கடலூரில் காணொளி காட்சி வாகனங்கள் மூலம் பிரச்சாரம்-மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்
சென்னையிலுள்ள மத்திய அரசின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் 75 ஆவது இந்திய சுதந்திரப் பெருவிழா & கோவிட்-19 தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த வீடியோ வேன்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளன. கடலூர் மாவட்டத்திற்கான இந்த வீடியோ வேன் பிரச்சாரத் துவக்க விழாவை புதுச்சேரியில் உள்ள மக்கள் தொடர்பு கள அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.
நேற்று காலை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுtலகத்தில் இந்த வீடியோ வேன் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கி.பாலசுப்பிரமணியம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த அனைவரும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமே மூன்றாம் அலை வராமல் தடுக்க முடியும். பொதுமக்கள் அனைவரும் தொற்றைத் தடுக்கும் நடத்தை முறைகளை தொடர்ந்து கடைபிடித்து வர வேண்டும் என்று ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார். கோவிட்-19 தடுப்பூசி குறித்த துண்டு பிரசுரங்களையும் ஆட்சியர் விநியோகித்தார்.
இந்த துவக்க நிகழ்ச்சிக்கு கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்ப்பன் தலைமை வகித்தார். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா, மாவட்ட மலேரியா அலுவலர் டாக்டர் ஆர்.கஜபதி, மாவட்ட தாய் சேய் அலுவலர் சசிகலா மற்றும் உதவி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் பாலமுருகன் ஆகியோர் இத் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த வீடியோ வேன் இன்று கடலூர், கடலூர் முதுநகர், வடலூர், நெய்வேலி, விருத்தாசலம் மற்றும் பெண்ணாடம் ஆகிய பகுதிகளிலும் ஆகஸ்ட் 23 ல் சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோயில், குமராட்சி, சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.
இந்த வீடியோ வேன் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் முனைவர் தி.சிவக்குமார் செய்திருந்தார்.
கருத்துகள்