புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இதுவரை இலவசமாக இருந்த நிலை மாறி ஏப்ரல் மாதம் முதல் மருத்துவப் பரிசோதனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதாக அறிவிப்பு:
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வராதவர்கள், மற்றும் சிவப்பு நிற குடும்ப அட்டை இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைகளுக்கு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்திருப்பதாக ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மொத்தமாக 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு ரூபாய். 500 முதல் ரூபாய்.12 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்து ஜிப்மர் மருத்துவமனைக் கண்காணிப்பாளர் அனைத்து துறைத் தலைவர்களுக்கு அனுப்பிய உத்தரவு விவரம் வருமாறு : "ஜிப்மரில் சமீபத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய மேம்பட்ட உயர் மதிப்பு சிகிச்சைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராத மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு நிற குடும்ப அட்டை இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டுக் கட்டணங்கள் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் வசூலிக்கப்படும். அந்தத் தொகை நிறுவன வருவாய் கணக்கில் துறைகள் வரவு வைக்க வேண்டும்.
நோயாளியின் பராமரிப்பின் நலனுக்காக, மேம்பட்ட சோதனையை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இருப்பினும், இந்த மேம்பட்ட சோதனைகள் விலை உயர்ந்தவை என்பதால், பயனாளிகளிடமிருந்து ஓரளவு வருவாய் கிடைத்தால் மட்டுமே இந்த சேவைகளை நிலையான முறையில் வழங்க முடியும். அடிப்படை பரிசோதனை சேவைகள் இலவசமாக தரப்படும்.
வரலாற்று நோயியல் ஆய்வுகள் முடிவுப் படி மருத்துவத் தேவை மற்றும் சாத்தியக் கூறு ஆகியவற்றின் அடிப்படையில் மேம்பட்ட சோதனைகள் விரும்பத்தக்கவை என்று மருத்துவத் துறை கருதினால், துறையானது அதை நோயியல் துறைக்கு சமர்பிக்க வேண்டும். அப்போது காப்பீட்டு நகல் அல்லது சிவப்பு நிற குடும்ப அட்டை நகல் இணைக்க வேண்டும்.
அது இல்லாதவர்கள் பணம் செலுத்திய ரசீது நகலுடன் சம்பந்தப்பட்ட சிகிச்சை தரும் மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். ரசீது இல்லாவிட்டால் சிகிக்சை தரப்பட மாட்டாது என்பதை நோயாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தப் பட்சம் ரூ. 500 முதல் ரூ. 12 ஆயிரம் வரை இக்கட்டணம் இருக்கிறது" என ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்
கருத்துகள்