சமூகச் சீரழிவின் உச்சம் கரூர் மாவட்டத்தில் மதுபானங்கள் விற்பனையில் அதிகமாக விற்பனை செய்ததற்காக பாராட்டுச் சான்றிதழ்
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சார்பில் மாவட்ட அரசு மதுபானம் விற்பனை மேலாளர் சண்முக வடிவேல், மற்றும் மேற்பார்வையாளர் சிவக்குமார், ஆறுமுகம், கடை விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய நால்வருக்கும் பாராட்டுச் சான்றிதழை ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் வழங்கினார். பாராட்டு சான்றிதழ் சமூகவலைதளங்களில் பல விவாதங்களையும் கிளப்பியது.
பாதை மாறி போதையில் தடுமாறும் நிலையை சாதனை எனக்கூறும் நிலை மிகவும் மோசமான நிலை அதிக வருவாய் ஈட்டி கொடுத்ததற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியது மக்கள் வளர்ச்சிக்கு உதவுமா என சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டதையடுத்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட மதுபானம் விற்பனை மேலாளர் சண்முக வடிவேல், மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், ஆறுமுகம், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய நான்கு பேருக்கும் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் திரும்ப பெறப்பட்ட நிலையில் திரும்ப பெறப்பட்ட சான்றிதழில் இருந்த மதுபானம் விற்பனை நிர்வாகத்திற்கு அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்காக என்ற வார்த்தையை மட்டும் திருத்தம் செய்ததில் (டாஸ்மாக்) நிர்வாகத்தில் சிறந்தப் பணிக்கான பாராட்டுச் சான்றிதழ் என மாற்றி அந்த சான்று திரும்பவும் கரூர் மாவட்ட நிர்வாகம் வழங்கியது.இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் மதுக்கடைகள், பள்ளிகளின் அருகில், பொதுமக்கள் கூடுமிடங்களிலும் மதுக்கடைக்குப் பஞ்சமில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சகஜமாக மது அருந்துகின்றனர்.2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி, தினமும் 336 பேர் சாலை விபத்தினால் உயிரிழக்கின்றனர்
1937 ஆம் ஆண்டு முதல், மது பாட்டில்களில் 'மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு' என வாசகம் அச்சிடப்பட்டது.
இப்போது "'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்" என்ற வாசகம் மதுபானப் பாட்டில்களில் இடம் பெறுகிறது. அந்த வாசகம் மாற்றப்பட்டு புது வாசகம் சேர்க்கப்பட்டது."வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்”
- மூதாட்டி ஔவையார் வாக்கு அது ஒரு காலம்.
ஆனால் மது விற்பனைக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கும்
“விலை உயரப் பசி உயரும்,
பசி உயரப் பிணி உயரும்,
பிணி உயர துயர் உயரும்,
துயர் உயர துன்பமுயரும்”
- ஆக மது விற்பனை அதிகரிக்க மக்கள் துன்பம் உயரும் ...என்பதே உண்மை. மது மயக்கம் அது மதிமயக்கம்- ஒரு வம்சத்தை அழிப்பது மதுப்பழக்கம்’
புத்தியுள்ளோர்க்கு புகழ் மயக்கம்- தொழில்புரிபவர் காண்பது பொருள் மயக்கம்,
பக்தியுள்ளோர்க்கு அருள் மயக்கம்- நன்கு படித்தவர் காண்பது மொழி மயக்கம்,
உத்தமன் என்றுனை ஊர் புகழ்ந்தால்-அந்த ஒவ்வொரு சொல்லிலும் போதை உண்டு.
சக்தியுள்ளோன் என்று புகழ்ந்துரைத்தால்-அந்த தனித்தன்மையில் ஒரு மயக்க முண்டு.
என்று ‘போதை’ என்பது மதுவால் மட்டுமல்ல. வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் எப்படி படர்ந்திருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார் குடித்த அனுபவம் பெற்ற காலம்சென்ற புகழ் கவிஞர் கண்ணதாசன்.
கருத்துகள்