பழநி தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத்திரையாகச் சென்ற, நெற்குப்பை நாட்டுக்கோட்டை நகரத்தார் எடுத்துவந்த 422 ஆண்டுகள் பழமையான தங்கவேல்,
தாமிரவேல் திருடப்பட்டதால் அதிர்ச்சியாகியுள்ளனர்.
பழநி தைப்பூச விழாவையொட்டி ஆண்டுதோறும் சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டு பகுதியைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார், நாட்டார் பல குழுவினர் காவடி எடுத்து பாதயாத்திரையாக பழநிக்கு செல்வர்.
காரைக்குடி வட்டத்தில் கண்டனுாரிலிருந்து காவடியுடன் வைரவேல், மேலசிவபுரியில் இருந்து தாமிரவேல், நகரத்தார் ரத்தினவேல், நெற்குப்பையில் இருந்து தங்கவேல், தாமிர வேலுடனும் செல்வர்.
நெற்குப்பை நகரத்தார் 1601 ஆம் ஆண்டு முதல் 422 ஆண்டுகளாக காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இவர்கள் நெற்குப்பையிலுள்ள பழநிக் கோயில் வீட்டிலிருந்து, பழமையான தலா 3.5 இன்ச் நீளமுள்ள தங்கவேல் மற்றும் தாமிரவேலை எடுத்துக் கொண்டு 95 காவடிகளுடன் பாதயாத்திரையாக கிளம்பி நத்தம் திண்டுக்கல் வழியாக பழநியை அடைவர். ஜனவரி.13 ஆம் தேதி நத்தம் சமுத்திராபட்டி வந்தடைந்தனர். அங்கு வழக்கம் போல் பழநியாண்டவர் முருகன் மண்டபத்தில் தங்கினர்.
ஜனவரி.,14 ஆம் தேதி அதிகாலையில் பாதயாத்திரை கிளம்புவதற்காக வேல் வைத்துள்ள கருவறைக்குச் சென்று பார்த்தபோது 2 வேல்களையும் காணவில்லை. அதிர்ச்சிமடைந்த பக்தர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
பயணத் திட்டத்தின் படி தைப்பூசத்திற்கு முதல் நாள் ஜனவரி.17 ஆம் தேதியில் பழநி சென்று சேர வேண்டும். ஆனால் வேல் கிடைக்காததால் சமுத்திராபட்டியிலேயே தங்கினர்.
பின்னர் வேறு வழியின்றி புதிய வேல் தயாரித்து எடுத்து வந்தனர். அதன்பின் மீண்டும் நேற்று மாலை 3:00 மணிக்கு மேல் புதிய வேலை வைத்து பூஜை செய்து, பாதயாத்திரையைத் தொடங்கினர்.
பழநியிலுள்ள நகரத்தார் மண்டபத்தில் குன்றக்குடி, கண்டனூர், மேலசிவபுரி காவடிக் குழுவினர்களுடன் சேர்ந்து அவரவர் கொண்டு வரும் வேல்களுடன் வழிபாடு நடத்துவர். பின் தைப்பூசம் முடிந்து 2 நாட்களுக்குப் பிறகு ஜனவரி.20 ஆம் தேதியில் இந்தக் குழுவினர் காவடி, வேல்களுடன் மலைக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்பர். மேலைச்சிவபுரி வேல் வழிபாடு
சங்ககால நடைமுறை, அதன் பின் எழுந்த வேல் தனித்த தெய்வமாக ஆக்கப் பெற்ற நடைமுறை இரண்டும் இன்னமும் தமிழ்நாட்டின் சிலபகுதிகளில் நடைபெற்று வருகின்றன. "பழநியில் நடைபெறும் தைப்பூசத்திற்குச் 400 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே நெருக்குப்பை, கண்டனூர், காரைக்குடி, தேவக்கோடடை முதலிய இடங்களிலிருந்து , பாதயாத்திரை மேற்கொண்ட செய்தியை காப்புகளுடன் சென்ற செய்தியை கி. பி. 1788 ல் தோன்றிய செப்பேட்டுப் பட்டயங்கள் நன்கு விளக்குகின்றன.
இவ்வாறு தைப்பூசத்திற்குச் செல்லும் வேல்களுள் ஒன்றாகச் சிவபுரி வேலும் விளங்குகின்றது.
