தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 6- வது கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டமும் மற்றும் 16 -வது சட்டமன்றப் பேரவைக்கான 6-வது கூட்டத் தொடரும் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியதைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, பிப்ரவரி மாதம்.15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அத்துடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றறது. தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசும், 20-ஆம் தேதி வேளாண்மைக்கான நிதிநிலைத் திட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இரண்டு நிதிநிலை அறிக்கைகள் மீதும் 22-ஆம் தேதி வரை விவாதம் நடத்தப்பட்டு, இறுதியில் அமைச்சர்கள் பதில் அளித்த பின்னர் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டம் மொத்தம் 7 நாட்கள் நடந்தது.பின்னர், துறைகள் வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக 2-வது கூட்டம் , ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 9 நாட்கள் நடந்தன. சட்டப் பேரவை பேரவை விதிகள் படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், டிசம்பர் மாதம்.9 ஆம் தேதி மற்றும் 10-ஆம் தேதிகளில் 6-வது கூட்டத்தொடரின் 3 வது கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரை முடித்து வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். அதற்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டதாக சட்ட மன்றப்பேரவை யின் செயலாளர் கி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்