தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை இந்திய தர நிர்ணய அலுவலகம் கட்டாயமாக்கியுள்ளது.
இந்திய தர நிர்ணய அலுவலகம் (BIS)நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியது. அதில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற நடைமுறை ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய தரநிர்ணய அலுவலகத்தின் தலைமை இயக்குனர் திரு பிரமோத் குமார் கூறுகையில், ‘‘ முதல்கட்டமாக ஹால்மார்க் மதிப்பீடு மையங்கள் உள்ள நாட்டின் 256 மாவட்டங்களில், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் வரை விற்று முதல் உள்ள நகை வியாபாரிகளுக்கு ஹால்மார்க் கட்டாயம் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மத்திய அரசின் வர்த்தக கொள்கைப்படி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் நகைகளும், சர்வதேச கண்காட்சிக்கான நகைகள், அரசு அனுமதித்த பி2பி உள்நாட்டு கண்காட்சிகளுக்கான நகைகளும் கட்டாய ஹால்மார்க்கிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
கடிகாரங்கள், பேனாக்கள் மற்றும் சிறப்பு வகை நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்’’ என்றார்.
ஹால்மார்க் முத்திரைக்கு நகை வியாபாரிகள் ஒரு முறை பதிவு செய்யலாம். இதற்கு கட்டணம் இல்லை. தங்கநகை விற்பனையில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், மொத்த வியாபாரிகள், விநியோகஸ்தர்கள், சில்லரை வியாபாரிகள் கட்டாயம் இந்திய தர நிர்ணய அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
நகை வியாபாரிகளுக்காக, நகை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், விற்பனையில் நேரடி தொடர்பில்லாத கலைஞர்களுக்கு இந்த பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தயாரிப்பாளர், மொத்த விற்பனையாளர், விநியோகிப்பாளர் அல்லது சில்லரை விற்பனையாளர் யாராக இருந்தாலும், முதல்நிலை விற்பனையில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும். ஹால்மார்க் நகையில் 2 கிராம் வரை அதிகரிப்பது அல்லது குறைப்பதற்கு அனுமதிக்கப்படும். இதில் சுத்தத்துக்கான பொறுப்பு நகைக்கடைக்காரரிடம் உள்ளது.
ஹால்மார்க் முத்திரைக்கான தங்கத்தின் சுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என நகைக்கடைக்காரர்களிடம் எப்போதும் அதிக கோரிக்கை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, ஹால்மார்க் முத்திரைக்கு 20, 23 மற்றும் 24 கேரட் அனுமதிக்கப்படும்.
ஹால்மார்க் முத்திரையில்லாத வீட்டில் உள்ள நகைகளை நகைக்கடைகாரர்களிடம் விற்க முடியும். வாடிக்கையாளரிடமிருந்து ஹால்மார்க் முத்திரையில்லாத தங்கத்தை நகைக்கடைக்காரர்கள் தொடர்ந்து பெற முடியும். நகைக் கடைக்காரர்களால் சாத்தியம் என்றால், பழைய நகைகளுக்கும் ஹால் மார்க் முத்திரை பெற முடியும். அவற்றை உருக்கி புதிய நகை தயாரிக்கும்போது, ஹால்மார்க் முத்திரை பெறலாம்.
இந்த திட்டத்தை அமல்படுத்தும்போது, எழும் பிரச்சினைகள் குறித்து ஆராய பல தரப்பு பிரதிநிதிகள், வருவாய் அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
இந்திய தரநிர்ணய அலுவலகத்தின் ஹால்மார்க் திட்டத்தின் கீழ், ஹால்மார்க் நகைகளை விற்க நகைக்கடைக்காரர்கள் பதிவு செய்யப்படுகின்றனர் மற்றும் ஹால்மார்க் மையங்களில் பரிசோதனை மூலம் அங்கீகரிக்கப்படுகின்றனர். பிஸ்(ஹால்மார்க்) ஒழுங்குமுறைகள் 2018 ஜூன் 14ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டன. இந்த ஹால்மார்க் முத்திரை மூலம், நுகர்வோர் தங்கம் வாங்கும்போது சரியான தேர்வு செய்து, தேவையற்ற குழப்பங்களில் இருந்து விடுபடலாம்.
இவ்வாறு சென்னையில் உள்ள இந்திய தரநிர்ணய அலுவலகம்(பிஸ்) துணை இயக்குனர் (மார்க்கெட்டிங் மற்றும் சிஏ) திரு எச் அஜய் கண்ணா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்க நகைகளின் தரத்தை மதிப்பிட இவ்வமைவனத்தின் மூலம் 2000 முதல் 'பிஐஎஸ் ஹால்மார்க்' என்ற பெயரில் ஹால்மார்க் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் பிஐஎஸ் விலைமதிப்புள்ள உலோகப் பிரிவுக் குழுவின் படி தங்கம் மற்றும் தஙகக் கலப்புலோகங்களின் தர நிர்ணயங்கள்:
IS 1417 - ஆபரணத் தங்கம் மற்றும் தஙகக் கலப்புலோகங்களின் தகுதி நிலை
IS 1418 - சொக்கத் தங்கம், ஆபரணத் தங்கம் மற்றும் தஙகக் கலப்புலோகங்களின் மதிப்பீடு
IS 2790 - 23,22,21,18,14 மற்றும் 9 காரட் தஙகக் கலப்புலோகங்களின் வழிநெறி
IS 3095 - ஆபரணத் தங்க உற்பத்தியில் பயன்படும் தஙகப்பற்றுகள்
2005 முதல் வெள்ளிக்கும் ஹால் மார்க் நிர்ணயம் செய்யப்படுகிறது.
IS 2112 - ஆபரண வெள்ளி மற்றும் வெள்ளிக் கலப்புலோகங்களின் தகுதி நிலை
கருத்துகள்