மத்திய அமைச்சர் ஆனபின், கேரளாவுக்கு முதல் முறையாக ராஜீவ் சந்திரசேகர் அரசுமுறைப் பயணம்
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, திறன் மேம்பாடு மற்றும் தொலைமுனைவுத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திர சேகர் கேரளாவில் நாளை முதல் நவம்பர் 13ம் தேதி வரை, 3 நாள் அரசு முறையப் பயணம் மேற்கொள்கிறார். திரு நரேந்திர மோடி அமைச்சரவையில் சேர்ந்தபின் இவர் முதல் முறையாக சொந்த மாநிலமான கேரளாவுக்கு வருகிறார்.
கேரளாவில் இவர் முதன் முதலாக செல்போன் நெட்வொர்க் கட்டமைப்பை ஏற்படுத்தியவர் மற்றும் மீனவர்கள் இடையே வயர்லெஸ் நெட்வொர்க்கையும் ஏற்படுத்தினார். இதன் காரணமாக மீனவர்களின் வருவாய் அதிகரித்தது.
நாளை முதல் கேரளாவில் 3 நாள் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கொச்சியில் உள்ள டிஆர்டிஓ கடற்படை ஆய்வு மையத்தை பார்வையிடுகிறார். அங்கு அவருக்கு ஆய்வகத்தின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
இந்தியாவில் துடிப்பான தொடக்க நிறுவனங்களை உருவாக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்கு குறித்து, தொடக்க நிறுவனங்களுடன் அவர் பகிர்ந்து கொள்கிறார். கொச்சியில் உள்ள கின்ப்ரா ஹைடெக் பூங்காவை 12ம் தேதி பார்வையிட்டு, தொழில்முனைவோர்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.
நவம்பர் 13ம் தேதி அன்று, திருவனந்தபுரத்தில் மீன் ஆராய்ச்சி மையம் மற்றும் சிடிஏசி தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றையும் பார்வையிட்டு, தற்சார்பு இந்தியா தொலைநோக்கு குறித்த ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். புதிய சைபர் தடையவியல் மையம் மற்றும் டிஜிட்டல் தடையவியல் மையம் மற்றும் நீர்மூழ்கி ட்ரோன் ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார்.
எர்ணாகுளத்தில் ஜன் சிக்ஷா சன்ஸ்தான், திருவனந்தபுரத்தில் தேசிய திறன்மேம்பாட்டு பயிற்சி மையம் ஆகியவற்றையும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பார்வையிடுகிறார். பயனாளிகளை சந்தித்து பேசும் அவர், தனது அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறுகிறார்.
கருத்துகள்