அதிமுக பொதுக்குழு செல்லாதென்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை இரத்து செய்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
அதிமுக பொதுக்குழு செல்லாதென்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு.
ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் பி. வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாதென்றும், அதிமுகவில் ஜூன் மாதம் 23-ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். அதை எதிர்த்து எடப்பாடி கே. பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில்
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி கே. பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி கே.பழனிச்சாமி சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், அரிமா சுந்தரம் மற்றும் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டதைத் தொடர்ந்து,
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்த் பாண்டியன், அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாதென்றும், அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் எனவும், இது சம்பந்தமான விதியை கொண்டு வருவதில் கட்சி நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
ஜூன் 23 ஆம் தேதியில் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
அதனால் இரு பதவிகளும் காலியாகவில்லை என முடிவுக்கு வந்து இரு பதவிகளும் நீடிப்பதாக கருதும் வகையில் ஜூன் மாதம் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், தலைமைக்கழகத்தின் பெயரில் தான் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல எனவும் கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை மாதம் 11 ஆம் தேதி கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாததெனவும் வாதிட்டனர்.மேலும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த 25ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தது. அதில் "அதிமுக பொதுக்குழு செல்லுமென்றும் இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும்" 127 பக்கம் கொண்ட உத்தரவு வெளியானது.இனி எதிர் தரப்பினர் உச்சநீதிமன்றம் மூலம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து அது வழங்கும் தீர்ப்பு இறுதியாக அமையும். என்பது தான் தற்போதய அரசியல் நிலை.
கருத்துகள்