மேலைச்சிவபுரி வேல் வரலாற்றுப் பின்னணி மிகவும் பழமையானது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே 3. கி. மீ தொலைவில் மேலைச்சிவபுரி உள்ளது. சைவம் தமிழ் இரண்டையும் வளர்க்கும் சன்மார்க்கசபை, கணேசர் செந்தமிழக் கல்லூரி இரண்டையும் கொண்டு தமிழுலகில் தனியிடம் பெற்றுத் திகழ்கிறது. அதனுடன் சுப்பையா கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோயிலில் சக்தி வேலாயுத சுவாமி என்ற வேல் வழிபடு கடவுளாக உள்ளது. இக்கோயில் எழுப்பப்படக் காரணம் சிறப்பிற்குரியதாகும்.
மேலைச்சிவபுரிக்கு அருகில் 2. கி. மீ தொலைவில் உள்ள பிடாரம்பட்டி கிராமத்தில் சுமார் ஆறு தலைமுறைகளுக்கு முன்னால் முத்தப்ப செட்டியார் என்பவர் வசித்து வந்தார். இவருடனே , நாட்டுக்கோட்டை நகரத்தார் சோழநாட்டின் மகுட வைசியர் மரபில் வந்த செட்டியார் சிலரும் வசித்துவந்தனர். அப்போது மேலைச்சிவபுரி ஊரார்கள் செட்டியார்கள் இல்லாததால் . முத்தப்ப செட்டியாரை மேலைச்சிவபுரிக்கு அழைத்து வந்தனர்.
முத்தப்பசெட்டியார் சிறந்த முருகபக்தர். இவர் வருடம் தோறும் பழனிக்கு மேலைச்சிவப்புரியிலிருந்து, தைமாதம் கார்த்திகை அன்று, காவடிகட்டி பாதயாத்திரையாகச் செல்வது வழக்கம், சென்று வந்தபின் தம்வீட்டில் செவ்வாய் கிழமை தோறும் முருக பூஜை செய்து திருவிளையாடல்கள் புரிந்து வந்தார். எனவே அவரின் வீடு கோவில் வீடு என்றழைக்கப்பட்டது.
இவரின் திருவிளையாடல் புகழ் பெற்று புதுக்கோட்டை மன்னர் ராஜா மருதப்பத் தொண்டைமான் அரண்மனை வரை சென்றது. எனவே அரசரும் முத்தப்பச் செட்டியார் இல்லம் வந்து சிவ அருள் வாக்குகள் கேட்டார். பழனியாண்டவர் அருளால் அவர் சொன்ன வாக்குகள் மெய்ம்மையுற , அரசர் செட்டியாருக்கு பொற்சால்வை, மோகரா மாலை, வளைதடி, குத்தீட்டி தந்து வேறென்ன வேண்டும் என்றார். அதற்குச் செட்டியார் தம் கோவில் வீட்டுக்கு ஒரு தாமிர வேல் சாஸ்திரப்படி செய்து தரவேண்டும் என்றார். அரசரும் செய்து தந்து, பழனி அன்னதான மடத்தில் வேலை நிறுத்திப் பூசை செய்யவும் வேண்டிய உத்தரவுகளைச் செய்தார். இவ்வாறு முத்தப்பச் செட்டியார் காவடி கட்டிப் புறப்பட்டு, வேல் எடுத்துச் செல்லும் முறை ஆண்டுதொறும் இன்றுவரை நடைபெற்று வருகின்றது.
மேலைச்சிவபுரியில் உள்ள சுப்பையா கோவில் `வேல்' வழிபாட்டு முறையைக் கொண்டிருப்பினும் அது, முருகனுக்கு ஈடான பெருமை பெற்றதாகும். புதுக்கோட்டை மன்னர் பரம்பரை மருதப்பத் தொண்டைமானுக்குப் பிள்ளை இல்லாத குறையை இவ்வேல் போக்கியது என்ற வரலாறும் வழங்கப் பெறுவது இக்கருத்திற்குச் சான்று பயப்பதாகும்.
