எரிசக்தி அமைச்சகம் நாட்டின் மிகப்பெரிய மிதவை சூரிய சக்தி ஒளிமின்னழுத்தத் திட்டம்: ஆந்திரப் பிரதேசத்தில் தொடக்கம்
தேசிய அனல்மின் கழகம், 25 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய மிதவை சூரிய சக்தி ஒளிமின்னழுத்தத் திட்டத்தை ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள அதன் சிம்ஹாத்ரி அனல்மின் நிலையத்தின் நீர்த்தேக்கத்தில் உருவாக்கியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட நெகிழ்வுத்தன்மை திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள முதல் சூரியசக்தி திட்டமாகவும் இது அமைந்துள்ளது.
தேசிய அனல்மின் கழகத்தின் மண்டல நிர்வாக இயக்குநர் திரு சஞ்சய் மதன் இந்தத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
மிதவை சூரிய சக்தித் திட்டம், நீர்த்தேக்கத்தில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான சூரியசக்தி ஒளிமின்னழுத்த கலங்களிலிருந்து மின்சாரத்தை உருவாக்கும் திறனை இந்தத் திட்டம் பெற்றுள்ளது. சுமார் 7,000 வீடுகளுக்கு ஒளியூட்டுவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 46,000 டன் கரியமில வாயுவின் பயன்பாட்டையும் இந்தத் திட்டம் குறைக்கும். மேலும் இதன் மூலம் ஆண்டிற்கு 1,364 மில்லியன் லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 6700 வீடுகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.
சிம்ஹாத்ரியில் ஹைட்ரஜன் அடிப்படையிலான குறுந்தொகுப்பு முறையை சோதனை அடிப்படையில் தொடங்கவும் தேசிய அனல் மின் கழகம் திட்டமிட்டுள்ளது.
கருத்துகள்