53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் பிரம்மாண்டமான துவக்க விழா, ஒரு பார்வை
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரம்மாண்டமான திரைப்படத் திருவிழாவான இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் 53-வது பதிப்பு, திரைப்படங்களைத் திரையிடுவதற்கான தளமாக மட்டுமல்லாமல் நமது எண்ணம் மற்றும் உணர்வுகளையும் தூண்டி எழச் செய்கிறது. விடுதலையின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் உணர்வுக்கு ஏதுவாக “கடந்த 100 ஆண்டுகளில் இந்திய திரைப்படங்களின் வளர்ச்சி” என்ற கருப்பொருளோடு இந்த திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
சர்வதேச திரைப்படங்களுக்கு ஸ்பெயின் நாட்டின் திரைப்பட இயக்குநர் கார்லோஸ் சாராவின் அபரிமிதமான பங்களிப்பைப் போற்றும் வகையில் அவருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு நடிகரும், தயாரிப்பாளருமான சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் துவக்க விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் வெளியிட்டார். “ஏராளமான மனங்களைக் கவர்ந்த, அபாரமான நடிப்பாற்றலோடு தெலுங்கு திரைப்படத்துறையில் மிகுந்த புகழ்பெற்றவர், சிரஞ்சீவி”, என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியா மற்றும் சர்வதேச நடுவர் குழுவினர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். துவக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய கோவா ஆளுநர் திரு பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவை கடந்த 1952-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இரண்டு முக்கிய நோக்கங்கள் என்று கூறினார். உலகத் தரம் வாய்ந்த பல அம்சங்கள் நிறைந்த மாநாட்டு மையத்தின் கட்டமைப்புப் பணி இறுதி நிலையில் இருப்பதாகவும், 2025-ஆம் ஆண்டிற்குள் புதிய வளாகத்தில் திரைப்படத் திருவிழாவை கொண்டாட இயலும் என்றும் கோவா முதல்வர் திரு பிரமோத் சாவந்த் அறிவித்தார்.
இந்திய மக்களின் திறமை மற்றும் நமது தொழில்துறை தலைவர்களின் புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாக திரைப்பட தயாரிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள அனைவரும் விரும்பும் தலமாக நம் நாட்டை உருவாக்கும் தமது தொலைநோக்குப் பார்வையை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் வெளிப்படுத்தினார். “பிராந்திய விழாக்களை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவை, குறிப்பாக பிராந்திய திரைப்படங்களை படைப்பாற்றலின் மையமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். நமது திறமை மிக்க இளைஞர்களிடையே உள்ள அபரிமிதமான தொழில்நுட்ப திறமையை மேம்படுத்துவதன் வாயிலாக உலகளவில் இந்தியாவை திரைப்பட தயாரிப்பு மையமாக மாற்ற முடியும்”, என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய மற்றும் சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட சிறந்த திரைப்படங்களைக் கண்டு களிக்கும் வாய்ப்பை உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஆர்வலர்களுக்கு இந்த திரைப்படத் திருவிழா வழங்கும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறினார். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்திய திரைப்படத் துறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை அவர் நினைவு கூர்ந்தார். பல்வேறு முன்முயற்சிகளின் மூலம் உலகின் படைப்பாற்றல் மையமாக இந்தியாவை உருவாக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்தார்.
திரைப்படத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்திருந்த வாழ்த்துச் செய்தியை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா வாசித்தார்.கோவாவில் 53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் இந்த ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருது பெற்ற தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பிரதமர் வாழ்ந்து
கோவாவில் 53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் இந்த ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருது பெற்ற தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூரின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில்;
“சிரஞ்சீவி அவர்கள் அற்புதமான மனிதர். அவருடைய அளப்பரிய பணி, பலதரப்பட்ட வேடங்கள் மற்றும் சிறந்த குணம், அனைத்து தலைமுறை திரைப்பட பிரியர்களையும் கவர்ந்துள்ளது. கோவா இந்திய சர்வதேச திரைப்படவிழாவில், நடப்பாண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருது பெற்றுள்ள அவருக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.திரைப்பட படப்பிடிப்பு, படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளுக்கு அனைவரும் விரும்பும் நாடாக இந்தியா உருவெடுக்கும்: அனுராக் தாக்கூர்
திரைப்பட படப்பிடிப்பு, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோரின் ஒத்துழைப்புடன் நடைபெறும் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் ஆகியவற்றுக்கு அனைவரும் விரும்பும் மையமாக இந்தியா மாறும் என மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். கோவா மாநிலத்தின் பனாஜியில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை அவர் தொடங்கிவைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும், திருவிழா பெரிதாகி வருகிறது. இந்த ஆண்டு பல பிரீமியர்கள் உள்ளன. இந்த ஆண்டு விழாவில் 79க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 280 படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இது வரை நாம் என்ன செய்துள்ளோம் என்பதைப் பற்றி விழா விரிவாகப் பேசுகிறது என்று தொடக்க விழாவில் உரையாற்றிய அவர் கூறினார்.
