மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மற்றும் பழ.நெடுமாறன் இரங்கல்
மதுரை ஆதீனம் மறைவு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு. எல். முருகன் இரங்கல்
மதுரை ஆதீனம் மறைவுக்கு அமைச்சர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் மடாதிபதியாக 40 ஆண்டுகளாக தொண்டாற்றிய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு செய்தி அறிந்து துயரமடைந்தேன்.
மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர், இவர் 1980-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இந்த ஆதீனத்தின் மடாதிபதியாக பொறுப்பில் இருந்தவர். பல கோவில்களின் குடமுழுக்கு விழாக்களை முன்னின்று சிறப்பாக நடத்திய பெருமை இவருக்கு உண்டு. ஏராளமான பள்ளி, கல்லூரி, கோவில் நிகழ்ச்சிகளில் இவர் சொற்பொழிவாற்றி உள்ளார்.
மறைந்த மடாதிபதி அருணகிரிநாதர் அவர்கள் பூர்வாசிரமத்தில் பத்திரிகையாளராக பணியாற்றியுள்ளார். ஆன்மிக உலகின் முது பெரும் மடாதிபதி அருணகிரிநாதரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கும் ஆதீனத்தின் பொறுப்பாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
- பழ. நெடுமாறன் இரங்கல்
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
மதுரை திருஞான சம்பந்தர் மடத்தின் தலைவர் தவத்திரு அருணகிரிநாத அடிகளார் மறைந்த செய்தி உலத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.
ஈழத்தமிழர் பிரச்சனையில் முழுமையாக ஆதரவு தந்த சைவ மட ஆதீனகர்த்தர் அவர் ஒருவரே.
நியுயார்க்கிலும் இலண்டனிலும் நடைபெற்ற உலகத் தமிழீழ ஆதரவு மாநாடுகளிலும் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவு கூட்டங்களிலும் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு திரட்டிய பெருமை அவருக்கு உண்டு.
அவரின் மறைவு தமிழுக்கும் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.
அவருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் வீர வணக்கம் செலுத்துகிறேன்.
அன்புள்ள,
(பழ.நெடுமாறன்)
தலைவர்.
கருத்துகள்