இராமநாதபுரம் மாவட்டம், ஏனாதி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் பஞ்சம்
அங்கு மேலத் தெருவிலும் கீழத் தெருவிலும் வசிக்கும் இரு வேறு சமூகத்தினர் ஒற்றுமையாகப் பழகி வருகின்றனர். இரு சமூகத்து தலைவர்களான நடிகர் பிரபுவும் இளவரசும் நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தும் வழிநடத்தியும் வருகிற நிலையில் ஒரு கார்ப்பரேட் கம்பெனி கிராமத்தில் இயற்கை வளத்தைச் சுரண்ட அரசாங்கம் அனுமதிக்கவும்
அரசியல் ஆதாயத்துக்காகவும் இரு சமூகத்திடையே கலவரத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினரின் தீவிர முயற்சிகளும் அங்கு அரங்கேறுவதையடுத்து நடிகர் சாந்தனு - ஆனந்தி காதல் அதற்குப் பகடைக்காயாக மாற, தண்ணீர் பஞ்சத்திற்கு காரணமாண சீமைக் கருவேல மரக்காட்டின் ஆபத்து குறித்து கண்டறிந்து செயல்படும் நடிகர் பிரபுவும் இளவரசும் இறுதியில் கொல்லப்படுவதைத் தொடர்ந்து நடப்பது தான் கதை
இரு பிரிவுகளிடையே கிராமத்தில் மூண்ட கலவரம் மீண்டும் ஓய்ந்ததா என்பது தான் மீதிக்கதையாக உள்ளது. மேலும் 1957ஆம் ஆண்டு நிகழ்ந்த முதுகுளத்தூர் கலவரத்தின் பின்னணியில், ஜாதீயப் பிரச்சினை, முக்கோணக் காதல் கதை மற்றும் சில வணிக அம்சங்களையும் சேர்த்து படத்தின் கதையைச் சொல்லியிருக்கிறார்கள்.
நகர் பையனாக மாடர்ன் உடையில் துள்ளல் நடனத்துடன் நாம் பார்த்துப் பழகிய நடிகர் இயக்குனர் கே.பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கு இதில் நேரெதிராக, தென் தமிழ் நாட்டில் வறட்சி மிக்க குளிக்கக்கூட தண்ணீர் இல்லாத அன்றய முகவை மாவட்டக் கிராமத்தில் கெத்தாக வலம் வரும் கிராமத்து இளைஞனின் வேடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
அந்தக் கதா பாத்திரத்தை சிறப்பாகச் செய்து கவனமீர்த்துள்ளார் நடிகர் சாந்தனு. காதல் காட்சிகளைக் காட்டிலும் ஆக்ரோஷமாக கபடி விளையாடுவது, பிரபுவுக்காக கதறி அழும் காட்சிகள், நண்பனிடம் பேச முடியாமல் வருந்தும் காட்சிகளில் சாந்தனு தனியாக நம் கண்களுக்குத் தெரிகிறார்.
மேலும் இரு சமூகத்து தலைவர்களாகவும் நண்பர்களாகவும் வலம் வரும் நடிகர்கள் பிரபுவும் இளவரசும் தங்களுடைய தேர்ந்த முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நம்மைப் படத்துடன் ஒன்ற வைக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது பரியேறும் பெருமாள் படத்தில் வந்தது போல் இரு சமூகத்து பிரச்னை, தன்னைச் சுற்றி நடக்கும் சிக்கல்கள் புரியாமல் வெள்ளந்திப் பெண்ணாக வலம் வரும் அதே கதாபாத்திரம் கயல் ஆனந்திக்கு. இன்னும் கொஞ்சம் பக்குவப்படலாம் எனக் கூற வேண்டும்.
மேலும் இப்படத்தில் சாந்தனுவின் நண்பன் மதிமாறனாக நடித்துள்ள சஞ்சீவ் சரவணனுக்கு கனமான பாத்திரம் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது தன் நண்பன் சாந்தனுவின் காதலி ஆனந்தியுடன் சூழ்ச்சியால் காதலில் விழும் இடங்களில் பரிதாபத்துக்கு பதிலாக சிரிப்பையே வரவழைக்கிறார். இன்னும் கொஞ்சம் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கலாம்.
அதேநேரத்தில் ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்குத் தேவையானதை வழங்குகின்றன.
மேலும் ஒற்றைக் கையிழந்த வில்லனாக வரும் நடிகர் கதைக்குத் தேவையானதைச் செய்து மிரட்டி கவனமீர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இரு பிரிவினரிடையே கலவரம் தூண்டப்படும் காட்சிகள், பிரபு - இளவரசு உடல்களை வைத்துக் கொண்டு நிகழ்த்தப்படும் அரசியல் ஆகிய காட்சிகள் பார்ப்பவர்களுக்கு சற்று பதட்டத்தை ஏற்படுத்துகின்றன.
மேலும் ஜாதீயக் கலவரத்தால் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம் எனத் தொடங்கினாலும், எங்க அய்யா பாடல், பிரபுவை சித்தரிக்கும் விதம் உள்ளிட்ட சில காட்சிகள் குறிப்பிட்ட சமூகத்தினருக்கான துதியாக சாத்தியக்கூறுகளைக் கொண்ட அமைந்துள்ளதென பேசப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் முந்தைய படத்துக்கு எழுந்த கடும் விமர்சனங்களால் பிரபுவின் அறிமுகக்காட்சி பின்னணியில் அம்பேத்கர், பெரியார் படங்களும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது..
கருத்துகள்