மதுரை சித்திரை வீதியில் பல்லாக்கில் பவனி வந்த 293 வது ஆதீனத்திடம் பொதுமக்களும் பக்தர்களும் ஆசீர்வாதம்
மதுரை ஆதீனத்தில் 293- வது பட்டம் மடாதிபதியாக ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் திங்கள்கிழமையன்று பொறுப்பேற்றார்.
மறைந்த ஆதினகர்த்தர் அருணகிரிநாதரின் 500 கிலோ எடையுள்ள பளிங்கு சிலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன், காலமான மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் உடல் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதினத்திற்கு சொந்தமாக இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில்
பொதுமக்கள் ஏராளமானோர் மறைந்த மதுரை ஆதினத்திற்கு அஞ்சலி செலுத்தினர். தற்போது, மறைந்த ஆதினத்தின் பளிங்கு சிலை மக்களின் அஞ்சலிக்காக மடத்தில் வைக்கப்பட்டது. இதனை, ஏராளமான பொது மக்களும், பக்தர்களும் பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.
மதுரை ஆதினத்தில் 293-வது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், பொறுப்பேறற உடன் 6 உத்தரவுகளிட்டார் பல்லக்கில் பட்டினப் பிரவேசமும் நடந்தது.
பழமை வாய்ந்த பல்லாக்கில் அமர்ந்து பட்டினப்பிரவேசம் செய்து ஆசி வழங்கினார். பல்லாக்கில் பவனி வந்த ஆதீனத்திடம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆசீர்வாதம் பெற்று விபூதி பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமி உடல்நலக் குறைவால் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முக்தி அடைந்தார்.
2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதி முதல் இளைய ஆதீனமாக இருந்து வரும் சுந்தரமூர்த்தித் தம்பிரானுக்கு ஶ்ரீலஶ்ரீ ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என பட்டம் சூட்டப்படிருந்தது. அருணகிரிநாதர் மறைந்த 10 வது நாளில் நடக்கும் குரு பூஜையில் இளைய ஆதீனம், மரபுப்படி பீடத்தில் அமர்ந்து ஆதீன மடத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
திருநெல்வேலியில் சைவப்பிள்ளை குடும்பம் பிறந்து முன்பு துறவு பூண்டு தற்போது மதுரை ஆதினமாக பொறுப்பேற்ற மதுரை ஆதின மடத்தின் 293 வது ஆதினம் ஶ்ரீல ஶ்ரீ ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி திருநெல்வேலி நகரில் பிறந்தவருக்கு பெற்றோர் வைத்த பெயர் பகவதி லட்சுமணன். தனது 21 வது வயதில் துறவறமேற்று குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் 1975 ஆம்ஆண்டு தம்பிரானாகப் பதவியேற்று, 2 ஆண்டுகள் சமயத் தொண்டாற்றினார். பின்னர், தருமபுரம் ஆதீனத்தில் தம்பிரானாக 5 ஆண்டுகள் சமயத் தொண்டாற்றினார். அதனை தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனத்தில் 35 ஆண்டுகள் மூத்த தம்பிரானாக சமய, சைவத் தொண்டாற்றிய பின்னர் அருணகிரி நாதரால் மதுரை ஆதீன மடத்தில் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார்.
ஆதின மடத்தில் நடைபெற்ற குருபூஜை விழாவில், தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், முதல் வேலையாக 6 உத்தரவுகள் அடங்கிய கோப்புகளில் கையெழுத்து போட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும், அதிகாலை நடைபெறும் முதல் பூஜையும், இரவு நடைபெறும் கடைசி பூஜையும் ஆதீன மடத்தின் சார்பில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், முந்தைய ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பணிகளைத் தொடராமல் கைவிட்டுள்ளார். அருணகிரி நாதருக்கும், அப்போதைய கோவில் நிர்வாகிகளுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளால் அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக மடத்தின் வட்டாரங்களில் தகவல் . தற்போது புதிய ஆதீனம் அந்தக் கட்டளைப் பணிகளை தொடர்ந்து நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். தினசரி அன்னதானம் ஆதீன மடத்தில் தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு மடத்திற்கு வரும் அடியவர்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதும் வழக்கம். இதனையும், கடந்த பல வருடங்களுக்கு மேலாக பின்பற்றாமல் இருந்துள்ளார் அருணகிரி நாதர். அந்த அன்னதானப் பணிகளை தினமும் தொடர்வதற்கு உத்தரவிட்டுள்ளார். வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மடத்தில் தேவாரம், மற்றும் திருவாசகம் முற்றோதல் நடத்தும் நிகழ்வுகளையும் தொடர உத்தரவிட்டுள்ளார்.
மதுரை ஆதீன மடத்திற்கு மதுரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடைகள், வீடுகள் உள்ளன. மேலும், தூத்துக்குடி, பழனி, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இந்தச் சொத்துக்கள் நெடுங்கால குத்தகை மற்றும் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதில், பெரும்பாலும் வாடகைத் தொகை கட்டப்படாமலும், குத்தகை இடங்களில் தனி நபர் ஆக்கிரமிப்பும் அதிகரித்துள்ளன. மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை முறையாக நிர்வகிப்பதில் முந்தைய ஆதீனம் தவறிய நிலையில், புதிய ஆதீனம் அவைகளை கணக்குப் பார்த்து மீட்டு பத்திரபடுத்தும் நடவடிக்கைகளைச் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
5 உப கோவில்களில் குடமுழுக்கு
மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 5 கோவில்களில் குடமுழுக்கு பணிகளை நிறைவேற்றுவதற்கும், தினசரி பூஜைகளை தவறாமல் தொடர்வதற்கும் உத்தரவிட்டுள்ளார். முந்தைய ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்திய காரணத்தால், மடத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை மற்றும் அத்தியாவசிய பணிகளை கவனிக்க் தவறியுள்ளதாக் கூறப்படுகிறது. இப்போது பொறுப்பேற்றுள்ள புதிய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவுகள் ஆதீன மடத்தின் மரபுகளை மீட்பு செய்து காக்கும் என மடத்தில் பக்தர்கள் பக்கம் நம்பிக்கை பிறக்கின்றன.
புதிய ஆதினமாக பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை ஆதீன மடத்தின் பழமை வாய்ந்த பல்லாக்கில் அமர வைத்து சன்னியாசிகள் , தம்பிரான்கள் , ஆதீன மட பணியாளர்கள் உள்ளிட்டோர் தூக்கிச் சென்ற. பல்லாக்கு மதுரை ஆதீனம் மடத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் உலாவந்து பின்னர் மதுரை ஆதீனம் மடம் வந்தடைந்தது. பட்டணப் பிரவேச நிகழ்வில் தருமாபுர ஆதீனம் , கோயமுத்தூர் காஞ்சிபுரி ஆதீனம் , என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆதீனங்கள் தம்பிரான்கள் சன்னியாசிகள் பங்கேற்றனர்.
பல்லாக்கில் பவனி வந்த ஆதீனத்திடம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆசீர்வாதம் பெற்று பிரசாதம் வாங்கிச் சென்றனர். பல்லாக்கு ஊர்வலத்திற்கு முன்னர் கோயில் யானைகள் , ஒயிலாட்டம் , கரகாட்டம் , மேள தாளங்கள் முழங்க , நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதுரை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கருத்துகள்