மின் கட்டண உயர்வுக்கெதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில்,
'தமிழ்நாடு அரசு மின் விநியோகக் கட்டணத்தை 32 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை கடுமையாக உயர்த்தியுள்ளதன் மூலம் மின் வாரியத்துக்கு 59 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் அதிகரிக்குமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது மின் நுகர்வோர் தலையில் கடுமையான செலவுச் சுமை ஏற்றப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்கட்டணம் குறைவு என்பதால், ஒன்றிய அரசு மின் கட்டணத்தை உயர்த்துமாறு தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறதென்றும், கடந்த எட்டு ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதையும் காரணம் காட்டி கட்டண உயர்வை நியாயப்படுத்த முயற்சிப்பது சரியல்ல.
மின்கட்டண உயர்வு தவிர நிலைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதும், ஆண்டுக்கு 6 சதவிதம் மின்கட்டண உயர்வு செய்து கொள்ளவும் வழிவகை செய்திருப்பதை ஏற்க முடியாது. மத்திய பாஜக அரசின் தாராளமயக் கொள்கைகள், மக்கள் வாழ்க்கைத் தரத்தில் கடுமையான தாக்குதலை நடத்தி, சரித்து வீழ்த்தி வரும் சூழலில், தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை மிகக் கடுமையான அளவில் உயர்த்தியிருப்பது மக்களிடம் ஆத்திரத்தையும், அதிருப்தியினையும் ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் மின்சாரம் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்கள் வாரியத்துக்கு ஏற்படுத்தும் பெருநஷ்டத்தை மூடிமறைப்பது ஏன்? என்ற வினாவுக்கும் ஏற்கத்தக்க விளக்கம் கிடைக்கவில்லை. தற்போது, நடைமுறையிலுள்ள 100 யூனிட் இலவச மின்சாரமும், மானிய சலுகை கட்டண முறையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது எனினும், இந்தக் கட்டணச் சலுகையை விரும்பாதவர்கள், வாரியத்துக்கு தெரிவிக்கலாம் என்று கூறியிருப்பது மறைமுக நிர்பந்தம் மூலம் மானியங்களை பறிக்கும் செயலாகவே அமையும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
மின்கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மின்நுகர்வோர் கூறிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து, உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை நிறுத்தி வைத்து, நிலைக் கட்டணம் வசூலிப்பதையும், ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயர்வு செய்யும் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். மின்கட்டணத்தை வெகுவாக குறைத்து, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.' எனத் கூறியுள்ளார். அதேபோல, சிபிஐ(எம்) கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையை கண்டிக்கும் தமிழ்நாடு அரசு, தன் பங்கிற்கு மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்ற செயல். மின்வாரிய நெருக்கடியை சமாளிக்க அரசியல் கட்சிகள், துறைசார்ந்த நிபுணர்கள், செயல்பாட்டாளர்கள் முன்வைத்துள்ள ஆக்கப்பூர்வமான மாற்று ஆலோசனைகளை செயல்படுத்துவதற்கு மாறாக மக்கள் தலையில் சுமையை ஏற்றுவது அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும்.' எனத் தெரிவித்துள்ளார்.
வீட்டு உபயோக மின் கட்டணத்தை பொறுத்தவரை, கர்நாடகா, குஜராத் மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைந்த கட்டணமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 100 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்கள், ஒரு கோடி பேர் வரை உள்ளனர். இந்த ஒரு கோடி நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை. அடுத்ததாக, 101 முதல், 200 யூனிட் வரை பயன்படுத்துவோர், 63 லட்சத்து, 35 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு, 27.50 ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு ஒரு ரூபாயை விடக் குறைவு.
மொத்தம், 201 முதல், 300 யூனிட் வரை பயன்படுத்துவோர், 36 லட்சத்து, 25 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு, 72.50 ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல, 301 முதல், 400 யூனிட் வரையிலான, 18 லட்சத்து, 82 ஆயிரம் பேருக்கு, ஒரு மாதத்துக்கு, 147.50 ரூபாய் என்ற அளவில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதே கட்டணங்களை கர்நாடகாவுடன் ஒப்பிடுகையில், 100 யூனிட் வரை ஆரம்ப கட்டத்திலேயே, 4.30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குஜராத்தில், 5.25 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும், 63 லட்சம் மின் நுகர்வோருக்கு, 4.50 ரூபாய் கட்டணம் நிர்ணயித்தாலும், 2.25 ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளது.
