தமிழ்நாட்டில் சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் அறிஞர் டாக்டர் சி.என.அண்ணாத்துரை பிறந்த நாளில் விடுதலை செய்யப்படுவார்களென தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிப்பை வெளியிட்டதுடன் அரசாணை விரைவில் வெளியிடப்படுமெனவும் தெரிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது: ‘சிறைக் கைதிகளின் முன் விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை யொட்டி (வரும் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி) நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் வைத்து முன்னதாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதையடுத்து சென்னை புழல் சிறைச்சாலை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் 700 நபர்களை விடுதலை செய்ய சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
எந்தெந்த சிறைகளில் யார்-யார் விடுதலை செய்யப்பட உள்ளனர் என்பது பற்றிய விவரங்களை சிறைத்துறை அதிகாரிகள் சேகரித்து வைத்துள்ளனர்.
ஆண்டுதோறும் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி சிறை கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தான் அறிஞர் அண்ணா பிறந்த நாளில் 700 சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது இந்த நிலையில் பா ஜ க வின் தமிழகப் பொறுப்பாளர் சி.டி.இரவி தமிழ்நாட்டில் 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் முடிவு ஆபத்தானது. அது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கே ஆபத்து எனத் தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி விமான நிலையம் அருகே தனியார் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் செப்டம்பர் 13 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சி.டி.ரவி, “சிறந்த முறையில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் அவர் மீது எந்தவொரு இலஞ்சப் புகாரும் வரவில்லை. பிரதமர் நரேந்திரமோடி மன் கி பாத் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் நேரடித் தொடர்பில் உள்ளார்.
திமுகவின் ஹனிமூன் முடிந்துவிட்டது. அவர்களின் எண்ண ஓட்டம் எப்போதும் ஒன்றிய அரசுக்கு எதிராக செயல்படுவது தான். ஆனால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு எத்தனையோ நல்ல திட்டங்களைச் செய்து கொடுத்துள்ளது. ஆனால், திமுக அரசு ஒன்றிய அரசுக்கும், மோடிக்கும் எதிராக செயல்படுகிறது. அவர்களுக்கு நேர்மறையாக சிந்திக்கத் தெரியவில்லை. பாஜக எப்போதும் தமிழ்நாட்டு மக்களுடனும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.
100 சதவிகிதம் நாங்கள் மாநில அரசுக்கு உதவியாக இருக்கிறோம். திமுக அரசு அமைந்த பிறகு தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்தான பகுதிக்குச் செல்கிறது. 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க திமுக அரசு எடுத்த முடிவு ஆபத்தானது. அது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கே ஆபத்து. இதை நாங்கள் எதிர்ப்போம். ஏனென்றால், அது மிகவும் ஆபத்தான முடிவு. தமிழ்நாட்டின் நிலத்தை தேசவிரோத நடவடிக்கைகளுக்குக் கொடுத்து விடக் கூடாது.
என்று கூறினார். இச் சூழலில் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முஸ்லிம்கள் சார்ந்த சிறைக் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம் நடத்தினர். என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்