பிரபாகரன் நலமாக இருக்கிறார். அவருடைய குடும்பத்தினரின் அனுமதியோடு இந்தத் தகவலை வெளியிடுகிறேன். விரைவில் தமிழ் ஈழம் குறித்த அறிக்கையை அவர் வெளியிடுவார்”
– என்று தஞ்சையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார் தமிழர் தேசிய இயக்கத் தலைவரான அவரோடு நீண்டகாலம் நெருங்கிய தொடர்பில் இருந்தவராகக் கருதப்படும் பழ.நெடுமாறன்.
தற்போதைக்கு இந்தச் செய்தி பரபரப்பானாலும்.
பல ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிடுகின்றன. அதில் சிலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள்.
புலி அமைப்பு கரிகாலனுக்கு நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவராகக் கருதும் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனும் இத் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். “விரைவில் மக்களுக்கு முன் அவர் தோன்றுவார்” எனச் சொல்லியிருக்கிறார்.
இலங்கையில் முன்னாள் நாதாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கமும் “கரிகாலனின் உடல் கிடைத்ததாகச் சொன்ன இலங்கை அரசு அவருடைய உடலை என்ன செய்தது? எங்கு அடக்கம் செய்தது? அவருடைய அஸ்தியை ஏன் வெளியுலகிற்கு அறிவிக்கவில்லை?
கரிகாலன் பெற்றோரின் அஸ்தி சேகரிக்கப்பட்டுத் தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனால் கரிகாலனின் அஸ்தியை இலங்கை அரசு தந்திருந்தால், அவருடைய பெற்றோரின் அஸ்தியுடன் ஒப்பிட்டு அது கரிகாலனாது தானா என்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தியிருக்க முடியும்.
ஆனால் இலங்கை அரசு இதுவரை அப்படிச் செய்யாத நிலையில் பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கிற தகவலை அவர் நீண்ட கால அரசியல் வாதி நல்ல புத்திசாலி என்ற வகையில் நம்புகிறோம்.
இந்தச் செய்தி உண்மை என்றால் இது இலங்கை அரசியலைத் தலைகீழாகப் புரட்டிப் போடும்.” என்றிருக்கிறார்.
கரிகாலனை நேரில் சந்தித்திருக்கிறவர்களில் ஒருவர் கொளத்தூர் மணி போன்றவர்கள் பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கிற தகவலை மகிழ்வுடன் வரவேற்றிருக்கிறார்.
கரிகாலன் முன்பொருமுறை மறைந்ததாகச் செய்தி வெளியிட்ட போது, அவர் உயிருடன் இருப்பதாகச் செய்தி வெளியிட்டது ஒரு அரசியல் வார இதழ்.
தற்போதும் அதைப் போன்று கரிகாலன் நலமாக இருக்கிறார் என்கிற தகவலை வெளியிட்டிருக்கிறார் பழ.நெடுமாறன்.
இலங்கையில் தமிழர்களின் இனப்போராட்டம் நீண்டகாலமாக நீடித்து வந்திருக்கிறது. தமிழர்கள் பலருடைய உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது.
அதிலும் – 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் குவிக்கப்பட்ட தமிழர்கள் சுமார் நாற்பதாயிரம் பேரை இலங்கை அரசு கொன்று குவித்த வரலாற்றுப் பயங்கரம்
கணக்கில்லாமல் கொத்துக் கொத்தாக எத்தனை தமிழர்களின் உயிர்கள் பலியாயின? தமிழ்ப் பெண்களில் எத்தனையோ பேர் சொல்லவொண்ணாத பாலியல் வன்முறைகளையும், சித்திரவதைகளையும் அனுபவித்தார்கள்?
எவ்வளவு தமிழர்கள் காணாமல் போன பட்டியலில் சேர்ந்தார்கள்?
எத்தனை தமிழர்கள் வீடற்று, நாடற்றவர்களாக மாறிப்போனார்கள்?
பதுங்கு குழிகளும், ஷெல்களும், கொத்துக் குண்டுகளும், எந்நேரமும் மனதில் உறைந்திருக்கும் மரண பயமும், கலங்கடிக்கும் கதறல்களுமாக ஏன் தமிழர்களின் வாழ்க்கை அப்போது மாறிப் போனது?
இந்த நூற்றாண்டில் நமக்குப் பக்கத்திலுள்ள நாட்டில் இவ்வளவு உயிர்கள் – தமிழ் மொழி பேசுகிறவர்கள் என்கிற மொழியின வேறுபாட்டை மட்டும் முன்னிறுத்திக் கொல்லப்பட்டதைக் கேட்கும் போது, பன்னாட்டுத் துணையுடன் வேட்டையாடப்பட்டதை காட்சி ஊடகங்கள் சில அப்போது அம்பலப்படுத்திய போது, நம்முடைய மனங்கள் பதைத்தன. நம் கண்கள் பனிக்கின்றன.
இதை முன்பே எதிரொலித்தவர் கரிகாலன்.
தமிழர் போராட்டம் துளிர் விட்டபோது “ஜெயவர்த்தனே உண்மையான பௌத்தராக இருந்திருந்தால், நான் ஆயுதம் ஏந்தியிருக்க நேர்ந்திருக்காது” என்று சொன்னவர் அவர் தான்.
