குந்தா தாலுகா கரியமலை கிராமத்தில் கையூட்டு வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
கிராம நில கணக்கு சிட்டாவில் பெயர் சேர்க்க ரூபாய் நான்காயிரம் இலஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவிற்குட்பட்ட கரியமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜ். இவர் தனது நிலம் தொடர்பான சிட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலரான லதா(வயது 35) விடம் விண்ணப்பித்தார். சிட்டாவில் பெயர் சேர்க்கவேண்டுமானால் இடைத்தரகரான கண்ணன் என்பவர் மூலம் சுந்தர்ராஜிடம் ரூபாய் நான்காயிரம் ஆயிரம் இலஞ்சமாகக் கேட்டது குறித்து அவர், ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் கொடுத்தார். அதன் பின்னர் அவர்களின் ஆலோசனையின் பேரில் பினாப்தலின்
இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் கொண்டு வந்ததையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையின் துணைக் கண்காணிப்பாளர்(பொறுப்பு) திவ்யா மேற்பார்வையில் லஞ்ச ஒழிப்பு துறை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுந்தர்ராஜிடம் கொடுத்து, கிராம நிர்வாக அலுவலரிடம் அரசு தரப்பில் சாட்சி முன் வழங்கக் கூறினர். அதன்படி அவர் இன்று மாலை நான்கு மணியளவில் இடைத்தரகர் கண்ணனுடன் குந்தா தாலுகா அலுவலகத்துக்கு சென்று
அங்கு பணியிலிருந்த லதாவிடம் அவர் கேட்ட இலஞ்சப்பணத்தைக் கொடுத்தார். இதை அங்கு மறைந்து இருந்து கண்காணித்த ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர், கிராம நிர்வாக அலுவலரான லதாவை கையூட்டு பெற்ற கையுடன் பிடித்தனர். மேலும் அவர் இலஞ்சமாக வாங்கிய பணத்தில் அவரது கைரேகை பதிவாகி இருந்தது. மேலும்
அதைத்தொடர்ந்து இலஞ்ச ஒழிப்புத் துறையின் ஆய்வாளர் கீதாலட்சுமி தலைமையிலான காவலர்கள் தாலுகா அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணிபுரிந்த அலுவலர்கள், மற்றும் ஊழியர்களை வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் கிராம நிர்வாக அலுவலர் லதா, இடைத்தரகர் கண்ணன் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக அலுவலகத்தில் சோதனை நடந்தது.
அதன்பின்னர் சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்கு ரூ. நான்காயிரம் இலஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லதா மற்றும் இடைத்தரகர் கண்ணன் மீது வழக்குப்பதிந்த நிலையில் கைது செய்தனர். மேலும் லதா மீது துறை ரீதியான விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்