சேலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை
அடுத்த எட்டு மாதங்களில் புறவழிச்சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக விரிவாக்கம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவிப்பு,
சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள புறவழிச்சாலைகளில் முதற்கட்டமாக ஆறு புறவழிச்சாலைகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள்ளாகவும், மற்றுமுள்ள இரு புறவழிச்சாலைகள் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாகவும் நான்கு வழிச்சாலைகளாக விரிவுபடுத்தப்படுமென்று
மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸுக்கு எழுதிய கடிதத்தில் இந்தத் தகவல்களை மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள புறவழிச்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடப்பது குறித்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க புறவழிச்சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக விரிவாக்கம் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின்கட்கரிக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார்.
‘‘தேசிய நெடுஞ்சாலை எண் 79- ல் சேலம் -உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ பாதையில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சாலையில் எட்டிடங்களில் அமைந்துள்ள புறவழிச் சாலைகளில் நான்கு வழிச்சாலை திடீரென இரு வழிச்சாலையாக மாறி விடும் நிலையில், அதைக் கவனித்து சமாளிக்க முடியாமல் அந்தச் சாலையில் பயணிப்பவர்கள் தடுமாறுகின்றனர். அதனால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலை எண் 79-ல் கடந்த 2011 முதல் 2022 வரையிலான 11 ஆண்டுகளில் மட்டும் 1036 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை எண் 79-ல் சேலம் - உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் எட்டு இடங்களில் உள்ள இருவழி புறவழிச்சாலைகளையும் நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேன்டுமென்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் என்ற முறையில் தாங்கள் ஆணையிட வேண்டும்’’ என அந்தக் கடிதத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரியிருந்தார்.
அதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுதியுள்ள நவம்பர் 2-ஆம் தேதியிட்ட கடிதத்தில், ‘‘ சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள புறவழிச்சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் எழுதிய கடிதம் குறித்து ஆய்வு செய்தோம். அதனடிப்படையில், சேலம் & உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்காக பணி ஒப்பந்தத்தின்படி அந்த நெடுஞ்சாலையில் உள்ள எட்டு புறவழிச்சாலைகளும், அதில் உள்ள கட்டமைப்புகளும் அந்த தேசிய நெடுஞ்சாலையை அமைத்த நிறுவனத்தால் நான்கு வழிச்சாலைகளாக விரிவாக்கப்பட வேண்டும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தேசிய நெடுஞ்சாலை திட்ட பணி ஒப்பந்தத்தின் 11-ஆவது ஆண்டு நிறைவுக்குள் புறவழிச்சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக்கும் பணிகள் திருப்திகரமாக முடிக்கப்பட வேண்டும். அதன்படி 6 புறவழிச்சாலைகளை விரிவாக்கும் பணிகள் 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்; மீதமுள்ள இரு புறவழிச்சாலைகளை விரிவாக்கும் பணிகள் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
இதுதவிர, சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, சாலை அறிவிப்புப் பலகைகள், பிரதிபலிப்பான்கள், சாலையோர தடுப்புத் தூண்கள், சாலைகள் சந்திக்கும் மற்றும் பிரியும் இடங்களில் அதற்கான குறியீட்டுக் கோடுகள், முக்கிய சந்திப்புகளில் உயர்கோபுர மின் விளக்குகள், சாலையோர விளக்குகள் போன்றவை சாலையை அமைத்து பராமரிக்கும் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளன. சாலை பாதுகாப்புக்காக வேறு ஏதேனும் நடவடிக்கைகள் தேவை என்றால் அவை குறித்து பாதுகாப்பு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு ஒப்பந்த நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது தனியாகவோ அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சேலம்-உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ நீள சாலை கிட்டத்தட்ட மரணப்பாதை என்று அழைக்கப்படும் அளவுக்கு அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறும் சாலையாக இருந்தது. அந்த சாலையில் உள்ள புறவழிச்சாலைகள் எப்போது நான்குவழிச்சாலையாக மாற்றப்படும் என்று லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் எதிர்பார்த்திருந்தனர். புறவழிச்சாலைகளை நான்கு வழிப் பாதையாக மாற்ற மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக சேலம் & உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எட்டு புறவழிச்சாலைகளும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட உள்ளன.
கருத்துகள்