பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப் பேரவையில் நிறைவேற்றம்.
பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா தமிழகத்தில் நிறைவேற்றம்
தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநில சட்ட மன்றப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இச் சட்ட முன்வடிவை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை தொடக்க நிலையிலேயே எதிர்ப்பதாக அஇஅதிமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர் தமிழ்நாட்டில் 13 மாநிலப் பல்கலைக்கழகங்களின்
துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் பல்கலைக்கழகச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரவுள்ளதாக, ஜனவரி மாதம் 6 ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்த நிலையில்
சட்டமன்றத்தில் பல்கலைக்கழக திருத்தச் சட்ட முன்வடிவினை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். பல்கலைக்கழக நிர்வாகங்களில் குளறுபடி குறித்து சில கருத்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டு பேசும் போது, "தமிழ்நாடு அரசின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் வேந்தராக ஆளுநரும், இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும் உள்ளனர்.
கொள்கை முடிவு எடுக்கும் அரசுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் இல்லாதது, உயர்கல்வியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கலந்தாலோசித்து துணைவேந்தரை நியமிப்பது மரபாக இருந்து வந்த நிலையில்,
கடந்த 4 ஆண்டுகளில் துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலை தூக்கியுள்ளது. இதனால் பல்கலைக்கழக நிர்வாகங்களில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. இது மக்களாட்சித் தத்துவத்துக்கே விரோதமாக உள்ளது மேலும் ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய 2007 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையில், "அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படக் கூடாது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வழிவகுக்கும்" எனக் குறிப்பிட்டது.
மேலும், "துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுப்பது என்பது அதிகார மோதலுக்கு வித்திடும்" எனச் சுட்டிக் காட்டியுள்ளார். இதுகுறித்து இந்திய அரசால் மாநில அரசிடம் கருத்து கேட்கப்பட்ட போது தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்கள் ஆணையத்தின் அறிக்கையை எற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளன.
மேலும், திமுக அரசு எனது தலைமையில் அமைந்ததும் பூஞ்சி ஆணைய பரிந்துரை தொடர்பாக மாநில அரசின் கருத்து கேட்டு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்தது. அதனை ஏற்று துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாதென்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் துணைவேந்தர்கள் நியமனம் எப்படி நடக்கிறது எனப் பார்த்த போது, குஜராத், ஆந்திரா, தெலங்கானாவில் தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று பேரில் ஒருவர் மாநில அரசின் ஒப்புதலோடு நியமிக்கப்படுகிறார். எனவே, பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்த குஜராத்திலுள்ளது போல தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட முன்வடிவினை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்
கடந்த ஜனவரியில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான திருத்தச் சட்டம் குறித்து உயர் கல்வி அமைச்சர் பேசியதை நினைவூட்டிய முதலமைச்சர், "அது நிறைவேறும் சூழலுக்கு வந்திருக்கிறது. குஜராத்தில் மாநில அரசு தான் துணை வேந்தர்களை நியமனம் செய்கிறது. 2017 அ.தி.மு.க ஆட்சியிலும் ஆணையத்தின் பரிந்துரையை ஆதரித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை ஆதரிப்பதில் அ.தி.மு.கவுக்கு நெருடலிருக்க வாய்ப்பில்லை. இது மாநில அரசின் உரிமை மற்றும் கல்வி தொடர்பான பிரச்னை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் உரிமை. இதனை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.
இதையடுத்து, "சட்டமுன்வடிவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்" என அமைச்சர் பொன்முடி தெரிவிக்க, அவை முன்னவர் துரைமுருகன் வழிமொழிந்தார். இந்த சட்ட முன்வடிவை எதிர்த்து பா.ஜ.க வெளிநடப்பு செய்தது. தொடக்க நிலையிலேயே எதிர்ப்பதாக அ.இ.அ.தி.மு.க உறுப்பினரும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருமான அன்பழகன் தெரிவித்தார்.
பின்னர், சட்ட முன்வடிவினை ஆதரித்துப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், "மாநில அரசுகள் இழந்து வரும் உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டு வருகிறார். பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முன்வடிவை வரவேற்கிறோம். குஜராத், கர்நாடகா, தெலங்கனா ஆகிய மாநிலங்களில் உள்ளதைப் போல மாநில முதல்வரின் உத்தரவுக்கேற்ப அமைச்சர் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டைச் சாராத வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை கடந்த காலங்களில் துணைவேந்தர்களாக கொண்டு வந்தனர். வரும் நாள்களில் வேந்தர் என்ற இடத்தில் முதலமைச்சர் பெயர் இடம்பெற வேண்டும்" என்றார்.
அடுத்துப் பேசிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், "பொறுமைக்கும் ஓர் அளவு இருக்கிறது. அண்ணா காலத்திலிருந்தே இந்தப் பிரச்னை இருக்கிறது. ஆளுநர் பிரச்னை என்பது இதுவரையில் தீர்க்கப்படாமல் உள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமை என்பது ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு என்பதை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமையை மாநில அரசுக்கு அளிக்கும் வகையில் பல்வேறு சட்டமன்றங்களில் சட்டம் நிறைவேற்றியுள்ளனர். ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்துள்ள முடிவு என்பது அத்தனை மாநிலங்களும் பயன் தருவதாக அமையும்" என்றார்.
மாநில ஆளுநர், துணைவேந்தர்களை நியமனம் செய்து வரும் நிலையில், அந்த அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கே மாற்றும் சட்ட மசோதா. 25.04.2022 அன்று நிறைவேற்றப்பட்டது . ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் சாசன சட்ட கடமையை நிறைவேற்றுவது மட்டுமே ஆளுநரின் வேலையாக இருக்கவேண்டும்.
இந்த தலையை எண்ணுகிற வேலையையே ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி நெருக்கடி ஏற்படும் மாநிலத்திற்கு தேவைப்படும்போது சென்று செய்யலாம்.என்பது பல அரசியல் வல்லுனர்கள் கருத்து. நாடு முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைத்தவர்களின் அரசு நிர்வாகத்தில் தலையிடும் அளவுக்கு எந்த அதிகாரமும் ஆளுநருக்கு இருக்கக்கூடாது என்பது பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சியின் நிலைப்பாடாகும். கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டத்தின் படி துணைவேந்தர்கள் மாநில அரசின் ஒப்புதலுடன் தான் நியமனம் செய்ய முடியும். அந்த அடிப்படையில், 1923 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகச் சட்டம் உட்பட, 13 பல்கலைக்கழகங்களில் சட்டங்கள் திருத்தப்படவுள்ளன. அதில், அண்ணா பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக் கழகம், பெரியார் பல்கலைக் கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றின் சட்டங்கள் திருத்தப்படவுள்ள மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் மாநில ஆளுநர் ஆர்.என் ரவி.தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகற நிலையில், இந்தச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
கருத்துகள்