வி.கே.சசிக்கலா நடராஜன் நாளை தமிழகம் வர உள்ளார்
வருகையை முன்னிட்டு கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள நுழைவு வாயில் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியில் கூடுதலாக சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தமிழக எல்லையிலிருந்து சசிகலா தங்கவிருக்கும் தி.நகர் இல்லம் வரை 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க அமமுகவினர் திட்டமிட்டுள்ளனர். கிண்டியிலிருந்து ஜெயலலிதா நினைவிடம் சென்றால் மேலும் 17 இடங்களிலும், இல்லையெனில் மேலும் 7 இடங்களிலும் சென்னைக்குள் வரவேற்பு அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது வருகை காரணமாக பிரசாரத்தை ரத்து செய்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி
வி.கே.சசிகலா நடராஜன் வருகையை முன்னிட்டு கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்த நிலையில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் பிரச்சாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டம் வழியாக சசிகலா நடராஜன் தமிழகம் வருவதால், அந்த சமயத்தில் அப்பகுதியில் பிரசாரம் மேற்கொண்டால் ஏதேனும் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் முதல்வரின் பிரசாரத் திட்டத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதா விவரம் அறிந்தவர்களின் தகவல்.""வஞ்சினம் கூறுதல்"
வி.கே. சசிகலா நடராஜன் அன்றைக்கு சமாதியில் சபதம் செய்தததை பார்த்தவர்களுக்கு ஒன்றும் புரிந்திருக்காது. அதற்கு பெயர் வஞ்சினம் கூறுதல்
என்னையோ, என் குடும்பத்தையோ, என் நாட்டையோ அழித்த ஒருவன் மீது நான் போர் தொடுத்து, அவன் முற்றாக அழிந்தபின் மீண்டும் நான் இந்த இடத்திற்கு வருவேன். அப்படி இல்லை என்றால் நான் இன்ன கதிக்கு ஆளாவேன் என்று சமாதியிலோ, தெய்வத்தின் முன்போ, நாட்டின் முன்போ நின்று அறைந்து கூறுவது தான் வஞ்சினம் கூறுதல்.
அது புறநானூற்றில் இருக்கிற, தமிழருடைய அடிப்படை பண்பாடு. அந்தப்பழக்கம் இப்போது இல்லை. அது போர் சமூகத்திற்கு உரிய பண்பாடு. வழிவழியாக போர் செய்கிறவர்களுக்கு இந்த வஞ்சினம் கூறுதல் என்ற பண்பு இருக்கும். வி.கே. சசிகலா நடராஜனுக்கும் அது பழக்கத்திலேயே, இரத்தத்திலேயே இருக்கிறது." என முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா பேசியுள்ளார்.
பகைவரது மதிலை அழித்த மன்னன் தனது வாளைப் புண்ணிய நீராட்டுவான். முடிசூடித் தானும் புண்ணிய நீராடுவான். முடிபுனைந்த நாளை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடுவான்.வஞ்சியார் எனப்படும் வஞ்சி மாலை அணிந்த வீரர்கள் பகைவரது நாட்டு எல்லையுள் புகுந்து போருக்கு அடியிடுவர். ஊரை நெருப்பிட்டுக் கொளுத்துவர். ஊர் மனைகளில் கொள்ளையும் இடுவர். கரும்பும், நெல்லும் செழித்த வயல்களில் நெருப்பு மூட்டி அழிப்பர். நீர் தேக்கி வைத்த குளம் முதலியவற்றின் கரைகளை உடைத்துவிடுவர். உழிஞை மறவர் பகைவரது கோட்டைகளை இடித்துத் தரை மட்டமாக்கிக் கழுதை ஏர் கொண்டு உழுவர்; கவடு விதைப்பர். மற்றொரு வகையில் இரு திறத்து மன்னரும் தும்பைப் பூச்சூடி போருக்குச் செல்லுங்கால் போர் ஊருக்குள் நடைபெறாமல் குறிப்பிட்ட ஒரு போர்க்களத்தில் நடைபெறும். இரு திறத்துப் படைகளும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் இரு திறத்தாருக்குமே மிக்க அழிவு ஏற்படும்படைவீரர்களான மறவர்கள் தம் அரசர் முன்னும் பகை மறவர்களின் முன்னும் நெடுமொழி (தற்பெருமை) கூறிக் கொள்வர். தனது மாமன்னனுக்குத் தன்னுடைய மேம்பாட்டை வீரன் ஒருவன் தானே எடுத்து உரைப்பது நெடுமொழி கூறல் எனப்படும். மன்னர்கள் போர் தொடங்கும் முன் வஞ்சினம் மொழிவர். வஞ்சினம் என்பது 'இன்னது செய்வேன் நான். அவ்வாறு செய்யேனாயின் இன்னன் ஆகுக' என்று வலிய சினத்தில் கூறும் சொல் ஆகும்.சங்க காலத்தில் தமிழர் போர் மரபுகள் அறப்போர் முறையைச் சார்ந்ததே ஆகும். அகம், புறம் என வாழ்வை இரண்டாகப் பகுத்து புறம் என்று போர்முறைகளுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். அவர்களது போர்முறை நேர்மையாக இருந்தது. காலை சூரிய உதயத்தின் போது, முரசறைந்து போர் தொடங்குவர். சூரியன் மறையும் வரை மட்டுமே போர் நடைபெற்றது. பின் முரசறைந்து போரை நிறுத்துவர். எத்துனை நாள் போராயினும் இதுவே வழக்கானது. பகைவர் ஆயுதத்தை இழந்த போதும், போரில் தோற்றோடும் போதும் அவர் மேல் படை செலுத்தாத அறநெறி இருந்தது. அவர்களுக்கு தகுந்த வாய்ப்பளிக்க மறுநாள் போர் செய்தனர். ஓடி ஒளிந்தாரைக் கொல்லாமல் அவர்கள் வரும் வரை காத்திருந்து போர் புரியும் வீரம் இருந்தது. இறந்தோருக்கு இரங்கும் குணம் இருந்தது.இலக்கியத்தில் பதில் தந்த பழ.கருப்பையா கூற்று உண்மை தான் அது பலவாறு வரலாற்றிலும் உண்டு.
