பிரதமர் அலுவலகம் இஸ்ரேல் பிரதமர் மேதகு பெஞ்சமின் நெதன்யாஹூவுடன் பிரதமர் பேசினார்
பிரதமர் திரு நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் மேதகு பெஞ்சமின் நெதன்யாஹூவுடன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2021 ஜனவரி 29 அன்று புதுதில்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிரான தனது கடும் கண்டனத்தை அவரிடம் தெரிவித்தார். இஸ்ரேலிய தூதர்களுக்கும், தூதரகத்திற்கும் பாதுகாப்பு அளிக்க இந்தியா அதிகபட்ச முக்கியத்துவத்தைத் தரும் என்றும், குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டப்படி தண்டிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் திரு.நெதன்யாஹூவிடம் உறுதியளித்தார். இந்த விசயத்தில் இந்திய- இஸ்ரேலிய பாதுகாப்பு முகமைகள், நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து இரண்டு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.
தத்தமது நாடுகளில் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட இரு தலைவர்களும், இதில் மேலும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆலோசித்தனர்.
கருத்துகள்