ஆயுஷ் வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தத்தை குறைத்து செயல்திறனை அதிகரிக்க ‘ஒய்-பிரேக்’ செயலியை பயன்படுத்த வேண்டும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் முன்ஜ்பாரா வலியுறுத்தல்
வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தத்தை குறைத்து செயல்திறனை அதிகரிக்க ‘ஒய்-பிரேக்’ செயலியை பயன்படுத்த வேண்டும் என மத்திய இணையமைச்சர் டாக்டர் முன்ஜ்பாரா கூறியுள்ளார்.
ஆயுஷ் அமைச்சகத்தின் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு வார கொண்டாட்டம், ‘யோகா பிரேக் செயலி’ பயன்பாடு குறித்து இணைய கருத்தரங்குடன் நிறைவடைந்தது. இந்த இணைய கருத்தரங்கில், நாடு முழுவதும் இருந்து நிபுணர்கள், ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
இந்த இணைய கருத்தரங்கை தொடங்கி வைத்த ஆயுஷ் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் முன்ஜ்பாரா மகேந்திரபாய் கூறுகையில், ‘‘ ஒய்-பிரேக் நெறிமுறையில் உள்ள யோகாசனங்கள், மார்பு கூட்டை விரிவடையச் செய்து இதய அமைப்பு சிறப்பாக செயல்பட உதவுகிறது. நாடு முழுவதும் உள்ள மக்கள், பணி செய்யும் இடத்தில், மன அழுத்தத்தை குறைத்து செயல்திறனை மேம்படுத்த இந்த எளிய மற்றும் பயனுள்ள நெறிமுறையை பின்பற்றுவார்கள் என நம்புகிறேன்’’ என்றார்.
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாட, நடத்தப்படும் அம்ரித் மகோத்ஸவம் ஆண்டு முழுவதும் தொடரும். பல நிகழ்ச்சிகளை நடத்த ஆயுஷ் அமைச்சகம், ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை ஒதுக்கியது. அப்போது ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் மற்ற 4 மத்திய அமைச்சர்களுடன் இணைந்து ஒய்-பிரேக் கைப்பேசி செயலியை விஞ்ஞான் பவனில், கடந்த 1ம் தேதி நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் 75,000 ஹெக்டேர் நிலத்தில் மருத்துவ தாவரங்களை நடுதல், மக்களுக்கு மூலிகை கன்றுகளை வழங்குதல், அயுஷ் முறையை பிரபலப்படுத்தும் இணைய கருத்தரங்குகள், கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் ஆயுஷ் முறைகளின் பங்கு உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகள் 2022 ஆகஸ்ட் வரை தொடரும்.
கருத்துகள்