கவிஞரும், தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவருமான புலவர் புலமைப்பித்தன் (வயது 86) முதுமை உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.
தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராக, அரசவைக் கவிஞராக அஇஅதிமுக வின் அவைத்தலைவரகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர் .
சமீபத்தில் சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
இராமசாமியான புலவர் புலமைப்பித்தன் சென்னை சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
மரபுக்கவிதைகளில் தோய்ந்த கவிஞர் குடியிருந்த கோயில் திரைப்படத்தில் ''நான் யார நான் யார்'' பாடலின் மூலம் எம்ஜிஆரின் அபிமானத்தைப் பெற்றபின் அடிமைப் பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா.. போன்ற பாடல்களையும் எழுதித் தொடர்ந்து புகழ் பெற்றார்.
இதயக்கனி திரைப்படத்தில் நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற என்ற பாடலை எழுதியவரும் இவரே. சிரித்து வாழ வேண்டும், ஓடி ஓடி உழைக்கணும் உள்ளிட்ட இவர் எழுதிய ஏராளமான சமூக அக்கறையுள்ள பாடல்கள் தமிழ்நாட்டின் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பெற்றது.
உன்னால் முடியும் தம்பி படத்தில் புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பாடல் கமல்ஹாசனுக்கும் எழுதியுள்ளார்.
நாயகன் படத்தில் இடம்பெற்றுள்ள தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே பாடலும் சிவக்குமாரின் 100-வது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் ' உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி போன்ற பாடல்களையும் எழுதியுள்ளார். சமீபத்தில் வடிவேலு நடித்த எலி (2015) படத்தில் தனது கடைசிபாடலை எழுதினார்.
தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜிஆர், ஜெ.ஜெயலலிதாவுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்ததன் காரணமாக பல அரசியல் பதவிகள் வகித்தவர். புலவர் புலமைப்பித்தன்.
மருத்துவமனைக்கு வந்த சசிகலா, புலமைப்பித்தனின் உடல்நிலை குறித்து மருத்துவர் சஞ்சீவ் அகர்வாலிடமும், புலமைப்பித்தனின் பேரன் திலீபனிடமும் விசாரித்தார். இன்று காலை அவர் உயிரிழந்தார். "அமுதே! தமிழே!
அழகிய மொழியே!
எனதுயிரே!.......
சுகம் பல தரும் தமிழ்ப் பா!
சுவையுடன் கவிதைகள் தா!"......
செம்மொழித் தமிழை...
அதன்
செம்மாந்த அழகை...
சுகமாக... சுவையாக
திரையிசைப் பாடல்களில் வடித்த
புலவர் புலமைப்பித்தனின் மறைவு
பைந்தமிழின் பேரிழப்பு.
பாட்டுலகின் பரிதவிப்புத் தான் கொங்குப் பகுதியில் பிறந்த புலவர் புலமைப்பித்தன் பாஞ்சாலைத் தொழிலாளியாக வேலை பார்த்துக் கொண்டே தமிழ் புலவருக்கு பி.லிட் படித்தவர். 1948 ஆம் ஆண்டிலேயே கவிதை எழுதத் தொடங்கியவர். பள்ளியின் தமிழாசிரியராக வேலை பார்க்கும் போது கோயமுத்தூர் ஒண்டிப்புதூரில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் இவரது பேச்சைக் கேட்டு மெய்மறந்து போன பழம்பெரும் இயக்குனர் கே.சங்கர் சென்னைக்கு வரச் சொல்ல. 1968 ஆம் ஆண்டில் குடியிருந்த கோயில் படத்தின் ஒரு சிக்கலான சூழலுக்கு எந்தகீ கவிஞர் எழுதிய பாடலும் பொருந்தாமல் போகவே புலவர் புலமைப் பித்தனை எழுத வைத்தார் இயக்குனர் கே.சங்கர்.
அந்தப் பாடல் தான்,
நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவன் யார், யார்?
தத்துவப் பாடல்!
அதன் பிறகு தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் வாய்ப்புப் பெற்றார்! திராவிட அரசியல் இயக்கமான அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து அந்த கட்சியில் யாருமே பேசத் துணிவில்லாத நிலையில் புலவர் புலமைப்பித்தன் மிகத் துணிச்சலாக இந்த இரட்டைத் தலைமையை கண்டித்தார்!
”ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையிலும் கட்சி கட்டுக் கோப்பாக இருந்து வந்தது. ‘மோடியா இந்த லேடியா… என்று பேசுகிற அளவுக்கு துணிச்சல் மிக்கவராக இருந்தார் அவர். ஆனால், இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் என இவர்கள் இருவரும் இன்றைக்கு அ.தி.மு.க-வை ‘தமிழக பா.ஜ.க-வாக மாற்றிவிட்டார்கள். ஒரு மதவாதக் கட்சிக்கு ஈடாக அ.தி.மு.க-வை கொண்டு வந்து நிறுத்தியதை, என்னால் கொள்கை ரீதியாக ஒத்துப்போகவே முடியாது!” என்றார்
இப்படி தன்னுடைய துறையிலாகட்டும், தான் சார்ந்த கட்சியிலாகட்டும் தவறு என ஒன்றைக் கண்டால் சுட்டிக் காட்டவும், தட்டிக் கேட்கவும் தயங்காதவராக புலமைப்பித்தன் இருந்தார். சங்கத் தமிழ் சந்தத் தமிழாக அவரிடம் வெளிப்பட்டது. திரைபாடல்களில் இலக்கிய நயத்தை பொழிந்தவர்! டப்பாங்குத்துப் பாடல்களோ, முகம் சுழிக்க வைக்கும் ஆபாச வரிகளோ இவர் திரைத் கவிதை நடையில் தமிழில் பார்க்கவே முடியாது. நான் அறிந்த வரை இவர் பக்திபாடல்களை எழுதியதாகவும் தெரியவில்லை. சினிமாவுக்கு பூஜை போடும் நிகழ்வில் கூட இவரிடம் யாரும் தீபாரதனை தட்டைக் காட்டமுடியாதபடி அவரது கொள்கைகளை தவறாது பின்பற்றி வந்தார்.
கருத்துகள்