மாடித் தோட்டத்தை உருவாக்கிய ரெட்டியின் பயணத்தை பதிவு செய்த டெரேஸ் கார்டன்: மிடில் தோட்டா’ நூல் குடியரசு துணைத் தலைவர்
குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
விலை குறைவான மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மாடித் தோட்ட முறை நமக்கு வழங்கும்: குடியரசு துணைத் தலைவர்
திரு தும்மேட்டி ரகோத்தம ரெட்டி எழுதிய மாடித் தோட்டம் குறித்த ‘டெரேஸ் கார்டன்: மிடில் தோட்டா’ எனும் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் பிரதியை குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று பெற்றுக் கொண்டார்.
முதலில் தெலுங்கில் எழுதப்பட்ட இந்த புத்தகம், ஹைதராபாத்தில் உள்ள நாரப்பள்ளியில் மாடித் தோட்டத்தை வெற்றிகரமாக உருவாக்கிய திரு ரெட்டியின் பயணத்தை பதிவு செய்துள்ளது. மொழிபெயர்ப்பாளர் திரு கோடூரு சீதாராம பிரசாத் மற்றும் பதிப்பாளர் திரு யாத்லபள்ளி வெங்கடேஸ்வர ராவ் ஆகியோரின் முயற்சிகளை திரு நாயுடு பாராட்டினார்.
தமது மாடித்தோட்டத்தில் பண்டைய முறைகளை பயன்படுத்தியதற்காக திரு ரெட்டியை குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார். கடந்த ஏழு ஆண்டுகளில், 1230 சதுர அடி கொண்ட சிறிய தோட்டத்தில் 25 குவிண்டால் காய்கறிகளை திரு ரெட்டியால் அறுவடை செய்ய முடிந்திருக்கிறது. வெறும் மண் மற்றும் விலங்கு உரத்தை கொண்டு இது செய்யப்பட்டிருக்கிறது. அவரது மாடித் தோட்டத்தில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படவில்லை. இந்த சாதனையை குறிப்பிட்ட திரு நாயுடு, “ஊட்டச்சத்து மிக்க உணவுகளை குறைந்த செலவில் தரும் மாடித் தோட்டம் சிறப்பான யோசனையாகும்,” என்றார்.
மாடித் தோட்டத்தின் பலன்களை பற்றி குறிப்பிட்ட அவர், ரசாயனம் இல்லாத பழங்கள் மற்றும் காய்கறிகளை பசுமையுடன் அவை தருவதோடு, சுற்றுச்சூழலில் ஆக்சிஜன் அளவையும் மேம்படுத்துவதாக கூறினார். “தோட்டம் ஒருவரை இயற்கைக்கு அருகில் கொண்டு வருவதோடு, மன அழுத்தத்தையும் போக்குகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
மாடித் தோட்டத்தில் பயன்படுத்தக்கூடிய எளிய முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து இப்புத்தகம் விளக்குகிறது. மாடித் தோட்டத்தை வளர்க்க மக்களுக்கு இந்த புத்தகம் ஊக்கமளிப்பதோடு, மாடித் தோட்டம் வளர்க்க விரும்புவோருக்கான வழிகாட்டியாகவும் திகழ்கிறது என்று திரு நாயுடு கூறினார். தோட்டம் வளர்த்தலை பொழுதுபோக்காக எடுத்து செய்யுமாறு வீட்டில் காலியிடம் உள்ள மக்களை குடியரசு துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள்