புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ஆற்றிய உரை
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று புதுச்சேரியில் காணொலிக் காட்சி வாயிலாக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த மகான்கள், அறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் புரட்சியாளர்களின் புனித பூமி புதுச்சேரி என்று தெரிவித்தார்.
சிறந்த தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதி மற்றும் ஒப்பற்ற புரட்சியாளரும் சிறந்த தத்துவஞானியுமான ஸ்ரீ அரவிந்தர் ஆகியோர் தங்கள் பங்களிப்பை அளித்துள்ள இடம் இது என்றார்.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது புதுச்சேரியை சிறந்த மாநிலமாக மாற்றப் போவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார், அடுத்த தேர்தலுக்கு முன்பு இது நிச்சயம் நடக்கும் என்று உறுதியளிக்கிறேன் என்று அமித் ஷா தெரிவித்தார்.
புதுச்சேரியில், பாரம்பரிய சுற்றுலாவை ஈர்க்கும் வகையில் பிராங்கோ-தமிழ் கிராமம் அமைக்கப்படும், மேலும் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் கண்காட்சி வசதிகளை ஏற்படுத்தும் வகையில் மூன்று பழைய கிடங்குகளில் பணிகள் இன்று தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.
பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணிகள் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மாநிலங்களுக்கு இடையேயான புதிய பேருந்து முனையம் அமைக்கும் பணிகள் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 150 கோடி ரூபாய் செலவில் பெரிய கால்வாயை அழகுபடுத்தும் பணியும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தாவரவியல் பூங்கா புதுச்சேரியின் முக்கிய மையமாகத் திகழும் என்று தெரிவித்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளுக்கு தனி கட்டிடங்கள் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புதுச்சேரியை சிறந்த யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு தேவையான பணிகளை மத்திய அரசு ஏற்கனவே மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
மத்திய அரசின் 90-க்கும் மேற்பட்ட திட்டங்கள், பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடிப் பண பரிமாற்றத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதுவரை 500 கோடி ரூபாயை 6 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளதாக கூறினார்.
முந்தைய அரசுகளின் ஆட்சி காலத்தில், ஊழல் மட்டுமே இருந்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும், புதுச்சேரி வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கு பெயர் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு என். ரங்கசாமி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், திரு ஏ. நமசிவாயம் அவர்களின் தலைமையிலும், இம்மாநிலத்தில் இந்த வளர்ச்சிப் பணிகள் தொடரும் என்று அமித் ஷா தெரிவித்தார்.
கருத்துகள்