“இந்த திரைப்பட விழாவுக்கான எனது பார்வை ஒரு நிகழ்வோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, மாறாக, அமிர்தப் பெருவிழாவிலிருந்து அமிர்த காலத்துக்கு மாறும்போது, இந்தியா சுதந்திரத்தின் 100. வது ஆண்டைக் கொண்டாடும் போது, இத்திரைப்பட விழா எப்படி இருக்க வேண்டும் எனப்தை நோக்கமாகக் கொண்டதாகும். பிராந்திய படங்களுக்கான திரைப்பட விழாக்களை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவை அனைவரையும் உள்ளடக்கிய படைப்பாற்றல் மையமாக மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என அவர் தெரிவித்தார்.
1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய சர்வதேச திரைப்பட விழா, உலகமே ஒரே குடும்பம் என்னும் கருப்பொருளில் வேரூன்றி உள்ளது, இது அமைதியான கூட்டுறவின் சாரத்தை உள்ளடக்கியது என்றார். "இந்தியாவின் அதிகரித்து வரும் உலகளாவிய பங்கு, ஜி20 தலைமைப் பொறுப்பு ஆகியவை, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 'ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற இந்த கருப்பொருளைச் சுற்றி வருகிறது." என்று அவர் தெரிவித்தார்.
சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்பெயின் நாட்டு இயக்குனர் கார்லஸ் சவ்ராவை அமைச்சர் பாராட்டினார். இந்த ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருது நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். மணிப்பூர் சினிமாவின் 50 ஆண்டுகளை கொண்டாடும் வகையில், மணிப்புரி மொழியில் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடக்க விழாவிற்கு முன் ஒரு தொடக்கப் படம் திரையிடப்படுவது இதுவே முதல் முறை என்று அமைச்சர் குறிப்பிட்டார். 75 நாளைய இளம் படைப்பாளர்கள் முன்முயற்சியிலிருந்து உலக பிரீமியர்கள் வரை, ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் வித்தியாசமான ஒன்றைச் செய்ய முயற்சிக்கிறோம். சர்வதேச திரைப்பட வல்லுநர்களின் பங்கேற்பை எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் கூறினார்.53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரபல ஸ்பெயின் திரைப்பட இயக்குநர் கார்லோஸ் சவுரா, சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்
கோவாவில் இன்று (20.11.2022) தொடங்கிய 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரபல ஸ்பெயின் திரைப்பட இயக்குநர் கார்லோஸ் சவுராவுக்கு, சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சர்வதேச திரைப்படத்துறையில் ஸ்பெயின் இயக்குநர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில் அவருக்கு இவ்விருது அளிக்கப்பட்டது. அவரது சார்பாக அவருடைய மகள் அன்னா சவுரா இவ்விருதைப் பெற்றுக் கொண்டார்.