அப்பாவின் திடீர் மரணத்தையொட்டி பாண்டிய இளவரசன் நெடுஞ்செழியனுக்கு அரியணை ஏறியே ஆகவேண்டிய அவசர நிலை, பாலகர்கள் அணியும் ஐம்படைத் தாலி எனும் அணிகலனைக் கூட இன்னும் காலிலிருந்து கழற்றியிருக்கவில்லை. அதற்குள் குருவி தலையில் பனங்காய் போல பெரும் அரசப் பொறுப்பு, அவனும் தட்டிக்கழிக்கவில்லை. விளையாட்டுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு வையம் ஆளும் பொறுப்பை துணிச்சலாக ஏற்றுக்கொண்டான்.
மதுரை
பாண்டிநாட்டு அரியணையில் பச்சிளம் பாலகனா! எதிரிகளுக்கெல்லாம் கொண்டாட்டம். பட்டொளிவீசிப் பறக்கும் பாண்டியரின் கயற்கொடியை கம்பத்தோடு வெட்டிச்சாய்க்க இதைவிட சிறந்த தருணம் கிடைக்குமா? பாண்டியன் பாலகனாய் இருந்தாலும் அவன் படை பெரிதல்லவா! எனவே ஏழுபேர் சேர்ந்தார்கள். இரண்டு முடியுடை பேரரசர்கள், ஐந்து குறுநில மன்னர்கள்…
சோழ மன்னன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, வேளிர் நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் இப்படி எழுவர்…இந்த எழுவரும் தனக்கு விரோதமாக எழுவர் என்பதை செழியன் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்கவில்லை. ஒற்றர் மூலமாக செய்தி வருகிறது. வெகுண்டெழுகிறான், கண்ணில் தீக்கனல் தெறிக்க புலவர் சான்றோர் முன்னிலையில் வஞ்சினம் கூறுகிறான்.
வஞ்சினம் கூறுதல் என்றால் என்ன? வேறொன்றுமில்லை நம் தமிழ்பட ஹீரோக்கள் இண்டர்வெல்லுக்கு முன்னாக தொடையில் தட்டி சபதமெடுப்பார்களே அதுதான் இது. நான் இதை செய்யவில்லையென்றால் எனக்கு இன்னின்னது நேரட்டும் என்று ஆன்றோர் அவையில் கூறுவதுதான் வஞ்சினம். செழியன் கூறிய வஞ்சினம் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
என்னைப் பழிக்கிறயா, என் மண்ணைப் பழிக்கிறாயா! உன் கூட்டாளிகளோடு சேர்ந்துவா!
உன்னை சிதறடிப்பேன், எல்லோரையும் சிறைப்பிடிப்பேன், என் காலின்கீழ் மடங்கடிப்பேன்
இல்லாவிட்டால்….!
கையாலாகாத காவலனென என் மக்கள் என்னை இகழட்டும், எம் புலவர் இந்த மண்ணைப் பாடாதொழியட்டும்
இரவலர்க்கு வழங்க இயலா வறுமை என்னைப் பிடிக்கட்டும்…
பாண்டியன் பகைவர் சவாலை ஏற்றவுடன் பாண்டியநாடு போர்க்கோலம் பூண்டது, சிறுவனான நெடுஞ்செழியன் தன் குலத்துக்குரிய வேப்பந்தளிரை சூடிக்கொண்டு, முற்றுகை இட்டிருக்கும் பகைவரை தகர்க்கப் போகும் மன்னர்கள் அணியும் மரபுப்படி உழிஞைக் கொடியையும் அணிந்தவனாய் படைக்கு தலைமையேற்க, கயல்கொடி ஏந்தி, போர்முரசொலிக்க நாட்டின் வடக்கு எல்லையை நோக்கி சீறிக்கிளம்பியது பாண்டியர் பெரும்படை.
