பிரதமர் ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் 2022, ஜூன் 26 முதல் 28 வரை பயணம் மேற்கொள்கிறார்
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மனியின் தலைமையின் கீழ் ஜூன் 26,27- 2022ல் நடைபெற உள்ள ஜி- 7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டு பிரதமர் திரு ஓலஃப் ஸ்கால்ஸ் அழைப்பின் பேரில், ஜெர்மனி செல்கிறார். அப்போது இரண்டு கட்டங்களாக சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் ஆகிய தலைப்புகளில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முக்கிய விவகாரங்களை சர்வதேச நாடுகள் மூலம் வலிமைப்படுத்தும் வகையில், அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளும் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பிரதமர் மற்ற நாட்டு தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சு நடத்தவுள்ளார்.
பிரதமர் கடைசியாக கடந்த மே மாதம் 2-ம் தேதி ஜெர்மனி சென்று அங்கு நடைபெற்ற இந்தியா-ஜெர்மனி இடையேயான இரு தரப்பு ஆலோசனையின் ஆறாவது கூட்டத்தில் கலந்துகொண்டார்.
ஜி-7 மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு பிரதமர், ஜூன் 28ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட் செல்கிறார். அங்கு அந்நாட்டு முன்னாள் அதிபரும், அபுதாபி அரசருமான எச்.எச். ஷேக் கலிஃபா பின் சையத் அல் நஹியான் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறார். அத்துடன், ஐக்கிய அரபு எமிரேட் புதிய அதிபராகவும், அபுதாபி அரசராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட எச். எச். ஷேக்முகமது பின் சையத் அல் நஹியானுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
பிரதமர் ஜூன் 28ம் தேதி இரவு ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து தாயகம் புறப்படுவார்.
கருத்துகள்