மணல் கடத்திய நபர்கள் ஓட்டம் ஐவர் கைது, காவல்துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணல் கடத்தல் வழக்கில் சிக்கிய வாகனங்களை மீட்டுச் சென்று காவல்துறையை அவமதித்த ஒரு அரசியல் கட்சி பிரமுகர் குடும்பத்துடன் தலைமறைவான நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாகனங்களை விடுவித்த காவல்துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை அருகே முத்தபுடையான் பட்டியில் மணல் கடத்த முயன்ற ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் இரண்டு டிப்பர் மணல் லாரிகளை பறிமுதல் செய்து மூன்று ஓட்டுநர்களைக் கைது செய்த தனிப்படை காவல்துறை மணப்பாறை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மணப்பாறை அரசியல் கட்சி பொறுப்பாளர் ஆரோக்கியசாமி (வயது40), என்பவருக்கு மணல் கடத்தலில் தொடர்பு இருந்ததால் வழக்குப் பதிவு செய்யாமல் மணப்பாறை காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் விடுவித்தார்
.உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் மீண்டும் வாகனங்களையும், ஓட்டுநர்களையும் ஒப்படைக்கக் கேட்டபோது ஆரோக்கியசாமி மறுத்ததுடன் பெண் காவல்துறை துணை கண்காணிப்பாளரை அவமதித்துள்ளார்.
இச் செய்தி வெளியானதால் ஆரோக்கியசாமியின் ஒன்றிய பொறுப்பாளர் பதவியை பறிக்கப்பட்டு தி.மு.க.விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
ஓட்டுநர்கள் மனோகர் (வயது36), பவுல் சேகர் (வயது 28), கார்த்திகேயன் (வயது 25), ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆரோக்கியசாமியைக் கைது செய்ய காவல்துறையினர் சென்றபோது அவர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். அவரது வீட்டில் பணியாற்றி வந்த அருள் சேசுராஜ் (வயது 28), சவரி (வயது51), ஆகியோரையும் மணல் கடத்தியதற்கு உதவியதாகக் கைது செய்தனர்.
மணல் கடத்தி பிடிபட்ட வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களை விடுவித்த மணப்பாறை ஆய்வாளர் அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து திருச்சிராப்பள்ளி டி.ஐ.ஜி. ராதிகா உத்தரவிட்டார்.
ஆரோக்கியசாமி விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்த தி.மு.க. தலைமை நடவடிக்கை காரணமாக அவரைக் கைது செய்ய ஆய்வாளர் மாதையன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கருத்துகள்