இவ்வாறு முத்தப்ப செட்டியார் செய்த பணியை, அவரின் பரம்பரையாக வந்த முன்று கரைக்காரர்களும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். முரு. ஆறு . ஆறுமுகம் செட்டியார், முருகுமணி, ஆளு. சுப. ஆறுமுகம் , சட்ட ஆறுமுருகப்பன் , ஆறு, சுப்பபையா, ஆறு. கதிரேசன், ஆறு. அண்ணாமலை, ஆறு. முத்தப்பன், ஆறு . சண்முகம், சுப. முருகப்ப செட்டியார், முரு. பழனியப்பன், முரு. ஆறுமுகம், சுப. பழனியப்பன் , பழ. சுப்பிரமணியன், பழ. முருகப்பன், மு. அண்ணாமலைச் செட்டியார், அண. சுப்பிரமணியம், அண. முத்துராமன், பழ. ஆதிமுலம் போன்றோர் இப்போது இப்பணியைத் தொடர்ந்து வருகின்றனர்
சுப்பையா கோவில் என்று இக்கோவில் அமைக்கப்பட்டாலும் கோவிலுக்கான முழு அமைப்பையும் பெறவில்லை. ஏனென்றால் இது நகரத்தார் பங்காளிகள் செய்து கொள்ளும் படைப்பு வீடு. அதாவது ஒரு தெய்வாம்சம் நிரம்பிய வீடாகும். என்றாலும் முன் மண்டபம் , கோபுரம் போன்ற அமைப்புடன் கூடிய உள் மண்டபம் என்ற அமைப்போடு விளங்குகிறது.
உள் மண்டபத்தில் மரக் கேடகத்துள், புதுக்கோட்டை மன்னர் தந்த தாமிரவேல் ஒன்றும், சிறுவேல் ஒன்றும் உள்ளன. இது தவிர, இடும்பன் ஆயுதமான இரும்புத்தடி ஒன்றும் உள்ளது.
இவற்றுள், மன்னர் தந்த வேல் பதினைந்து நாட்கள் பழனி நடையாத்திரையின் போது எடுத்துச் செல்லப்படுகின்றது. சிறுவேல், பெரியவேல் பழனி செல்லும் காலத்தில் கோவில் தெய்வமாக வணங்கப்பட்டுகிறது. இச்சிறுவேல் முன்னொரு காலத்தில் பங்குனி உத்திரத்தின் போது குன்றக்குடி கோவிலுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நடைமுறை இப்போது பின்பற்றப் படவில்லை மேலும் இச்சிறுவேல் மன்னர் தந்த வேலுக்கு முன்னதாக முத்தப்பச் செட்டியாரால் பழனிக்குக் கொண்டு செல்லப் பட்டிருக்கக் கூடும் என்ற ஒரு செய்தியும் நிலவுகின்றது. இடும்பனுக்கு உள்ள தடிக்கு அபிஷேகம், தீபாராதனை செய்யப்படுகின்றன. மற்றவை ஏதும் இல்லை
படைப்பு வீடு என்பதால் மற்ற கோவில்கள் போலத் தினசரி வழிபாடுகள் கட்டாயப் படுத்தப் படவில்லை . வாரந்தோறும் வரும் வெள்ளி, மாதம்தோறும் வரும் கார்த்திகை, தினங்களில் அபிஷேகம் , தீபாராதனை முதலியன செய்யப் படுகின்றன. இவை தவிர நெய்வேத்தியம் போன்றனவும் கட்டாயப் படுத்தப்படவில்லை. விரும்பி எவர் எது தரினும் படைக்கப்பட்டுப் பக்தர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகின்றது.
பொங்கல் தினத்தில் சர்க்கரைப் பொங்கல் வைக்கப் பட்டுப் படையல் செய்யப் படுகின்றது. சிவராத்திரியின போது ஆறுகாலப் பூஜை நடைபெறுகின்றது.
ஆண்டு தோறும் தைப்பூச விழாவை முன்னிட்டு, நடையாத்திரை சிறப்புற நடை பெற்று வருகின்றது. நடையாத்திரையை வழி நடத்திச் செல்வது வேலே ஆகும் . எவ்வூரினரும் மேலைச்சிவபுரியைக் கடந்து நடை பயணம் பழனிக்கு மேற்கொள்வாராயின் இக்கோயிலுக்கு வந்து விபூதி பெற்றே செல்வர். எனவே தைப்பூச நடையாத்திரையின் போது சிறப்பு வழிபாடுகள் இயற்றப் படுகின்றன.
