கடல் உணவு துறைக்கு அனைத்து ஆதரவையும் அரசு வழங்கும்: டாக்டர் எல் முருகன்
கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதியை பெரியளவில் உயர்த்துவதற்கு தேவையான கொள்கை ரீதியான அனைத்து ஆதரவையும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு வழங்கும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று கூறினார்.
சென்னையில் நடைபெற்ற கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய அவர், “கடல்சார் பொருட்களின் ஏற்றுமதிகளை பாதிக்கும் பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று கூறினார்.
2014-15 முதல் 2018-19 வரை சராசரியாக 10.2% வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் இந்தியாவில் மீன்வளத் துறை வியக்கத்தக்க வளர்ச்சியைக் எட்டியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
“2019-20-ம் ஆண்டில் இந்தியாவில் மீன் உற்பத்தி வரலாறு காணாத அளவில் 141.56 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்தது. சர்வதேச அளவில் இந்திய மீன் உற்பத்தி சுமார் 8% ஆக உள்ளது மற்றும் மீன் வளர்ப்பில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது," என்று அவர் கூறினார்.
கொவிட் -19 பெருந்தொற்று மற்ற பல துறைகளைப் போலவே கடல் உணவு துறையையும் பாதித்துள்ளது என்று கூறிய அவர், இருந்தபோதிலும் நமது கடல் பொருட்கள் ஏற்றுமதி மீண்டு வருவதாகவும், இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மீனவர்கள் மற்றும் மீன்வளத் தொழில்களின் நலனுக்காக அரசாங்கம் எடுத்துள்ள பல்வேறு முயற்சிகளை பட்டியலிட்ட டாக்டர் எல் முருகன், பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ 20050 கோடி முதலீட்டில் பிரதமரின் மத்ஸ்ய சம்படா யோஜனாவை (PMMSY) தொடங்கியுள்ளார் என்று கூறினார்.
இந்த நிகழ்வில், இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் கவலைகள் சிலவற்றை வெளிப்படுத்தினர். இவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
"மாண்புமிகு பிரதமர் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளார். இந்திய கடல் மீன்வள மசோதா 2021-ஐ அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. அனைத்து பிரச்சினைகளையும் நாங்கள் கருத்தில் கொள்வோம், தேவையான தீர்வுகளை அரசு அளிக்கும்," என்று டாக்டர் எல் முருகன் கூறினார்.
இதன்பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
கருத்துகள்