சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம் பிரான்மலை அருகில் மதகுபட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 45). அவரது மனைவி சபிதா (வயது 39). பாரதிய ஜனதா கட்சியின் சிவகங்கை மாவட்ட மகளிர் பிரிவுச் செயலாளராவார்
பிரான்மலையில் அவருக்குச் சொந்தமான வயலில் விவசாயப் பணிகள் நடைபெறுகிறது. அதற்காக நேற்று மாலை ஏழு மணியளவில் மின்சார மோட்டாரை இயக்கச் சென்ற சபிதா மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்.
உடனடியாக அவரது கணவர் ராமகிருஷ்ணன், அவரைத் சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சபிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் சபிதா ஏற்கனவே இறந்துவிட்டாதகக் கூறியுள்ளார்கள்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த சதுர்வேதமங்கலம் காவல் நிலையத்தினர் சபிதாவின் உடலை, உடற்கூறாய்விற்காக அனுப்பினர். சம்பவம் குறித்து சதுர்வேதமங்கலம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அனுமதி இல்லாமல் மின் வேலி அமைக்க முற்பட்டதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனக்கூறி, சபிதாவின் கணவர் ராமகிருஷ்ணன் மீது மின்சார வாரியத்தின் சார்பில் சதுரவேதமங்கலம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
சபிதாவிற்கு ராம்பிரசாத் என்ற மகன் ஈரோட்டில் மூன்றாமாண்டு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். பாஜக சார்பில் மகளிர் மாநில நிர்வாகி உமாரதிராஜன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்