பெரிய கார்த்திகை (கார்த்திகை தீபம்) அன்று கோவில் வீட்டு வேல் கொண்டு செல்லும் சாமியாடி மாலையிட்டுக் கொள்கின்றார். தூய விரதம் மேற்கொண்டு அன்று முதல் தினசரி அபிஷேகம் , பஜனை செய்கின்றார். அவருடன் கோவில் வீட்டுப் பங்காளிகள் , ஊர்மக்கள் இணைந்து பக்திப் பாடல்கள் இசைக்கிறார்கள்.பாதயாத்திரை விழா: தைப்பூசத்திற்கு 5 நாள் முன்னதாக வரும் கார்த்திகை அன்று பாத யாத்திரை தொடங்கப் பெறுகின்றது. அக்கார்த்திகை அன்று, படைப்பு வீடு, கழுவிச் சுத்தம் செய்யப் பெற்று, மாவிலை, விளக்குகள், பூக்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப் பெறுகின்றது. பின்னர் காவடி கட்டுபவர்கள் அங்கு காவடி கட்டுகிறார்கள் சிலர் வீட்டிவிருந்தே காவடியுடன் வந்து இங்கு சேர்கின்றனர். மதியம் அன்னதானம் நடைபெறுகிறது . அன்னதானம் படைப்பு வீட்டைச் சார்ந்த திருமண மண்டபத்தில் , பழனி முருகன் படம் முன்பு படையலிடப்பட்டுப் படைக்கப் படுகின்றது. இரவு நடையாத்திரை தொடங்கப் பெறுகின்றது. வேலை எடுத்துக் கொண்டு சாமியாடிவர , மேளவாத்தியம். கொட்டு, வேட்டு, மணி,அரோகரா கோஷம் முழங்க, அன்றைய கட்டளை பங்காளியர் பரிவட்டம் கொண்ட, வழியனுப்ப வர, ஊர் எல்லை வரை மக்கள் சென்று வழியனுப்புவர் , வேல் முன்னும் காவடிகள் பின்னும் செல்ல நடையாத்திரை தொடக்கம் பெறுகிறது. வழியில் உள்ள பிரான் மலைச் சிவன் கோவிலில் பானக பூஜை , செய்வித்துச் சமுத்திராபட்டியை வேல் அடையும். மாலை வேலுக்கு அபிஷேகம், ஆராதனை , காவடிக்கு அன்னதானப் பூஜை , செய்து பின் குயவபட்டியை வேல் மற்றும் காவடி அடையும், அதன் பின் அதே முறைப்படி அபிஷேக, ஆராதனை, அன்னதானம் தொடர , செம்மடைப்பட்டி அடைவர், பின் முன்முறைகள் தொடர, குழந்தை வடிவேலன் சன்னதியில் பானக்க பூஜை முடிந்து, காலை 7 மணிக்குக் கடுக்காய்பாறை செல்லும்.
கடுக்காய் பாறையில் வேல் மட்டும் குன்னக்குடி வேலாயுத (வேல்) சுவாமியுடன் இணைந்து பழனி அன்னதான மடம் செல்லும். காவடிக்கும் பாத யாத்திரையினரும் வேல் போனபின் பிரிந்து இடும்பன் குணம் அடைவர். பிறகு தீர்த்தமாடி இடும்பருக்குப் பூஜை செய்து. இடும்பர் மலை தென்பாகத்தில் குன்னக்குடி, மேலைச்சிவபுரிக் காவடிகளுக்கு அன்னதான பூஜை நடைபெறும்.
பழனி அன்னதான மடத்திலிருந்து காவடிகளுக்கு வரவேற்பு தரப்படும்.
மடத்தில் அன்னதானமட பார்வதி அம்மாள் இரும்பு வேலாயுதம், தேவகோட்டை நகரத்தார் சொர்ணரத்தின வேலாயுதம், குன்றக்குடி மடத்து வெள்ளி வேலாயுதம், மேலைச்சிவபுரி தாமிர வேலாயுதம் ஆகியவை ஆறுகால் சவுக்கையில் ஒன்றாய் வைக்கப்பட்டு புனர்பூசம் முதல் ஐந்து நாட்களுக்கு அபிஷேகம் , பூஜை , ஆராதனை நடைபெறும்.
