பழைய வடார்காடு மாவட்டம் திருப்பத்தூர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் பிரபு தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சேகர், ஆய்வு மாணவர்களான சரவணன், தரணிதரன், சந்தோஷ் அடங்கிய குழு திருப்பத்தூரையடுத்த ஆண்டியப்பனூரில் கள ஆய்வில் சோழர் கால இடங்கைத்தள சித்திரமேழிக் கல்வெட்டை
க் கண்டெடுத்தது
குறித்துப் பேராசிரியர் பிரபு தனது கருத்தாக ..
''திருப்பத்தூரை யடுத்த ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கமருகே விவசாய நிலத்தில் கள ஆய்வு நடந்தது புதைந்த நிலையில், ‘சித்திரமேழி’ கல்வெட்டு இருப்பதைக் கண்டெடுத்தோம். இது 3 அடி அகலமும், ஆறரை அடி நீளமும் கொண்டது. இதன் மேற்புறம் திருமகள் உருவம் பொறிக்கப்பட்டு, பக்கவாட்டிலும் 2 முழு உருவ யானைகள் துதிக்கையில் கலச நீரைத் திருமகள் மீது பொழிவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
யானைகள் கார்மேகங்களாகவும், திருமகள் பூமாதேவியாகவும் கருதப்படுகிறது. இவை வளமைக் குறியீடுகளாகும். யானைகளுக்கு மேல் 2 பக்கங்களிலும் சாமரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கரண்ட மகுடம் அணிந்த பாத பீடத்தின் மீது இடது கால் மடித்து வைத்த நிலையில் வலது காலைத் தொங்கவிட்டப்படி திருமகள் காட்சியளிப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருமகளின் பாதத்துக்கு கீழே 2 முக்காலிகள் மீது பூரண கும்பக் கலசங்கள் வைக்கப்பட்டுள்ளதன் அருகே இரு அழகிய குத்துவிளக்குகளும், அதன் கீழே ஒரு யானை அங்குசம், முரசு, குரடு, ‘வளரி’ (பூமராங்) ஏர் கலப்பை, கொடிக் கம்பம் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளதனைத்தும் போர்ப்படை, விவசாயம், தொழில் குறிப்பதாக அமைந்துள்ளது. அக் காலத்தில் மன்னர்களால் அங்கீகரிக்கப்பட்ட வாணிகம் சார்ந்த குழுவினர் இந்த 3 படைகளையும் வைத்திருக்க அரசால் அனுமதிக்கப்பட்டதாகவும் சிற்ப வேலைப்பாடுகளுக்குக் கீழே 10 வரிகள் கொண்ட எழுத்துப் பொறிகளுடன் உள்ள இக்கல்வெட்டில் காணப்படுகிறது.
தனியார் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டு பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கச் சோழனின் ஆட்சிக்காலத்தில் 24 ஆம் வருடம் பொறிக்கப்பட்டதாகத் தெரிகிறது. முதலாம் குலோத்துங்கச் சோழன் காலம் பொதுஆண்டு 1070 ஆம் ஆண்டு முதல் க 1120 ஆம் ஆண்டு வரை ஆட்சிக் காலம் அவ் வகையில் இக்கல்வெட்டானது பொது ஆண்டு 1094 ல் பொறிக்கப்பட்டதாக இருக்கும்
திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் குறிப்பிடத்தக்க இக் கல்வெட்டினைத் தமிழகத் தொல்லியல் துறையினர் மீட்டு உரிய முறையில் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதே இவகளது கோரிக்கையாகும்''.என பேராசிரியர் முனைவர் பிரபு தெரிவித்துள்ளார்.
கருத்துகள்