ஆளுகை தொடர்பான அனைத்து அம்சங்களுக்குமான மிகப்பெரிய வள மையமாக இந்திய பொது நிர்வாக நிறுவனம் வளர மத்திய அமைச்சர் வாழ்த்து
பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஆளுகை தொடர்பான அனைத்து அம்சங்களுக்குமான மிகப்பெரிய வள மையமாக இந்திய பொது நிர்வாக நிறுவனம் வளர வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் (ஐஐபிஏ) செயற்குழு கூட்டத்திற்கு இன்று தலைமை வகித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், ஆளுகை மற்றும் நிர்வாகம் தொடர்பான அனைத்து அம்சங்களுக்குமான மிகப்பெரிய வள மையமாக இந்திய பொது நிர்வாக நிறுவனத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் முன்னணி நிறுவனமாக அது திகழும் என்றும் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய அடுத்த 25 ஆண்டுகளுக்கான எதிர்கால லட்சியத்தை இந்த நிறுவனம் கொண்டிருக்க வேண்டும் என்றும், இதை அடைய ஒத்த துறைகள்/அமைப்புகள்/நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை நிறுவனம் வகுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் திறந்த நிலையில் இருப்பது ஐஐபிஏ-க்கு உரிய பெருமையை அடைய உதவும் என்று அவர் கூறினார்.
கொவிட்-19 பெருந்தொற்றின் போது 66 ஆன்லைன் படிப்புகள், 46 இணைய கருத்தரங்குகள் மற்றும் 60 ஆராய்ச்சி ஆய்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐஐபிஏ ஆற்றிய பணியை பாராட்டிய அமைச்சர், சிறப்பான திறனைக் கொண்டுள்ள ஐஐபிஏ, சிறந்த நிபுணர்கள் மற்றும் பரந்த அளவிலான நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
கருத்துகள்