யார் ஒருவரும் தெருவில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட உரிமையுண்டு எனக் கூற முடியாது. உயர்நீதிமன்றம் சாலையோரத்தில் வியாபாரம் செய்தால், அத்தெரு வழியாக மக்கள் நடந்து கடந்து செல்வதில் பிரச்னை உருவாகும்,' என, சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சுப்பிரமணியபுரம் 4 வது தெருவில் ஒரு கட்டட காம்பவுண்ட் சுவர் அருகில் நாவல் மரம் உள்ளது. மரத்தின் அடியில் காய்கறிகள் விற்பனை செய்கிறேன். மரத்தை அகற்ற மாவட்டத்தின் ஆட்சியர், மதுரை தெற்கு தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் வியாபாரம் செய்து வரும் எங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பினோம். மரத்தை வெட்டத் தடை விதிக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார் இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது : மரத்தின் வேர்கள் அருகிலுள்ள கட்டட காம்பவுண்ட் சுவருக்குள் ஊடுருவியுள்ளன. வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து, அவசியம் கருதி மரத்தை வெட்ட உத்தரவு பிறப்பித்துள்ளனர். தெருவோர வியாபாரியான மனுதாரர், மரத்தின் கீழ் காய்கறி விற்பனை செய்வதை காரணமாகக் கூறிக்கொண்டு, அம்மரம் இருக்க வேண்டும் என விரும்புகிறார். அத்தகைய நிவாரணத்தை வழங்க முடியாது.குறிப்பாக இது மிகக்குறுகிய தெரு. முதலாவதாக, எந்த ஒரு நபரும் ஒரு தெருவில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட உரிமை உண்டு எனக் கூற முடியாது.மாநகராட்சியின் அனுமதியுடன் வியாபாரம் செய்கிறோம்; தரை வாடகையை மாநகராட்சி வசூலிப்பதாக மனுதாரர் கூறுகிறார். சாலையோரத்தில் வியாபாரம் செய்தால், அத்தெரு வழியாக மக்கள் கடந்து செல்ல முடியாமல் பிரச்னை உருவாகும்.இந்த வியாபாரிகளை தகுந்த வேறு இடத்திற்கு மாற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறையின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனுவை பைசல் செய்கிறோம், என்றனர்.
கருத்துகள்