மக்களுக்கான சேவைகளை தரமான முறையில் குறித்த நேரத்தில் வழங்குவதை மேம்படுத்த குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் மக்களுக்கான சேவைகளை தரமான முறையில் குறித்த நேரத்தில் வழங்குவதை மேம்படுத்த குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
மக்களுக்கான சேவைகள் தரமான முறையில் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை மேம்படுத்த வேண்டும் என்றும், அவற்றுக்கான அணுகல் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார்.
சேவை வழங்கலில் ஏற்கனவே உள்ள முறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், சிறந்து செயல்படும் மாவட்டங்களின் நல்ல செயல்முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அரசு திட்டங்களின் முக்கிய அங்கமாக சேவை வழங்கல் விளங்குவதாகக் கூறிய திரு நாயுடு, “சேவைகள் தாமதமாகாமல் நீர்த்துப் போகாமல் மக்களை சென்றடையாவிடில் சீர்திருத்தங்களுக்கு அர்த்தமில்லை,” என்றார்.
இந்தியாவில் ஆளுகை முறையை மாற்றியமைக்கும் பயணத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக நேரடி பலன் பரிவர்த்தனை முறை திகழ்வதாக அவர் குறிப்பிட்டார். அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பேசிய திரு நாயுடு, வளர்ச்சி திட்டங்களின் பலன்கள் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்களை, சென்றடைய வேண்டும் என்று அவர் கூறினார்.
2024-ம் ஆண்டுக்குள் 20 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் லட்சியமிக்க இலக்குக்காக அரசுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
‘இந்தியாவை முன்னேற்றுதல்: மோடி அரசின் 7 ஆண்டுகள்’ எனும் புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் வெளியிட்ட திரு நாயுடு, நாடு தனது 75-வது ஆண்டு விடுதலையைக் கொண்டாடி வரும் வேளையில், சாதாரண மனிதனுக்கு கண்ணியமிக்க வாழ்வை வழங்கும் அரசமைப்பு வாக்குறுதியின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான நேரமும் இது தான் என்றார்.
எந்தவொரு தனிநபர் மற்றும் சமூகத்திற்கு எதிரான பாகுபாடும் இல்லாமல் கண்ணியத்துடன் கூடிய வாழ்வை வழங்குவது தான் குடியரசின் தொடக்கதில் நமக்கு நாமே ஏற்றுக்கொண்ட உறுதிமொழி என்றும், எல்லா காலத்திலும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கேரள ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான், வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர் திரு வி முரளிதரன், திறன் வளர்த்தல், தொழில் முனைதல் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் இணை அமைச்சர் திரு ராஜிவ் சந்திரசேகர், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் காந்த், நாடாளுமன்ற உறுப்பினர் திரு கே ஜே அல்போன்ஸ், ஓக்பிரிட்ஜ் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் திரு விகேஷ் தியானி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனார்.
கருத்துகள்