கிரேக்க ரோமானியப் படைகளையொத்த கட்டுக்கோப்பையும் ஒழுங்குமுறையையும் கொண்ட படை என்று பாண்டியர் படைக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு, வீரர்கள் போர்ச்சீருடை அணிந்திருந்தார்கள். கார்மேகங்கள் மோதி இடியிடிப்பது போல களிறுகளும் இரதங்களும் ஒன்றுடன் ஒன்று மோத சோழ, பாண்டிய நாட்டின் எல்லையருகே மூண்டது அந்தப் பெரும்போர்
ஒரு மதயானையைப் பாலகன் என்று கருதிய பிழை அப்போதுதான் எதிரிகளுக்கு புரிந்தது. நெடுஞ்செழியன் களமாடிய காட்சியைக் கண்ட பாண்டிய வீரர்களே வெலவெலத்துப் போனார்கள். சிறுவன் என்று நினைத்த தம் வேந்தனே வெறிகொண்ட வேங்கைபோல வேட்டையாடுவதைக் காணும்போது இரத்தத்தில் வீரம் செறிந்த பாண்டிய வீரர்களைச் சொல்லவும் வேண்டுமா? எதிரிகளை சிதறடித்தார்கள். எதிரிகள் புறமுதுகிட்டு சோழநாட்டின் எல்லைகளுக்குள் புகுந்தார்கள்.
அந்த இடத்துக்குப் பெயர் தலையாலங்கானம்…
அந்தந்த நாட்டு மன்னர்களே தத்தம் படைக்கு தலைவராக நின்று போரிட்டனர். அதுவரையில் வராமல் தாமதமான பிற படைகளும் வந்து சேரவே, தன்னுடைய எல்லைக்குள்ளே பாண்டியன் படையும் வந்துவிட்டமையால் எப்படியாவது சுற்றி வளைத்துத் தொலைத்துவிடலாம் என்று நம்பினான் சோழன். மற்றவர்களுக்கும் உற்சாகமூட்டினான். ஆனால் அவன் கனவு பலிக்கவில்லை.
பாண்டியன் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதலாவது வேளிர் படையினர் சோர்ந்து போனார்கள். “எவனுக்காகவோ வந்து இவன்கிட்ட நாம ஏன் தர்ம அடி வாங்கணும்?!” என்ற எண்ணம் அவர்களில் பலரை பற்றிப் பிடிக்கவே சோழ மன்னன் கொடுத்த உற்சாக உபதேசங்களையெல்லாம் காதில் வாங்காமல் பின்னங்கால் பிடறியில் அடிக்க படையை விட்டு ஓடிப்போனார்கள். சோழர் படையைத் தவிர கடைசிவரை ஈடுகொடுத்து அடிக்கும் துணிவு வேறு யாருக்கும் வரவில்லை. சேரன் ஆயுதங்களையெல்லாம் போட்டுவிட்டு தலை தப்பியது தம்புரான் புண்ணியம் என்று ஓடி ஒளிந்து கொண்டான்
கடைசியில் சோழனுக்கு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை, கன்னிப்போரில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி செழியனுக்கு! … வீரர்கள் அவனைத் தோளில் தூக்கிவைத்து ஆரவரித்துக் கொண்டாடினர். சோழனும் பிறரும் பணிந்து அளித்த பொருள்களுடனும், அங்கங்கே வாரிக் கொண்ட பண்டங்களுடனும் வீரர்கள் மதுரைக்குத் திரும்ப மாநகரம் விழாக்கோலம் பூண்டது.
ஏற்கனவே அரசனை அணுவணுவாக இரசித்து பாடல் வடிக்கும் புலவர்களை கேட்கவும் வேண்டுமா! மாங்குடி மருதனைத் தலைவராகக் கொண்ட புலவர் சங்கத்தினர் பாண்டியனை தமிழ் மழையில் நனைத்தார்கள். பாடல்களை எழுதிக் குவித்தார்கள். நெடுஞ்செழியனுக்கு “தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்” என்ற புகழ்ப் பெயர் சூட்டப்பட்டது.
போரில் தீரம் காட்டிய வீரர்களுக்கு பரிசுகளையும் பட்டங்களையும் வாரிவழங்கினான் செழியன், படைத்தலைவர்களுக்கு ஏனாதி, நம்பி என்ற சிறப்பு பெயர்கள் சூட்டப்பட்டது. போரில் விவேகம் காட்டி வழிநடத்திய மந்திரிகளுக்கு காவிதி எனும் பட்டம் அளிக்கப்பட்டது.
கருத்துகள்