மதுரை மண்டல மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம்
திருப்பரங்குன்றத்திலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றதில் வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில் கடந்து போன அதிமுக ஆட்சியில் 9 மாத காலம் மின்பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை. அதனால் தற்போது 10 நாட்களில் செய்து முடித்துள்ளோம். கிராமங்களில் புதிதாக மின் இணைப்பு பெறுபவர்களுக்கு மின் கம்பம் மின் மாற்றியை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய செலவு தொகையை மின்நுகர்வோரிடம் பெறும் நிலை மாற்றப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மின் கணக்கீட்டிற்கான மீட்டர் ஸ்மார்ட் இருக்க வேண்டும் என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் இலக்காகும். மின் உற்பத்திக்கும் மின் விநியோகத்திற்கும் இடைவெளி அதிகம் பல்லாயிரம் கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு இழப்பு வந்துள்ளது.
மின் கணக்கீட்டு இழப்பைச் சரி செய்ய மின் கணக்கீடு செய்யும் முறை ஸ்மார்ட் மீட்டர் முறையாக மாற்றம் செய்யப்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக மின்வாரியத்தில் இழப்பை சரி செய்ய விரைவில் ஆய்வு செய்து சீர்திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மின்வாரியம் பெற்றுள்ள 1.59 லட்சம் கோடி கடனுக்கு 9.6 சதவீதம் வட்டி என ரூ 15 ஆயிரம் கோடி ஆண்டுக்கு செலுத்தப்படுகிற நிலையில் தற்போது மின்வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையால் வட்டித் தொகையில் ரூ 2 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
மின் கணக்கீட்டிற்கு இனி ஸ்மார்ட் மீட்டர்; இழப்புகளை ஈடுகட்ட நடவடிக்கை:
தமிழகம் முழுவதும் மின் கணக்கீட்டிற்கான மீட்டரை ஸ்மார்ட் மீட்டராக மாற்ற முடிவு செய்துள்ளோம். உற்பத்தியாகக் கூடிய மின்சாரத்திற்கும், விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கும் இடைவெளி மிக அதிகமாக உள்ளது. இதனால், மின்வாரியத்திற்கு ரூ.900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதை சரி செய்வதற்கு ஸ்மார்ட் மீட்டர்தான் சரியாக இருக்கும். வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வணிகத்திற்கும் தனித்தனி மீட்டர் உள்ளது. விவசாயத்திற்கு மட்டும் மீட்டர் இல்லாமல் உள்ளது. கிராமப்புறங்களில் புதிய மின் இணைப்பு, மின்மாற்றிகள் மாற்றவும், ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கு அமைக்கப்படும் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் அமைப்பதற்கான செலவினங்களை மின்வாரியத்தால் செய்ய முடியாதநிலை ஏற்பட்டது.
அதை பொதுமக்களிடமே மின்வாரியம் இதுவரை வசூலித்து வந்தது. அதை மாற்றி, இதுபோன்ற பணிகளுக்காக ஒரு பைசா கூட பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடாது அந்த செலவினங்களை மின்வாரியமே ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது
கருத்துகள்