கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி வரை கேத்தி, குன்னூர் வழியாக மலைப் பாதையில், நீராவி இன்ஜின் மூலம் மீட்டர் கேஜ் பல்சக்கரம் ரயில் இயக்கப்படுகிறது. 1908 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக்காலத்தில் இரயில் சேவை துவங்கப்பட்டது. ஊட்டியில் மலை அழகு அனைத்தையும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வண்ணம் சுமார் 46 கி.மீ தூரம் பயணிக்கும். நிலையில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களின் பட்டியலில், இமயமலையில் உள்ள டார்ஜிலிங் ரயில் சேவை, மற்றும் ஊட்டி மலை ரயில் சேவை ஆகியவற்றை 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம், யுனெஸ்கோ சேர்த்தது. 1854 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை நீலகிரி மலையில் ஒரு மலைப்பாதையை அமைக்கத் திட்டமிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளின் அரசியல் செயல்பாடுகளின் காரணமாக திட்டத்தை முடிக்க 45 ஆண்டு காலம் பிடித்தன சூன் 1899 ஆம் ஆண்டு இப்பாதை போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. முதலில் சென்னை இரயில்வே அரசாங்கத்துடன் மேற்கொண்ட ஓர் உடன்பாடு காரணமாக இரயிலை இயக்கியது. அரசாங்கத்திற்காக மெட்ராஸ் இரயில்வே நிறுவனம் நீண்ட நாட்களுக்கு இயக்கியது. இறுதியாக தென் இந்திய இரயில்வே நிறுவனம் நீலகிரி மலை இரயிலை வாங்கி இயக்கத் தொடங்கியது.
தொடக்கத்தில் இப்பாதையின் இறுதி இரயில் நிலையம் குன்னூராக இருந்தது. 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெர்ன்கில் இரயில் நிலையம் வரை இரயில் நீட்டிக்கப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் இப்பாதை மேலும் உதகமண்டலம் இரயில் நிலையம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. குன்னூரிலிருந்து 11 ¾ மைல் தொலைவு நீட்டிக்கும் செலவாக ரூபாய் 24,40,000 பிடித்தது. சிறப்பு மிக்க ஊட்டி மலை ரயில் சேவையை மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைத்துள்ளது.
கொரோனா பாதிப்பால், மார்ச் மாதத்தில் மலை ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு, 'டி.என்.43' எனும் பெயரில், மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை தனியார் மலை ரயில் இயக்கம் துவங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்று வர ஒரு நாளை ரூ. 4.80 லட்சம் தொகை நிர்ணயிக்கப்பட்டு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அதனால், தனியார் மலை ரயில், இன்ஜின் ஓட்டுனர்களைத் தவிர மற்ற ஊழியர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஆவர்கள். ரயில் பயணம் செய்ய ஒரு சுற்றுலா பயணிக்கு, மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு பயணக் கட்டணமாக, 3,000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.
சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த மலை ரயில் கட்டணம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. தனியார் மலை ரயிலில், விமானப் பணி பெண்களை போன்று பெண்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரியிலிருந்து, தினமும் தனியார் மலை ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இயங்கிய மலை ரயில் இயக்கப்படும் போது, தனியார் மலை ரயிலின் நேரம் மாற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஊட்டி மலை ரயிலை தனியாரிடம் ஒப்படைத்த நடவடிக்கைக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு தினமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதன் வழித்தடத்தில் சிறப்பு ரயிலும் கட்டணம் அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தது.
சுமார் 4.5 லட்சம் ரூபாய் ரயில்வேக்கு கட்டணம் செலுத்தி சிறப்பு ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே துறையே இயக்க வேண்டும் என தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கொரானா தொற்று காரணமாக மலை ரயில் சேவையும், சிறப்பு ரயில் கட்டண சேவையும் நிறுத்தப்பட்டது. தற்போது வரை உதகை செல்ல இ பாஸ் நடைமுறை இருந்து வருகின்ற
நிலையில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மொத்தமாக ரயில்வே நிர்வாகத்திற்கு கட்டணத்தைச் செலுத்தி சிறப்பு மலை ரயிலை வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறார். மலை ரயிலில் பயணிக்க நபர் ஒருவருக்கு ரூ.2,500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிறப்பு ரயிலில் இருக்கும் தனியார் நிறுவன பணிப்பெண்கள், விமானத்தில் பயணிகளுக்கு உணவு பொருட்களை கொடுப்பது போல வசதிகளைச் செய்துள்ளனர். இரயிலின் முன் பகுதியில் தெற்கு ரயில்வே முத்திரைகள் எதுவும் இல்லை TN 43 என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில் ரயில் இயக்கப்படுகிறது. மேலும் ரயிலின் முன்புற பகுதியும் ஏற்கனவே இருந்த நீலமலையைக் குறிக்கும் ஊதாநிறம் மாறி ஆரஞ்சு நிறமாக மாற்றப்பட்டு உள்ளது. மேலும் வழக்கமாக இயக்கப்படும் மலைரயில் சேவை இதுவரை துவங்காத நிலையில், சிறப்பு கட்டண ரயில் சேவை மட்டும் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
கட்டண ரயிலை மொத்தமாக தனியாருக்கு வாடகைக்கு விடுவதன் மூலம், சிறப்பு கட்டண ரயில் கொண்டு வரப்பட்டு இருப்பதன் நோக்கத்தை சிதைப்பதுடன், தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் ஊட்டி ரயில் தாரைவார்க்கப்பட்டு உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக ரயில்வே துறை உதகை சிறப்பு மலை ரயிலை தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து 1,000 மில்லிமீட்டர் அளவு கொண்ட குறுகியப் பாதை வகை இரயில் போக்குவரத்து ஆகும். 1908 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இப்பாதையை உருவாக்கினார்கள். தெற்கு இரயில்வே இப்பாதையில் இரயில்களை இயக்குகிறது .இந்தியாவிலுள்ள ஒரே பற்சக்கர இருப்புப்பாதை தொடர்வண்டி நீலகிரி மலை தொடர்வண்டி மட்டுமேயாகும். முன்பு நாம் பயணித்த இரயில் பார்வையில் உள்ளது.
கருத்துகள்