அனைவருக்கும் அணுகக்கூடிய மருத்துவ வசதியை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
சுகாதார சேவையை குறைந்த விலையிலானதாகவும், அனைவரும் அணுகக்கூடிய வகையிலும் மாற்ற குடியரசு துணைத்தலைவர் அறைகூவல்
மலிவு விலையிலான மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய மருத்துவ வசதியை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார். மேலும், கிராமப்புறங்களிலும் துணை மருத்துவ மையங்களைத் தொடங்க நவீன பல்நோக்கு மருத்துவமனைகளுக்கு அவர் பரிந்துரைத்தார்.
ஹைதராபாத்தில் யோடா லைஃப் லைன் டயாக்னாஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை இன்று திறந்து வைத்த குடியரசு துணைத் தலைவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியை அமைக்கும் மத்திய அரசின் முடிவைப் பாராட்டினார்.
இது தொடர்பாக மேலும் பேசிய அவர், ஒவ்வொரு வருவாய் துணை கோட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அரசுகளுக்கு பரிந்துரைத்தார். மருத்துவத் துறையில் பயிற்சி பெற்ற மனிதவள பற்றாக்குறையை இது நிவர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், தரமான மருத்துவ சேவை மக்களை சென்றடைவதையும் அதிகரிக்கும், என்றார்.ஹைதராபாத்தில் இந்த அதிநவீன நோயறிதல் மையத்தை அமைந்திருப்பது குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய திரு நாயுடு, கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு இதுபோன்ற வசதிகளை வழங்குவதற்காக தொழில்நுட்ப முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கு அழைப்பு விடுத்தார்.
சுகாதார சேவையை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் அரசாங்கங்களின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், நாடு முழுவதும் உள்ள மருத்துவ மையங்களுக்கு உள்கட்டமைப்பு ஆதரவை வழங்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க அழைப்பு விடுத்தார்.
கொவிட்-19 பெருந்தொற்றை பற்றிப் பேசிய திரு நாயுடு, முன்கள வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்காக அவர்களை பாராட்டினார். நமது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் காற்றோட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான பாரம்பரிய உணவு முறையை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல கடினமான பாடங்களை பெருந்தொற்று நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது என்று அவர் கூறினார்.
சாதனை படைக்கும் கொவிட் தடுப்பூசியை வெளிக்கொண்டு வந்ததற்காக நமது விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைப் பாராட்டிய அவர், அனைவரும் முன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். பாதுகாப்பை நடைமுறைகளை மக்கள் குறைக்க வேண்டாம் என்றும், கொவிட் விதிமுறைகளைப் பின்பற்றவும் திரு நாயுடு அறிவுறுத்தினார்.
கருத்துகள்