தமிழக அரசு வாயிலாக, 9,000 கோடி ரூபாய் கடந்த ஆண்டு மானியம் வழங்கிய நிலையில், இந்த ஆண்டு, 3,500 கோடி அளவுக்கு அரசு மானியம் வழங்கியுள்ளது. வீட்டு உபயோக மின் கட்டணத்தை பொறுத்தவரை, கர்நாடகா, குஜராத் மாநிலங்களை விட, மிக குறைந்த கட்டணமே தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை பொறுத்தவரை, 2.26 லட்சம் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்துக்கு, 50 காசுகள் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த நிலையில் உள்ள, வணிக நுகர்வு மின்சாரம் பயன்படுத்தும், 19 லட்சத்து, 28 ஆயிரம் பேருக்கும், 50 காசுகள் தான் உயர்த்தப்பட்டுள்ளது.சென்ற மாதம், 9 ஆம் தேதி வரை பழைய முறையில் மின் கணக்கீடு இருக்கும். நேற்று முன்தினம் முதல் புதிய கட்டண விகிதப்படி இருக்கும். புதிய மின் இணைப்புக்கான பல்வகை கட்டணமும், ஒரு முனைக்கு, 9,250 ரூபாயாகவும், மும்முனைக்கு, 9,600 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடுகளுக்கு ஒருமுனை, மும்முனை என, இரு பிரிவுகளில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. புதிய மின் இணைப்பு வழங்கும் போது பதிவு கட்டணம், இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், வைப்புத்தொகை போன்றவற்றை உள்ளடக்கிய பல்வகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதில் வளர்ச்சிக் கட்டணம் மட்டும், தரைக்கு அடியில், 'கேபிள்' வாயிலாக மின் வினியோகம் செய்யும் இடங்களிலும், மின் கம்பத்தில் வினியோகம் செய்யும் இடங்களிலும் வேறுபடுகிறது. ஒருமுனை இணைப்புக்கு மின் கம்பம் உள்ள இடங்களில் பதிவு கட்டணம், 100 ரூபாய்; இணைப்பு கட்டணம், 500; மீட்டர் காப்பீடு, 600; வளர்ச்சி கட்டணம், 1,400; வைப்பு தொகை, 200 என, மொத்தம் 2,800 ரூபாய் வசூலிக்கப் பட்டது.
கேபிள் வழியாக மின் வினியோகிக்கும் இடங்களில் பதிவு கட்டணம், 100 ரூபாய்; இணைப்பு கட்டணம், 500; மீட்டர் காப்பீடு, 600; வளர்ச்சி கட்டணம், 5,000; வைப்பு தொகை, 200 என, மொத்தம் 6,400 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதேபோல, மும்முனை இணைப்புக்கு மின் கம்ம் உள்ள இடங்களில், 5,150 ரூபாயும், கேபிள் வாயிலாக மின் வினியோகிக்கும் இடங்களில், 6,650 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது
தற்போது ஒரு முனை இணைப்புக்கு மின் கம்பம் உள்ள இடங்களில் பதிவு கட்டணம் 200 ரூபாய்; இணைப்பு கட்டணம் 1,000; மீட்டர் காப்பீடு 750; வளர்ச்சி கட்டணம் 2,800; வைப்பு தொகை 300 என, மொத்தம் 5,050 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கேபிள் மின் வினியோகிக்கும் இடங்களில் பதிவு கட்டணம் 200 ரூபாய்; இணைப்பு கட்டணம் 1,000; மீட்டர் காப்பீடு 750; வளர்ச்சி கட்டணம் 7,000; வைப்பு தொகை 300 என, மொத்தம் 9,250 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்முனை இணைப்புக்கு மின் கம்பம் உள்ள இடங்களில் பதிவு கட்டணம் 200 ரூபாய்; இணைப்பு கட்டணம் 1,500; மீட்டர் காப்பீடு 2,000; வளர்ச்சிக் கட்டணம் கிலோ வாட்டிற்கு 2,000; வைப்பு தொகை கிலோ வாட்டிற்கு 900 என, மொத்தம் 6,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கேபிள் மின் வினியோகத்திற்கு பதிவு கட்டணம் 200 ரூபாய்; இணைப்பு கட்டணம் 1,500; மீட்டர் காப்பீடு 2,000; வளர்ச்சி கட்டணம் கிலோ வாட்டிற்கு 5,000; வைப்பு தொகை கிலோ வாட்டிற்கு 900 என, மொத்தம் 9,600 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. வீடுகளுக்கு ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்தப்பட உள்ளது. அப்போது, ஒருமுனை மின் இணைப்பிற்கு மீட்டர் வைப்புத் தொகையாக, 5,200 ரூபாயும்; மும்முனை இணைப்பிற்கு 7,100 ரூபாயும் வசூலிக்கப் படும்
வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம், 300 ரூபாயில் இருந்து, 600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, உயரழுத்த பிரிவில், 3,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
உயரழுத்த பிரிவில் மீட்டர் வாடகை கட்டணம், 2,600 ரூபாயில் இருந்து, 3,700 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது
தாழ்வழுத்த பிரிவில் மீட்டர் பழுது, எரிந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக, மீட்டரை மாற்றும் கட்டணம் ஒருமுனை இணைப்பிற்கு 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாகவும்; மும்முனை இணைப்பிற்கு 750 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த பிரிவில் பல்வேறு சேவைகளுக்கான பல்வகை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.பிறப்பிக்கப்படும்.இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது.
கருத்துகள்