ஜல்சக்தி அமைச்சகம் கர்நாடகாவில் ஜல் ஜீவன் இயக்கத்தின் செயல்பாடு: மத்திய ஜல் சக்தி அமைச்சர் மற்றும் கர்நாடக முதல்வர் ஆய்வு
மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கர்நாடக முதலமைச்சர் திரு பி எஸ் எடியூரப்பா ஆகியோர் அம்மாநிலத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து பெங்களூருவில் இன்று ஆய்வு செய்தனர். கர்நாடகாவில் ஜல் ஜீவன் இயக்கத்தின் பணிகளைத் துரிதப்படுத்தவும், மீதமுள்ள 61.05 லட்சம் வீடுகளுக்கு 2023-ம் ஆண்டுக்குள் தண்ணீர் குழாய் இணைப்புகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று வருகை புரிந்திருந்த மத்திய அமைச்சரிடம் அம்மாநில முதலமைச்சர் உறுதியளித்தார். இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று ஜல் சக்தி அமைச்சர் உறுதிபட தெரிவித்தார். 2024-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் தூய்மையான தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஜல் ஜீவன் இயக்கத்தின் திட்டம் மற்றும் செயல்பாடுகள் பற்றி தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் திட்ட இயக்குநர் திரு பரத் லால் கூட்டத்தின்போது விரிவாக எடுத்துரைத்தார். அதன் பிறகு, முதன்மைச் செயலாளர் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகளுடன் இந்தத் திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பாக விரிவான ஆய்வுக் கூட்டத்தை அவர் நடத்தினார்.
ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்ட போது கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 91.19 லட்சம் வீடுகளில் வெறும் 24.51 லட்சம் வீடுகள் (26.88%) மட்டுமே தண்ணீர் குழாய் இணைப்புகளைப் பெற்றிருந்தன. 22 மாதங்களில் 5.62 லட்சம் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தற்போது 30.14 லட்சம் (33.05%) ஊரக வீடுகளுக்கு தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
2021-22-ஆம் ஆண்டில் 25.17 லட்சம் வீடுகளுக்கு இணைப்புகளை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் 17.93 லட்சம் இணைப்புகளும், 2023-24 ஆம் ஆண்டில் 19.93 லட்சம் இணைப்புகளும் வழங்கப்பட உள்ளன.
அந்த மாநிலத்தில் குடிநீர் குழாய் இணைப்பை ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்குவதற்கு ஏதுவாக கடந்த ஆண்டின் மத்திய ஒதுக்கீட்டை விட 4 மடங்கு அதிகமாக ரூ. 5008.79 கோடியை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஒதுக்கீடு செய்துள்ளார்.
கருத்துகள்