தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நமது தொழில்நுட்பவியலாளர்களின் படைப்புத்திறனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; பிரிக்ஸ் நாடுகளில் உள்ள ஒவ்வொரு குடிமகனிடமும் நாட்டை கட்டமைப்பதற்கான உணர்வை ஏற்படுத்த வேண்டும்: திரு அனுராக் சிங் தாகூர்
ஆசியாவின் முக்கிய சக்தியாக இந்தியா விளங்குவதாக கூறிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர், பிரிக்ஸ் கூட்டமைப்பின் உறுப்பினராக உறுப்பு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவதில் நாம் முக்கிய பங்காற்ற விரும்புகிறோம் என்று கூறினார்.
“அனைத்து உறுப்பு நாடுகளின் மக்களை ஒன்றிணைக்கும் பயணத்தில் முக்கிய நடவடிக்கையாக முதலாவது பிரிக்ஸ் திரைப்பட தொழில்நுட்ப கருத்தரங்கை நடத்துவது அமைந்துள்ளது. திரைப்படம், கலை மற்றும் கலாச்சார ஊடகங்களின் வாயிலாக, கூட்டுறவுக்கான வாயில்களை நாம் திறந்து வைத்திருக்கிறோம். இதன் மூலம் திரைப்பட தொழிலின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவு கிடைக்கும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ‘பிரிக்ஸ் திரைப்பட தொழில்நுட்ப கருத்தரங்கின்’ காணொலி தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி திட்டமிடப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியான முதலாவது பிரிக்ஸ் திரைப்பட தொழில்நுட்ப கருத்தரங்கை நடத்துவதில் இந்தியா பெருமை கொள்கிறது,” என்று கூறினார்.
இந்தியாவின் தலைமையின் கீழ், பிரிக்ஸ் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தி, நிலைக்க செய்து, அமைப்புரீதியானதாக ஆக்குவதற்கான கட்டமைத்தலை ஊக்குவிக்க நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து பிரிக்ஸ் நாடுகளின் மக்களின் இதயங்களை வெல்வது முக்கியம் என்று கூறிய அவர், திரைப்பட கருத்தரங்கு அனைவரையும் ஒன்றிணைப்பதாக தெரிவித்தார். “பிரிக்ஸ் நாடுகள் இந்தியாவில் திரைப்பட தொழில்நுட்பத்தை கொண்டாடும் யோசனை பிரேசிலில் நடைபெற்ற 11-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மாண்புமிகு இந்திய பிரதமரால் முன்வைக்கப்பட்டது,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வ சந்திரா பேசுகையில், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பின்னணிகளை சேர்ந்த மக்களை கொண்டாடுவதற்கான சிறந்த தளமாக இந்த கருத்தரங்கு விளங்குவதாக கூறினார்.
பிரேசில் அரசின் கலாச்சார சிறப்பு செயலாளர் திரு மரியோ ஃபிரியாஸ், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமிகு நீரஜா சேகர் மற்றும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் தலைமை செயலாளர் திரு திலீப் செனாய் ஆகியோர் கூட்டத்தில் பேசினர்.
கருத்துகள்