திய அரசியல் சாசனத்தில் சேர்த்துள்ளது. இது சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய பிரிவினர் (SEBCs - பொதுவாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் -ஓபிசி) தொடர்புடையது. இந்தப் பிரிவு, ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் தொடர்பான சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மத்தியப் பட்டியலை குறிப்பிட குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும், இந்த ஓபிசி மத்திய பட்டியலில் எந்த மாற்றமும், நாடாளுமன்றத்தால் மட்டுமே மேற்கொள்ள முடியும். தங்களின் ஓபிசி பட்டியலை வெளியிட மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை. இதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த மே 5ம் தேதி பிறப்பித்தது.
ஓபிசி பட்டியலை தீர்மானிப்பதில் மாநிலங்களின் அதிகாரத்தை காப்பதற்கான வழிகள் குறித்து சட்ட நிபுணர்கள், சட்ட அமைச்சகத்துடன் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.பிரதமர் அலுவலகம்
மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவிற்கு பிரதமர் பாராட்டு
நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ/ பல்மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் மைல்கல் முடிவை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
தொடர் சுட்டுரைச் செய்திகளில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ/ பல் மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மைல்கல் முடிவை நமது அரசு எடுத்துள்ளது.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆண்டுதோறும் சிறந்த வாய்ப்புகளைப் பெறவும், நம் நாட்டில் சமூக நீதிக்கான புதிய முன்னுதாரணத்தை உருவாக்கவும் இது பெருமளவு உதவிகரமாக இருக்கும்.”உள்துறை அமைச்சகம்
மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான திரு மோடி அரசின் முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வரவேற்பு
மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் முடிவை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வரவேற்றுள்ளார்.
இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு அமித் ஷா, “மருத்துவக் கல்வித் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை (முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம்) படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு 27 சதவீதமும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நான் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
“இந்த நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றியதன் மூலம், பிற்படுத்தப்பட்டப் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோரின் நலனுக்கான அரசின் உறுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி வெளிப்படுத்தியுள்ளார். திரு மோடி அரசின் இந்த முடிவின் மூலம் சுமார் 5,500 மாணவர்கள் பலனடைவார்கள்,” என்று மத்திய உள்துறை அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டுடன், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடும், நடப்பு 2021-22 கல்வி ஆண்டில் இருந்து அனைத்து இளநிலை/முதுநிலை மருத்துவ/பல் மருத்துவ படிப்புகளுக்கும் அகில இந்திய பிரிவில் நீட்டிக்கப்படுகிறது. மருத்துவ கல்விக்கான OBC இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கருத்து:
இதற்காக தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் , நீதிமன்றத்திலும் போராட்டம் நடத்திய அனைவருக்கும் கிடைத்த வெற்றி இது.
இதை வலியுறுத்தி 28-11-2019 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய உரை
அகில இந்திய மருத்துவ உயர் கல்விக்கான நீட் தேர்விற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது. அந்த அறிவிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருகான இட ஒதுக்கீடு மட்டும் இல்லை. அதாவது மத்திய அரசினுடைய கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கான இட ஒதுக்கீடு உள்ளது; மாநிலங்களின் கல்லூரியிலிருந்து பெறுகிற இடங்களுக்கு ஒ.பி.சி.க்காண இடமில்லை என்று அந்த அறிவிப்பு கூறுகிறது. இது மிகப் பெரிய அதிர்ச்சியை உண்டாக்குகிறது. நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பிரிவில் ஏறக்குறைய மூவாயிரத்து எண்ணூறு மாணவர்கள் இருக்கிறார்கள். இதில் மிக அதிகம் பாதிக்கப்படுவது தமிழகம். ஏனென்றால் தமிழகத்தில் தான் மிக அதிகமான மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய எண்ணிக்கை மிக அதிகம் இருக்கும் ஒரு மாநிலம். தமிழக அரசினுடைய இட ஒதுக்கீட்டில் ஐம்பது சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இன்றைக்கு தமிழகத்திலே அமலிலே இருக்கிறது.
