குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் 2022 பிப்ரவரி 28-வரை நீடிக்கப்பட்டுள்ளது
குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தை 2022 பிப்ரவரி 28-வரை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நீட்டித்துள்ளது. தேவையான நடவடிக்கைகளுக்காக இது தொடர்பான கடிதம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை முதன்மைச் செயலாளர்கள் / செயலாளர்கள், ஆகியோருக்கு எழுதப்பட்டுள்ளது. இதன் நகல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
கொவிட்-19-ஐ உலக சுகாதார நிறுவனம் பெருந்தொற்றாக அறிவித்த 11.03.2020 தொடங்கி, 28.02.2022 வரை கொவிட் பெருந்தொற்று காரணமாக பெற்றோர்கள் இருவரையும் அல்லது உயிருடன் இருந்த பெற்றோரில் ஒருவரை அல்லது சட்டரீதியான பாதுகாவலரை / தத்தெடுத்த பெற்றோர்களை / தத்தெடுத்த ஒற்றைப் பெற்றோரை இழந்த குழந்தைகள் இந்தத் திட்டத்தில் பயன் பெற தகுதி உள்ளவர்கள். பெற்றோர்கள் இறந்த நாளில் சிறார்களுக்கு 18 வயது பூர்த்தியாகாமல் இருந்திருக்க வேண்டும்.
இத்தகைய சிறார்களுக்கு பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து கல்வி, சுகாதாரம், ஆகியவற்றுக்கு நிதி அளிக்கப்படுவதோடு, 18 வயதிலிருந்து மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. 23 வயது அடையும் போது மொத்தமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் https://pmcaresforchildren.in என்ற இணையப்பக்கத்தின் மூலம் இணையலாம். இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியான குழந்தைகள் தொடர்பாக நிர்வாகத்திற்கு எந்தக் குடிமகனும் இணையப் பக்கத்தின் மூலம் தகவல் தெரிவிக்கலாம்
கருத்துகள்