காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை.எல்லையோர காவல் படையை சேர்ந்த 38 வீராங்கனைகள் மோட்டார் சைக்கிள் பயணம்
எல்லையோர காவல் படையை சேர்ந்த 38 வீராங்கனைகள் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மோட்டார் சைக்கிள் பயணம்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி எல்லையோர காவல் படையை சேர்ந்த 38 வீராங்கனைகள் காஷ்மீரிலிருந்து பைக் பயணமாக கன்னியாகுமரி வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு குமரி ஜவான்ஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி எல்லையோர காவல் படை வீராங்கனைகள் காஷ்மீரிலிருந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துடன் இணைந்து, இன்ஸ்பெக்டர் ஹிமான்ஷு சிரோஹி தலைமையிலான பிஎஸ்எஃப் சீமா பவானி ஆல் வுமன் டேர்டெவில் மோட்டார் சைக்கிள் குழுவைச் சேர்ந்த 38 பேர் கன்னியாகுமரி வந்து சேர்ந்தனர்.
"பெண்களுக்கு அதிகாரம்" என்பதை வலியுறுத்தும் வகையில் 4884 கி.மீ.கள் பயணம் செய்து குமரி வந்து சேர்ந்தனர். காஷ்மீரில் இருந்து புறப்பட்ட அவர்கள், சண்டிகர், அமிர்தசரஸ், அட்டாரி, பிகானேர், ஜெய்ப்பூர், உதய்பூர், காந்திநகர், கவாடியா, நாசிக் போன்ற பல்வேறு நகரங்களுக்குச் சென்று இன்று குமரி வந்தடைந்தனர்.
கன்னியாகுமரியை சேர்ந்த வீரர்கள் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பை அவர்களுக்கு அளித்தனர். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் வந்து இந்த பயணத்தை நிறைவு செய்த பின்னர் விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை பின்புலமாக வைத்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிஎஸ்எஃப் டிஐஜி திரு பேபி ஜோசஃப், நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் முக்கிய பங்கை எடுத்துரைத்ததுடன், நாடு முழுவதும் உள்ள இளம் பெண்களை ஊக்குவிப்பதோடு, படைக்கு கவுரவத்தை ஈட்டிய இந்த பயணத்தின் அனைத்து வீராங்கனைகளின் அயராத முயற்சிகளையும் பாராட்டினார்.
இந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்ததற்காகவும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் செய்தியை பரப்பியதற்காகவும் அனைத்து வீராங்கனைகளுக்கும் பிஎஸ்எஃப் தலைமை இயக்குநர் திரு பங்கஜ் குமார் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
கருத்துகள்