இதை மாநில அரசு மத்திய தொகுப்புக்கு கொடுப்பதன் மூலம் இருபத்தி மூன்று சதவீதத்தை நாங்கள் இழக்கிறோம் ஏனென்றால் இருபத்தி ஏழு சதவீதம் தான் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. இப்பொழுது அந்த இருபத்தி ஏழு சதவீதமும் இல்லையென்றால் ஏறக்குறைய ஐம்பது சதவீதத்தையும் அதாவது முழு முற்றாக இட ஒதுக்கீட்டையும் ஒ.பி.சி பிரிவினர் இழக்கிற மாநிலமாக தமிழகம் மாறிவிடும்.
இந்த அறிவிப்புக்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தபின்னும் இப்பொழுது வரை மத்திய அரசு மெளனம் சாதிக்கிறது.
இது மிகப்பெரிய ஆபத்தின் முன்னுதாரணம் ஆகும்.
சமமற்றவர்களை சமமாக நடத்தக்கூடாது என்பது தான் இட ஒதுக்கீட்டின் சாரம். சமூக ரீதியாக, கல்வி ரீதியாக சமமற்றவர்களை சமமாக நடத்தக்கூடாது என்று அரசியல் சாசனம் சொல்கிறது.
அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் இந்த உரிமையை மறுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால் மத்திய அரசின் ஒரு துறை இதனை மறுக்கிறது. அதனை மத்திய அரசு கள்ளத்தனமாக அனுமதிக்கிறது என்றால். இந்த அரசின் செயல் ஆழ்ந்த சந்தேகத்தை உருவாக்குவதாக இருக்கிறது.
இட ஒதுக்கீட்டையே முற்றிலுமாக ஒழித்துக்கும் கட்டும் முயற்சியின் துவக்கமாக இது இருக்குமோ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்.
மத்திய அரசு உடனடியாக இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
இது அரசியல் சாசன சட்டத்துக்கும், மண்டல் கமிஷன் உடைய அறிக்கைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமானது. பிற்படுத்தப்பட்ட மக்களின் மீதான இந்த இரக்கமற்ற தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்மந்தப்பட்ட துறையினுடைய இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பதை நான் இந்த அவையிலே வலியுறுத்துகிறேன் என் தனது கருத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவ இடங்களில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு
பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி..
அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) நடப்பாண்டு முதல் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குறிப்பாக தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்து வந்தன.
பட்டியலின (SC) , பழங்குடியின (ST), பிற்படுத்தப்பட்ட (OBC) மற்றும் பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றம், மாநில, மத்திய அமைச்சரவைகளில் உரிய இடங்களை வழங்கி உண்மையிலேயே சமூக நீதியை நிலைநாட்டி வரும் இயக்கம் பாஜக மட்டுமே. கடந்த 7-ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 12 பேர், பழங்குடியினர் 8 பேர், பெண்கள் 11 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாய்ப்பளித்திருப்பதே இதற்கு சாட்சி.
மருத்துவப் படிப்புகளில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோி உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் கடந்த 2020-ல் பதில் மனு தாக்கல் செய்த மத்திய பாஜக அரசு, “மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் மத்திய பாஜக அரசு உறுதியாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான தரவுகளை சேகரித்து அது தொடர்பாக முடிவெடுக்க ஓராண்டு கால அவகாசம் தேவை" என்று கூறியிருந்தது.
அதன்படி தற்போது அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவக் கல்வி இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து பிரதமராக வந்துள்ள திரு. நரேந்திர மோடி, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் உணர்வுகளை மட்டுமல்ல, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரச்சினைகளையும், துன்பங்களையும் புரிந்து கொண்டு வந்து இட ஒதுககீட்டில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.
இதன்மூலம் இளநிலை, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் 5,500-க்கும் அதிகமான OBC, EWS 5பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்திய சமூக நீதி வரலாற்றில் இது மாபெரும் புரட்சியாகும். இந்நாள் வரலாற்றின் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். இந்த நடவடிக்கை மூலம் சமூக நீதியை நிலைநாட்டியுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், பாஜக தேசிய மகளிரணி சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என
பாஜக மகளிரணி தேசியத் தலைவரும்
கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசன் கருத்தாகும்.
கருத்துகள்