“உலகின் எந்த ஒரு மூலையிலும் மனித உரிமைகள் மீறப்படும் போதும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்த போதும், சிறிய தேசிய இனங்கள் நசுக்கப்படும் போதும், குரல் எழுப்பியும், தலையிட்டும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேச சமூகம் இலங்கைத் தமிழரின் பேரவலத்தைக் கண்டும் மௌனம் சாதித்து வருவது பலருக்கும் வேதனை தருவது”
– இதைச் சொன்னவரும் கரிகாலன் தான்.
எப்போதும் நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்தவர்கள் அப்படியே சரிந்திருப்பதில்லை.
விழ வைத்த சூழல் மீண்டும் எழவும் வைக்கும்.
தற்போது இலங்கையில் அதற்கேற்ற சூழல் கனிந்திருக்கிறது என்றே தெரிகிறது.
முன்பு தமிழர்கள் மட்டும் இலங்கை அரசுக்கு எதிராகப் போராடினார்கள்.
தற்போது சிங்கள மக்களும் எழுச்சியுடன் போராடுகிறார்கள். சிங்களத் தலைவர்கள் நாடு கடந்து போக வைத்திருக்கிறார்கள்.
போராட்டம் இனப்பாகுபாடுகளை மீறித் தற்போது கடந்திருக்கிற நிலையில் தான் பழ.நெடுமாறனின் கரிகாலனின் இருப்பு குறித்த தகவல் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.
இலங்கை அரசியல் இனி எத்தகைய திசை நோக்கி நகரும்?
கரிகாலனுக்கு மிக நெருக்கமான ஆலோசகராக இருந்தவரான ஆன்டன் பாலசிங்கம் கரிகாலன் பற்றி இப்படிக் குறிப்பிட்டிருப்பார்.
“இன்னல்களும், இடர்களும் எழுந்த நெருக்கடியான காலகட்டங்களில் தளராத நம்பிக்கையுடன் செயலாற்றுவது தான் கரிகாலனின் ஆளுமையில் நான் கண்டு வியந்த அபூர்வமான குணாம்சம்”
சரி… கரிகாலனே எதிர்பாராத சோதனைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கலாமா?
“அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும் நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை”
“மக்களின் விடுதலை உணர்வை அடக்குமுறையால் அழித்துவிட முடியாது. உலக வரலாறு பகரும் உண்மை இது”
“இழப்புகளுக்கு அஞ்சினால் போரை நடத்த முடியாது. இழப்புகளை வளர்ச்சியின் ஈன்றுகோலாகக் கருத வேண்டும்”
“இழப்புகளும், அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும், அழிவுகளையும் சந்தித்துள்ளோம்.
அழிவுகள் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால், உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கி விட முடியாது”
“நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டோம்”.
“இயற்கை என் நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி"-மேதகு.பிரபாகரன் என்கிறார்
பிரபாகரன் இல்லை என 2009 ஆம் ஆண்டு முதல் பலர் சொல்லி வருகிற நிலை. அன்று அவர்களைத் துரோகி என்றவர்கள் 2009 ஆண்டு முதல் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் எனச் சொல்லும் பழ.நெடுமாறனை இப்போது துரோகி என்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு வரை புலிகளின் நிழலில் வலம் வந்த தமிழீழ ஆதரவாளர்கள்.இன்று 70 பதுகளில் பேசிய இந்து மகா சமுத்திர அரசியலை பேசுகின்றனர்.
நெடுமாறனின் இன்றைய அறிக்கையை வாசிக்கும் ஒரு இளந்தாரி பிரபாகரன் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான மோதலில் இந்தியாவுக்காக சீனாவை ஆதரித்த இலங்கை அரசை எதிர்த்து போர் செய்தார் என்றே புரிந்து கொள்வார்கள். லட்சம் மக்கள் இனப்படுகொலைக்குள்ளான, பல்லாயிரம் பேர் காணமல் போன இந்த 14 ஆண்டுகளில் வராத பிரபாகரன் இனி வந்து எதற்கு? பிரபாகரன் இயல்பது இல்லையே? இந்த நிலையில் பழ நெடுமாறன் தெரிவித்த தகவலை இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் மறுத்தார்.
அவர் கூறியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடமுள்ளது. 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார். டி.என்.ஏ ஆதாரங்களையும் நாங்கள் எடுத்துள்ளோம். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி இறுதிக்கட்டப் போரில் அவர் கொல்லப்பட்டார். தவறான தகவல்களை அவர்கள் வெளியிடுகின்றார்கள். இது எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்கு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை என்று தெரிவித்தார்.
ஆக மொத்தம் இந்த அறிக்கை ஒரு அரசியல் பார்வை மட்டுமே. இதேபோல் நம்நாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 'மர்மமான' மரணம் தொடர்பான பல வினாக்கள் 1945 ஆம் ஆண்டு முதல் எழுப்பப்படுகின்றன.
பிரிட்டானிய இராணுவம், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம், ஜப்பான் அரசாங்கம் மற்றும் நேதாஜி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகள், விபத்தின் போது நேதாஜி கடுமையான தீக்காயங்களுக்கு ஆளானதாகவும், பின்னர் அதே நாளில் மருத்துவமனையில் இறந்ததாகவும் அதே முடிவை எட்டியது. வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, நேதாஜி 1945 ஆம் ஆண்டு அன்று தைஹோகுவில் (ஜப்பானிய தைவான்) விமான விபத்தில் இறந்தார்.
கருத்துகள்