வள்ளலாரின் புகழைப் பரப்புவதிலும், தமிழ்ச் சமயங்கள் குறித்து ஆராய்ச்சி செல்வதிலும் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தவத்திரு ஊரன் அடிகளார் வடலூரில் காலமானார்
திருச்சிராப்பள்ளி அடுத்த சமயபுரம் நரசிங்கமங்கலத்தில் பிறந்த ஊரன் அடிகள், தமது 22 ஆவது வயதில் சன்மார்க்க ஆராய்ச்சி நிலையத்தை அமைத்து தமிழ்ச் சமயங்கள் குறித்தும், சன்மார்க்க நெறி குறித்தும் ஆராய்ச்சி மேற்கொண்டார். 55 ஆண்டுகளுக்கு முன் வடலூரை வாழ்விடமாக மாற்றிக் கொண்டவர், வள்ளலாரின் புகழைப் பரப்பும் பணியில் ஈடுபட்டார். அதற்காக நடவடிக்கைகளில் ஒன்றாக வள்ளலாரின் விரிவான வாழ்க்கை வரலாற்றையும் ஊரன் அடிகள் எழுதினார்.
வள்ளலார் குறித்து 14 நூல்கள் உட்பட 16 நூல்களை எழுதியவர், 12 நூல்களைப் பதிப்பித்தார், சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தார். வள்ளலார் - மகாத்மா காந்தி விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஊரன் அடிகளார் கலந்து கொண்டிருக்கிறார்.
ஊரன் அடிகளாரின் மறைவு தமிழ் சமயம் மற்றும் சன்மார்க்க ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
கருத்துகள்