சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் சாய்ந்ததில் பெண் காவலர் பலியானார் ரூபாய்.10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் சாய்ந்ததில் பெண் காவலர் பலியானார் ரூபாய்.10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மரம் விழுந்து இறந்து போன பெண் காவலர் கவிதா தலைமை செயலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்
சென்னையில் நேற்றிரவில் பெய்த கன மழை காலை வரை நீடித்தத நிலையில் இன்று காலையில் 8 மணியளவில் பெருமழை
பலத்த காற்றுடன் பெய்தது காலை 9.10 மணியளவில் பெண் காவலர் கவிதா தலைமைச் செயலக காவல் பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் தலைமைச் செயலகத்துக்குள் சென்று கொண்டிருந்தபோது மழையில் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகமருகில் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பிய நிலையில் மழையுடன் வீசிய பலத்த காற்றில் பெரிய புங்கை மரம் திடீரென வேரோடு சாய்ந்து பெண் காவலர் கவிதாவின் மீது விழுந்தததில் மரத்துக்கு அடியில் அவரது தலை சிக்கியதில் தலை நசுங்கி இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்.
தலையில் சிறிய தலைக்கவசம் மற்றும் மழை அங்கி அணிந்து பணிக்கு வந்திருந்தார். மரம் விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கியதில் அவர் அணிந்திருந்த சிகப்பு நிற ஹெல்மெட் தனியாக வந்து விழுந்தது.
உடனடியாக பெண் காவலர் உடலை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். மரமறுக்கும் எந்திரங்கள் மூலம் மரக்கிளைகளை அகற்றி நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அவரது உடலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மரம் சாய்ந்து விழுந்தபோது தலைமைச்செயலக வளாகத்துக்குள் சில காவலர்களும் பணியிலிருந்த நிலையில் மரம் விழுந்த இடத்தில் போக்குவரத்துக் காவலர் முருகன் பணியிலிருந்துஈஈஒ ஈஈ
மரம் விழுந்ததில் சிக்கிக்கொண்டதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மரத்தை அகற்றும் பணியின் போது பணியிலிருந்த தீயணைப்பு வீரர்கள் செந்தில்குமார், ராஜா, கோபு ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உயர் காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த பெண் காவலர் கவிதா திருமணமாகி தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கணவர் சாய்பாபா. இரயில்வே ஊழியர். மகன் அருண்குமார். 22 வயது என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கிறார். மகள் சினேகபிரியா 20 வயது பி.எஸ்.சி. நர்சிங் படிக்கிறார்.
முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்தவருக்கு இன்று காலையில் தலைமைச் செயலகத்தில் காவல் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
அதற்காக காலையில் வ
வேலைக்கு வந்த போதுதான் பழமையான மரம் பெண் காவலர் கவிதாவின் உயிரைப் பறித்தது.
உடனடியாக தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் :-
இன்று (2 ஆம் தேதி) காலை சுமார் 9 மணியளவில் தலைமைச் செயலக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது.
அப்போது அங்கே காவல் பணியில் இருந்த முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் கவிதா மரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.
பணியில் இருக்கும்போது உயிரிழந்த தலைமைக் காவலர் கவிதா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த கவிதா குடும்பத்தாருக்கு உடனடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
பலியான கவிதா இன்று காலை வீட்டில் இருந்தவர்களிடம் வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக சந்தோஷத்துடன் கூறிவிட்டு வந்தார். எதிர்பாராதவிதமாக மரம் சாய்ந்து பலியானதில் மீட்கப்பட்ட கவிதாவின் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது.
தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் சென்னையில் காவலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைமைச் செயலக ஊழியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இன்று காலை 9.10 மணியளவில் மரம் சாய்ந்ததால் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லை.
காலை 10 மணிக்கு பிறகு முதல்- அமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிப்பதற்காக பொது மக்கள் அங்கு அதிகளவில் திரண்டிருப்பார்கள். அது போன்ற நேரத்தில் இந்த மரம் விழுந்திருந்தால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத்தில் உள்ள பழமையான மற்ற மரங்களை பாதுகாக்கும் வகையில் அதன் அடிப்பகுதியை போதுமான அளவுக்கு பலப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. தற்போது வேரோடு சாய்ந்து விழுந்த மரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது
பெண் போலீஸ் உயிரிழந்தது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மரம் சாய்ந்து விழுந்த இடத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி.சைலேந்திரபாபு ஆகியோர் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மரம் விழுந்தது தொடர்பாக அங்கிருந்த காவலர்களிடமும், அதிகாரிகளிடமும் விவரங்களைக் கேட்டறிந்தனர். தலைமைச் செயலக வளாகத்தில் இது போன்று மேலும் ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இருவரும் அங்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
கருத்துகள்