குடியரசுத் தலைவர் செயலகம் ஐந்து நாட்டுத் தூதர்கள் நியமன சான்றிதழ் சமர்பிப்பு
ஐந்து நாடுகளின் தூதர்கள், காணொலி காட்சி மூலம் தங்களின் நியமன சான்றிதழ்களை குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்திடம் இன்று அளித்தனர்.
எல் சல்வேடார் குடியரசு நாட்டின் தூதர் திருமிகு. கில்லர்மோ ரூபியோ ஃபூன்ஸ், பனாமா தூதர் திருமதி. யாசீல் அலின்ஸ் புரில்லோ ரிவேரா , துனிசியா தூதர் திருமதி. ஹயட் தல்பி, இங்கிலாந்து தூதர் திரு. அலெக்ஸ் எலிஸ், அர்ஜென்டினா தூதர் திரு. ஹூகோ ஜேவியர் கோபி ஆகியோர் தங்கள் நியமன சான்றிதழ்களை காணொலி காட்சி மூலம் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்திடம் இன்று அளித்தனர்.
அவற்றை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார்.
இந்த நியமனத்துக்காக அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார். இந்த 5 நாடுகளுடனும், இந்தியா நல்லுறவு கொண்டுள்ளதாகவும், அமைதி மற்றும் வளம் என்ற தொலைநோக்கில் இந்த உறவு ஆழமாக வேரூன்றி உள்ளதாகவும் திரு. ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தரமற்ற உறுப்பினர் பதவி கிடைக்க ஆதரவு அளித்ததற்காக இந்த 5 நாடுகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைந்தவிலை கொவிட் தடுப்பூசிகள் பல நாடுகளை ஏற்கனவே சென்றடைந்துள்ளதால், உலகின் மருந்தகம் என்ற நற்பெயரை இந்தியா மீண்டும் நிலைநாட்டியுள்ளதாக குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் தெரிவித்தார்.
கருத்துகள்