ஆறாம்நாள் காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பழனி தேவஸ்தானத்தில் இந்தத் தொடர் நிகழ்ச்சி காலங்காலாமாய் நிகழ்ந்து வருவதால் இவர்களின் காவடிக்குக் கருவறை சென்று பூஜிக்க தனிச் சிறப்பு அனுமதி அளிக்கப் படுகிறது. பிறகு மலைத்தீபம் ஏழாம் நாள் பார்க்கப்பட்டு, அன்னதான மடத்தில் பரிவட்டம் கட்டும் விழா நடை பெறுகிறது. இதில் முறைகாரர்கள், சாமியாடிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலைச்சிவபுரி நகரத்தார் மட்டும் , பூசத்திற்கு நான்கு நாள் கழித்து ஒரு பஞ்சாமிர்த அபிஷேகம் சிறப்புடன் செய்கின்றனர். இதற்கும் தனித்த அனுமதி உள்ளது.
இவை முடித்தபின் வேல் திரும்பும் விழா நடைபெறுகிறது. காவடிகளும் வேலுடன் திரும்புகின்றன. காவடி எடுக்க வேண்டிக் கொண்டவர்கள் இதில் கலந்து கொள்ளாவிட்டாலும், காவடிகள் மீண்டும் நடைபயணமாகவே கொண்டுவருவத கட்டயமாக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் , சமுத்திராபட்டி, ஆகிய இடங்களில் வேல் நிறுத்தம் பெற்று பூஜை கொள்கிறது. பிறகு சாமியாடிச் செட்டியாரிடம் விபூதிப்பிரசாதம், மரியாதை பெற்று, மேலைச்சிவபுரிக்கு அருகில் உள்ள எடுத்தலங்கண்மாய்க்கு வேல் வர, மீண்டும் ஊர் மக்கள் பங்காளிகள் வரவேற்பு நிகழ வேல் தன்னிடம் சார்கிறது.
இவ்வாறு பதினைந்து நாள் திருவிழா சீரும் சிறப்புமாக லட்சம் மக்களைத் தாண்டி நடையாத்திரை விழா சென்று கொண்டுள்ளது. ஏறக்குறைய வேலின் பயணம் 270 கிலோமீட்டர்களாக இருக்கலாம். வேல் போகும் வழியில், பலவித திண்பண்டங்கள், நீர் ,மோர், இளநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
வேல் புறப்படும் போதும், வரும் போதும் குறிகளும் கேட்கப்படுவதுண்டு, வேலுக்கு அபிஷேகம் மட்டுமே, அன்னதான பூஜை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
காவடி அழகுற தண்டு இணைக்கப் பட்ட , வெல்வெட் துணிகளால் , மயிலிறகால் அழகு செய்யப்பட்ட சக்கரை வைத்துக் கட்டப் பெறுகின்றது. இச் சக்கரையே பிறகு பழனியில் அபிஷேகப் பொருளாகின்றது. இதற்கென கோவில் வீட்டில் 11 ரூபாய் தந்து பதிவு பெற வேண்டும். தூய விரதம் பெரிய கார்த்திகையிலிருந்து காக்கப்பட வேண்டும். துக்க வீடு, புலால் வீடு, முதலியன தவிர்க்கப்படுகின்றன. பச்சை நிற வேட்டிகள், மணி மாலைகள் அணியப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே காவடிக்கு உரியவர்கள் . பெண்கள் வீட்டு விலக்கு நேரங்களில் விரதக்காரர்களுக்குச் சமைப்பதில்லை. கண்ணில் எதிர்படுவதுமில்லை. காவடி செல்லும் போதும் திரும்பி வரும் போதும் நடையிலேயே வரவேண்டும். குளித்த பின்பே காவடியைத் தொட உரிமை உண்டு . நடுவில் இயற்கை உபாதைகள் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையாயின் மீண்டும் குளிக்க வேண்டும். இப்படி பல கட்டுப்பாடுகளை உடைய பழனி யாத்திரை வேல் இந்த ஆண்டு திருடப்பட்ட சம்பவத்தில் பலர் அதிர்ச்சி அடைந்த நிலையில் வேண்டுதல் செய்யும் நிலை.
கருத்துகள்