இவ்விருது கிடைத்தது குறித்து காணொலி காட்சி வாயிலாக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கார்லோஸ் சவுரா, மூச்சுக்குழாய் அழற்சி பாதிப்பிலிருந்து குணமடைந்து வரும் நிலையில், தம்மால் நிகழ்ச்சியில், கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார். தமக்கு இவ்விருதை அளித்த திரைப்படவிழா அமைப்பாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இவ்விருதைப் பெற்ற ஸ்பெயின் திரைப்பட இயக்குநருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், திரைப்படத் தயாரிப்பில் தமது வாழ்க்கையையே அவர் அர்ப்பணித்துள்ளதாக கூறினார். திரைப்படத் தயாரிப்பு மற்றும் ஒலிப்பதிவில் அவர் சிறந்து விளங்கினார் என்றும் குறிப்பிட்டார்.தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களின் கலைஞர்கள் பங்குபெறும் '75 நாளைய இளம் படைப்பாளர்கள்’ போட்டி கோவாவில் திங்கட்கிழமை துவக்கம்
75 இளம் படைப்பாளர்கள் தங்களது திறமையை நிரூபிக்கும் தருணம் இது. ‘75 நாளைய இளம் படைப்பாளர்கள்' என்ற போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 75 இளைஞர்கள் நாளை (நவம்பர் 21, 2022) தொடங்க உள்ள “53 மணி நேர சவாலில்” 15 குழுக்களாக பிரிக்கப்பட்டு பிரித்து போட்டியிடுவர். இந்தப் போட்டியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கோவாவில் தொடங்கி வைப்பார். தேர்வு செய்யப்பட்ட 18-35 வயது பிரிவிலான இளைஞர்கள் இந்தியா@100 என்ற தலைப்பில் 53 மணி நேரத்தில் தங்களது படைப்புகளை குறும்படம் வாயிலாக தயாரிக்க வேண்டும்.
இந்தப் போட்டி குறித்து 53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் துவக்க விழாவில் பேசிய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான தளத்தை உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க கடந்த ஆண்டு இந்தப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறினார். 10 பிரிவுகளில் போட்டியிடுவதற்காக 1000 விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, திரைக்கதை, பின்னணி பாடல், இசையமைப்பு, ஆடை மற்றும் அலங்காரம், கலை வடிவமைப்பு, இயங்குபடம், சிறப்பு ஒளியமைப்புகள் போன்ற திரைப்பட தயாரிப்பின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 75 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மொத்தம் 19 இந்திய மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இவர்களுள் அதிகபட்சமாக 23 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். அதைத்தொடர்ந்து 9 பேர் தமிழகத்திலிருந்தும், 6 பேர் தில்லியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.குழந்தை பருவத்தின் கனவுகளையும், ஆற்றல்களையும் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா காட்சிப்படுத்துகிறது
குழந்தை பருவத்தின் கனவுகளையும், ஆற்றல்களையும், நுட்பமான அறிவையும் காட்சிப்படுத்துவதற்கு, 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா உறுதி பூண்டுள்ளது. குழந்தைகள் வடிவமைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, மக்களின் எண்ணங்களைத்தான் வடிவமைக்க வேண்டும் என்று பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஜெஸ் லயர் தெரிவித்துள்ளார்.
'கேபெர்னம்' திரைப்படத்தில் குழந்தைப் பருவத்தை முற்றிலும் தொலைத்த ஒரு சிறுவனின் கதைக்களத்தில் இருந்து 'நானி தெரி மோர்னி' திரைப்படத்தில் மோன்பெனி எசங்-ன் கதாபாத்திரம் வரையில் குழந்தைகளின் சிறப்புமிக்க ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டது. குழந்தைகளின் வீர, தீர செயல்களுக்கான தேசிய விருது பெற்றவர் மோன்பெனி எசங் ஆவர். அவர் தண்ணீரில் மூழ்கிய அவரது பாட்டியை பயமின்றி உயிரோடு காப்பாற்றினார். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா ஐக்கிய நாடுகள் சர்வதேச நிதியத்துடன் இணைந்து சிறார் பிரிவில் 6 திரைப்படங்களை திரையிடுகிறது.
'சுமி' என்ற திரைப்படத்தில், இந்தியாவின் கிராமப்புறப் பகுதியில் வாழ்ந்து வரும் அடிப்படை வசதிகள் மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்ட 12 வயது சிறுமி சுமதியின் வாழ்க்கையை பற்றிய கதையாகும். அவரது வீட்டிலிருந்து பள்ளிக்கு நெடுந்தூரம் செல்ல வேண்டி இருந்ததால், தனக்கு மிதிவண்டி வேண்டும் என்று கனவு காண்கிறார். அதற்காக அவரது போராட்டம், நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
வங்காள மொழி திரைப்படமான 'நானி தெரி மோர்னி'யில் இரண்டு 8 வயது சிறுவர்களின் வாழ்வில், பாபர் மசூதி விவகாரத்திற்கு பிறகு மத உணர்வு எவ்வித பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 'உத் ஜா நானே தில்' மற்றும் 'தனக்' போன்ற திரைப்படங்களும் இந்த பிரிவில் திரையிடப்படுகின்றன.
கருத்துகள்