பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் சிறப்புச் சட்டசபைக் கூட்டத்தில் தனது அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க
புதுச்சேரி துணை நிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியின் முதலமைச்சர் .வி.நாராயணசாமிக்கு உத்தரவிட்டார்.புதுச்சேரியில் நான்கு ஆண்டு காலத்துக்கும் மேலாக முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியிலிருந்து வருகிறது. புதுவை சட்டசபைத் தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், நாராயணசாமி அரசுக்குமிடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படவிடாமல் முடக்குகிறாரென்று நாராயணசாமி அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், கடந்த சில தினங்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து நான்கு எம்.எல்.ஏக்கள் இராஜினாமா செய்துள்ளனர். முன்னதாக, அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். கடந்த சில தினங்களில் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தங்களது எம்.எல்.ஏ பதவியையும் இராஜினாமா செய்தனர்.
அவர்களைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்னர் எம்.எல்.ஏ ஜான்குமார் அவருடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனால், சட்டப்பேரையில் 18 எம்.எல்.ஏக்களாக இருந்த முதல்வர் நாராயணசாமியின் பலம் பதினான்கு எம்.எல்.ஏக்களாகக் குறைந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க 16 எம்.எல்.ஏக்கள் தேவைப்படும் சூழலில் 14 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளது. எதிர்கட்சிகளின் பலமும் 14 எம்.எல்.ஏக்களாக இருந்து வருகிறது.
எனவே, நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக இன்று கூடுதலாக பதவியேற்றுக் கொண்ட தமிழிசை சவுந்தர்ராஜன், பிப்ரவரி 22 ஆம் தேதி சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டுமென்று நாராயணசாமி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். பெரும்பான்மையை நிரூபிப்பது நாராயணசாமிக்கு சவாலாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. அரசியல் களப் பார்வை புதுச்சேரியை நோக்கி திரும்பியுள்ளது.
கருத்துகள்