கடற்படையின் மிலன் -22 கூட்டு பயிற்சியை முன்னிட்டு, விசாகாப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில், செய்முறை விளக்க நிகழ்ச்சிகள்
மிலன் கடற்படை கூட்டுப் பயிற்சியை முன்னிட்டு விசாகப்பட்டினம் ஆர்.கே கடற்கரையின் செய்முறை விளக்கம் மற்றும் சர்வதேச அணிவகுப்பு நிகழ்ச்சி :
பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன
கடற்படையின் மிலன் -22 கூட்டு பயிற்சியை முன்னிட்டு, விசாகாப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில், செய்முறை விளக்க நிகழ்ச்சிகள் மற்றும் பல நாட்டுக் கடற்படையினரின் அணிவகுப்பும் நடத்தப்பட்டன. இவற்றை ஆந்திர முதல்வர் திரு ஜெகன் மோகன் ரெட்டி உட்பட பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படை, பல நாட்டுக் கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சி மேற்கொள்கிறது. இந்தப் பயிற்சிகளில் சில, பொது மக்கள் முன்னிலையில் செய்து காட்டப்பட்டன. இந்திய கடற்படை கமாண்டோக்கள் வானில் இருந்து குதித்து சாகச நிகழச்சிகள் நடத்தினர். விழா மேடை அருகே தரையிறங்கிய கமாண்டோக்கள், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் திரு. ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு நினைவுப் பரிசு வழங்கினர். ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணி குறித்த செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. கடற்படை விமானங்கள் அணிவகுத்து வந்து விசாகப்பட்டினம் கடற்கரையில் சாகசம் நிகழ்த்தின.
சர்வதேச அணிவகுப்பு நிகழ்ச்சியில் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கும் நாடுகளின் கடற்படையினரும் அணிவகுத்து வந்தனர். அவர்களுடன் இந்தியக் கடற்படை வீரர்கள், கடலோரக் காவல் படை வீரர்கள், என்சிசி மாணவர்கள், சைனிக் பள்ளி மாணவர்கள், போலீசார், தீயணைப்புப் படையினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோரும் அணிவகுத்து வந்தனர்.
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தைக் கொண்டாடும் வகையில் ஆந்திர சுற்றுலாத்துறை சார்பில் அலங்கார ஊர்திகளில் கலாச்சார கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இறுதி நிகழ்ச்சியாக லேசர் ஒளிக் காட்சிகள், பட்டாசு வெடிப்பு, கடலில் நின்றிருந்த போர்க்கப்பல்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் முதல்வர் திரு ஜெகன் மோகன் ரெட்டி, இன்று காலையில் அர்ப்பணித்த வைத்த ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்கப்பலும் பங்கேற்றது. இந்த நிகழ்ச்சிகளைப் பொது மக்கள் கண்டு மகிழ்ந்தனர்
கருத்துகள்